Thursday, November 11, 2010

# இளங்கோ அடிகளை கேவலப் படுத்தும் பரத முனிவர் கட்டுக் கதை





மாமல்லபுரம் அருகே உள்ள பட்டிப்புலம் கிராமத்தில் தமிழக அரசு கொடுத்த ஐந்து ஏக்கர் நிலம் மற்றும் பல்வேறு வசதிகளோடு நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணிய்ம் ஒரு கலாச்சார மையம் உருவாக்குகிறார்.

அப்படி அரசின் துணையோடு அதுவும் திராவிட அரசின் துணையோடு என்று அழைக்கப் முதல்வரின் பல்வேறு விதமான ஆசிகளோடு அமைக்கப் படும் அந்த கலாச்சார மையத்துக்கு பரதர் -- இளங்கோ கலாச்சார மையம் என்று பெயர் வைக்கப் பட்டிருப்பது உணமையான தமிழின உணர்வுக்கு மிகப் பெரிய அவமானத்தை இழைக்கும் செயலாகவே அமைகிறது

பரதர் - இளங்கோ கலாச்சார மையம் என்ற பெயருக்கு எந்த வலுவான எதிர்ப்பும் கிளம்பாமல் திராவிடர்கள் தோல் தடித்துக் கிடப்பதைப் பார்க்கும்போது திராவிட சிந்தனையின் நிலமை இன்னும் பரிதாப நாளைக்குப் போய் விட்டது என்பதை தெளிவாக உணர முடிகிறது .

அதுவும் அந்த மையத்தின் கட்டுமானப் பணிகள் துவக்க விழாவில் பேசிய முதல்வர் "பரதம் என்றாலே பரதர். பரதர் உருவாக்கியதுதான் பரதம் பரதர் தான் அதனுடைய குரு என்ற ஒரு பழைய கால வழக்கம் பாரதம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது;" என்று கூறி விட்டு "அதிலே நாம் வேறுபடவில்லை; நான் அதை மறுக்கவில்லை." என்று பேசியதுதான் இன்னும் கொடூரம் .

பரதம் என்றாலே பரதர்தானா? பரதத்தை உருவாக்கியது பரதர்தானா? பரதர்தான் அதன் குருவா?

பொதுவாக கிராமத்து வீடுகளில் பயன்படுத்தப் படும் ஒரு பெரிய கல்லை திண்டுக்கல் என்று கூறுவார்கள் . ஆக எந்த ஊரில் அந்தக் கல் இருந்தாலும் அது (திருச்சியை அடுத்த ) திண்டுக்கல் என்ற ஊருக்கு தான் உர்மையானது என்று கூறுவது எப்படியோ அப்படித்தான் பரதக் கலையை உருவாக்கியவர் பரதர் என்று கூறுவதும் .

சரி பரதக் கலையின் குருவாகக் கூறப் படுகிற --இன்று 'திராவிட' இயக்க முதல்வரும் வேறுபடாமல் மறுக்காமல் ஒத்துக் கொண்டிருக்கிற --அந்தப் பரத முனிவரின் 'கதை'யைப் பார்ப்போமா?

த்ரேதாயுகத்திலே மக்கள் இயற்கை சீற்றத்தினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சமயத்திலே இந்திர பகவானாகப் பட்டவர் , பிரம்ம தேவனிடத்திலே மக்களுடைய சந்தோஷத்திற்காக நாட்டிய சாஸ்திரத்திரத்தை படைக்கும்படி கேட்டுக் கொண்டார். பிரம்ம தேவனாகப் பட்டவர் ரிக்வேதத்தின் பாடலையும், சாம வேதத்தின் ராகத்தையும், யஜூர்வேதத்தின் நடிப்புத் திறனையும், அதர்வண வேதத்தின் ரசத்தையும் ஒன்றாகப் பிணைத்து நாட்டிய சாஸ்திரத்தை இயக்கினார். பிரம்ம தேவன் பரத முனிவருக்கு அந்த நாட்டிய சாஸ்திரத்தைக் கொடுத்தார். பரத முனிவர் அந்த சமயத்தில் வெகு சிறப்பாக நாட்டிய சாஸ்திரத்தை மக்களிடம் பரப்பினார்.

இப்படி ஏதோ பன்றிக் காய்ச்சல் பரவியது போல சொல்லப் படுகிறது இந்தக் கதை .

நமக்கு பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் முனிவர்கள் எனறால் பெண்களை நெருங்க விடாதவர்கள் . அல்லது ஒரு மனைவியுடன் வாழ்பவர்கள் (ரிஷிபத்தினி ) என்று கூறப் படுகிறது தவிர முனிவரின் அருகில் சென்றதாலேயே சபிக்கப் பட்ட பெண்களைப் பற்றியும் புராணங்கள்தான் கூறுகின்றன . அப்படி இருக்க ஆண்களை விட பெண்களே அதிகம் பயன்படுத்துகிற பரதக் கலையை உருவாக்கியவர் ஒரு முனிவர் என்று கூறுவதை விட நகைச்சுவை என்ன இருக்க முடியும் ?

தவிர இந்த பரதன், பரதர் என்ற சொற்கள் பல 'கதாபாத்திரங்களில்' இருக்கிறது . இங்கே ஒரு பரத முனிவர் . ராமாயணத்தில் ராமனின் தம்பியாக (பாதுகை வைத்து ஆண்ட) பரதன் . அவன் பெயரால்தான் நம் நாடு பரதன் என்று அழைக்கப் படுவதாகவும் ஒரு கதை . ( கானகத்தில் இருந்து வந்து பல்லாண்டு பல்லாண்டுகள் சிறப்பாக ஆண்ட ராமன் பெயரை நாட்டுக்கு வைக்காமல் பதினான்கு ஆண்டுகள் மட்டும் ஆண்ட அந்தக் கால ஓ . பன்னீர் செல்வத்தின் பெயரை வைத்தது என்ன நியாயம்?)

கேட்டால் பரதன் என்ற பெயர் வட இந்தியாவின் நில அடையாளம் . சமஸ்கிருதத்தின் மொழி அடையாளம் என்பார்கள் . இதுவும் கட்டுக் கதைதான் .

இந்த பரதன் என்ற பெயரே பரதவர் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து போனதுதான் .

பரதவர் ?

மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளிடம் ஒரு செல் தாவரம் எது என்றால் கிளாமிடாமோனாஸ் என்று சரியாகச் சொலும் . ஒரு செல் உயிரி எது எனறால் அமீபா என்றும் சரியாகச் சொல்லும் . கிளாமிடா மோனாஸ் அமீபா இரண்டும் உருவான இடம் நீர் ... அதாவது கடல் !.

கிளாமிடாமோனாஸ் அமீபா இந்த இரண்டும் பல செல் உயிர்களாகப் பல்கிப் பெருகி உருவான உயிர்களின் சிகரம்தான் மனித இனம் . ஆக நீர்நிலைகளில் உருவான உயிர்களில் இருந்தே மனித இனம் வளர்ந்தது . ஆக ஆதி மனித இனம் என்பது ஏதோ ஒருவகையில் நீரோடு கடலோடு கடல் சார்ந்த தொழில்களோடு சம்மந்தப் பட்டிருக்க வேண்டும் என்கிறது அறிவியல் .

கடலும் கடல் சார்ந்த பகுதிகளையும் ஓட்டி வாழ்கிற மக்களுக்கு சுருக்கமாக சொல்லப் போனால் மீனவர்களைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்லின் பெயர் பரதவர் என்பதாகும் . தமிழினத்தின் மூத்த குடி நாகர்கள் என்று அழைக்கப் படுபவர்கள் . (இவர்களும் கடலோடு வாழ்ந்தவர்கள்தான் )

பரதவர் என்ற இனம் பற்றி வரலாறு என்ன கூறுகிறது என்று பார்போமா ?

'பரதவர், பரவர், அல்லது பரதர் என்போர், தமிழகத்தின் மிகப் பழமையான சாதியினர். பாண்டிய வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள் அவர்களே. மீன் கொடியினை கொண்டு முதல் தமிழ் அரசை தோற்றுவித்தவர்கள் பரதவர்கள்தான் .தமிழ் மூவேந்தர்களில் பழமையானவர்களாக கூறப்படும் இனம் பாண்டிய இனமே . பண்டைய என்ற சொல்லுக்கு பழைய என்று ஒரு பொருள் உண்டு . இந்த பண்டைய என்ற சொல்லே 'பாண்டிய ' என்ற சொல்லில் இருந்து உருவானதுதான் . இவர்களின் சின்னம் கடல் வாழ் உயிரான மீன் . (கடலில் இருந்து உயிர்கள் உருவாகி மனித இனம் வரை வளர்ந்தது என்ற அன்றைய தமிழர்களின் குறிப்பாக பாண்டியர்களின் அறிவியல் சிந்தனைதான் மீனை அவர்கள் கொடியில் அமைக்க வைத்தது )

இயற்கை சீற்றங்களால் எல்லை மாறுதல்கள் ஏற்பட்டபோது இந்த பரதவர்கள் போர் மறவர்களாக மாறி மற்ற அரசுகளை வீழ்த்தி அரசு நிலைநாட்டியவர்கள். பல நூற்றாண்டுகளாக பரவர்களாகவும் மறவர்களாகவும் நாடாண்டவர்கள் பரத பாண்டியர்கள்.

பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன. இவர்கள் சந்திர வம்சத்தினர். பரத நாடு முழுமையையும் ஆண்ட பரத மன்னன் இவர்கள் வழிவந்தவனே.(இந்த பரதனைதான் ராமாயணத்தில் ராமனின் தம்பியாக சித்'தி'ரித்து வட இந்திய சம்ஸ்கிருத அடையாளமாக மாற்றி விட்டார்கள்)

பண்டைய தமிழகம் ஐவகைத் திணைப் பிரிப்பைக் கொண்டது. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என அவை சொல்லப்படும். நெய்தல் கடலும் கடல் சார்ந்த பிரதேசமுமாகும். இங்கு வாழும் மக்களை பரதவர்கள் என இலக்கியங்கள் குறிக்கும்.

பரதவர்கள் பல்வேறு கடல் சார் தொழில்களில் ஈடுபட்டதன் மூலம் பொருளீட்டினார்கள். மீன்பிடி, முத்து சங்கு குளித்தல், உப்பு விளைவித்தல், சங்கறுத்தல், கடலோடுதல், கடல் வாணிபம் எனப் பல தொழில்களால் பல உட்பிரிவுகளாகஇவர்கள் பிரிந்தார்கள். அவ்வுட் பிரிவுகளின்படி தொன்மங்களையும் ஐதீகங்களையும் உருவாக்கிக் கொண்டார்கள்.

பரதவர்களிடையே குருகுலம், வருணகுலம், குகன் குலம், கங்கை நாட்டார், சிந்து நாட்டார் , சிவன் படையினர் போன்ற தொன்மப் பெயர்கள் வழக்கில் உண்டு.(சிந்துச் சமவெளி எழுத்துக்களில் தமிழ் வார்த்தைகள் இருப்பது நிறுவப்பட்டதை ஞாபகப் படுத்திக் கொண்டால் கங்கை நாட்டார் சிந்து நாட்டார் போன்ற பெயர்களின் காரணம் விளங்கும் . இவர்களின் சிலருக்கும் பின்னால் ஆரிய நாட்டார் என்று பெயர் கொடுத்து குழப்பியது வட மொழி இலக்கியங்கள்)

துறைமுகங்களில் வாழும் பரதவர்களை பட்டினவர்கள் என அழைப்பர். பரதவர்கள் குருகுலம் என்ற ஐதீகத்தையும் கொண்டிருந்தார்கள். குரு குலத்தில் இருந்து உதித்த இன்னொரு குலமே வருண குலம் ஆகும். பட்டினவர் கடற்படை வீரர்களாக அரச படைகளில் வணிக கணங்களின் கடற்படையில் பணி செய்தார்கள்.

பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். முன்நாட்களில் பாண்டியர் என்றும், படையாட்சியர், வில்லவராயர், பூபாலராயர், பாண்டியதேவர், சிங்கராயர், என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் இன்று பெர்னாண்டோ, மச்சாடோ, மச்காறேன்ஹாஸ், ரோட்ரிகோ என்ற போர்த்துக்கீசிய பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். பரதகுலத்தினர் பேரரசர் குலத்தவர் என்பதற்கான பல அடையாளங்கள் அகழ்வாராய்ச்சிகளிலும் கிடைத்த வண்ணம் உள்ளன.'

இதுதான் பரதவர்களின் வரலாறு .

இந்த பரத(வ)ர் என்ற பெயர்தான் ராமாயண காப்பியம் வரை போனது .

இதே பரதர் என்ற பெயர்தான் பின்னாளில் எழுதப் பட்ட கதைகளில் திரேதாயுகம் அந்த யுகம் இந்த யுகம் என்றெல்லாம் போய், பரத முனிவர் என்ற கற்பனைப் பாத்திரமாக மாறியது .

இருந்து விட்டுப் போகட்டும் . அது கதையாக இருப்பதில் யாருக்கும் பேதமில்லை .

ஆனால் பரத நாட்டியக் கலையை உருவாக்கியவரே பரதர் என்ற ஒரு முனிவர்தான் . அதன் குருவே அவர்தான் என்று கூறுவதும் அதை பலரும் வேறுபடாமல் மறுக்காமல் ஒத்துக் கொள்வதும்தான் அநியாயம் . (அது என்னவோ தெரியவில்லை . ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வரலாற்றை முடிந்தவரை நிரூபித்து எழுதினால் மறுப்பவர்கள் கூட , எப்போது என்றே கூற முடியாத துவாபர யுக, திரேதா யுகக்கதைகளை மட்டும் அப்படியே நம்பி கன்னத்தில் போட்டுக் கொள்கின்றனர். கொடுமை )

ஆக, கண் முன்னே விரியும் பரதம் என்ற அற்புதக் கலையை, இருந்திருக்க வாய்ப்பே இல்லாத ஒரு கற்பனைக் கதாபாத்திர முனிவர் எப்படி உருவாக்க முடியும் . ?

அப்படியானால் பரதக் கலையை உருவாக்கியது யார் ?

பரதம் எனும் மாபெரும் கலையை இவர்தான் உருவாக்கினர் என்று ஒரு தனிப்பட்ட நபரை - அவர் என்னதான் முனிபுங்கவராக இருந்தாலும் --- புராணத்தின் பெயரால், கட்டுக் கதைகளின் பெயரால் அடையாளம் காட்டுவதை விட அந்தக் கலையை கேவலப் படுத்தவே முடியாது . அப்படிக் கேவலப் படுத்துவதற்குப் பதில் அந்தக் கலையை ஒட்டு மொத்தமாக அழித்தே விடலாம் .

ஆதாரங்கள் இலக்கியங்களின் வரலாறுகளின் அடிப்படையில் இன்றைய அளவில் இருந்து பின்னோக்கிப் போனால், பரத நாட்டியக் கலையின் ஆதார அடையாளமாக ஒருவரைக் குறிப்பிட வேண்டும் என்றால், அது சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகளையே குறிக்கும் .

தமிழின் ஆதிகாவியம் என்று போற்றப்படுவது சிலப்பதிகாரம். இதன் சிறப்பை அறிந்து, பாரதியார் “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்றார். காவியங்கள் பொதுவாக அரசனைப் பற்றியோ அல்லது தெய்வத்தைப் பற்றியோ அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சிலப்பதிகாரம் தமிழின் முதல் காவியமாக மட்டும் திகழாமல், உலக அளவில் சாதரண நிலை மாந்தர்களை வைத்து எழுந்த முதல் காவியமும் கூட. அதுவும், பெண் மகளை வைத்துப் பாடபட்ட முதல் காவியமுமாகும்.

ஐம்பெரும் காப்பியங்கள் வரிசையில் இதுவும் ஒன்று. அந்தக் காவியத்தை படைத்த இளங்கோவடிகள்தான், மாதவி கதாபாத்திரத்தின் மூலம் பரதக் கலையை சிலப்பதிகாரக் காவியத்தில் ஏற்றி இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுக்கும் கொண்டு வந்தவர் .

நாட்டிய சாத்திரக் கூறுகள் , அரங்க அமைப்பு , அதற்கான அணிகலன்கள் , உடைகள் என்று பரதக் கலையின் உடல் பொருள் ஆவி எல்லாம் சிலப்பதிகாரத்தினால்தான் சாகாவரம் பெற்றது .

அதிலும் கூட இளங்கோ அடிகள் "எனக்கு இந்த நாட்டியக் கலை அறிவை துவாபர யுகத்திலே இந்திரன் அருளினான் , பிரம்மன் பீச்சிக் கொடுத்தான் "என்று கதை விடவில்லை . இத்தனை காலமாக சோழ நாட்டு மக்களிடத்தில் சிறப்பாக இருக்கிற பரத சாத்திரத்தை தொகுத்துச் சொல்லி இருக்கிறேன் " என்று நேர்மையாக ஒத்துக் கொள்கிறார் இளங்கோ .

சோழ நாட்டுத் தலைநகரமான காவிரிப் பூம்பட்டினத்தில் காவிரியாறு கடலோடு கலக்கும் இடம் , மற்றும் கடற்கரைகள் , ஆற்றங்கரை இவற்றில் பவுர்ணமி நிலவில் 'இந்திர விழா' கொண்டாடுவது பழங்காலத்தில் கால கால வழக்கம் . அங்கு உருவாகி வளர்ந்ததுதான் பரதமும் கர்நாடக இசையும் .

கரை நாடக இசை என்ற தமிழ் சொல்லே கர்நாடக இசை என்று திரிந்தது . ( சமஸ்கிருதத்தில் கர்ணா எனறால் இனிமை .அடதி எனறால் காது . எனவே காதுக்கு இனிமையான இசை என்பதால் கர்நாடக இசை என்று பின்னாளில் ஒரு இட்டுக் கட்டு விளக்கம் கொடுக்கப் பட்டது . 'கர்ண'கொடூரம் என்பதும் சமஸ்கிருதம்தான் . அது வேறு எந்த சமஸ்கிருதத்தில் இனிமை என்று போரில் தருகிறதோ தெரியவில்லை )

பரதமும் அப்படி கரை நாடகக் கொண்டாட்டங்களில் உருவானதுதான் . அதனால்தான் காவிரிப் பூம்பட்டினத்தை வைத்து உருவான சிலப்பதிகாரத்தில் பரதநாட்டியம் ஒரு முக்கிய அங்கமாக இடம் பிடித்தது . தவிர நாட்டிய நன்னூல் என்று பரத நாட்டியத்துகான ஒரு தனி நூல் பற்றியே குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள் .

சிலப்பதிகாரத்துக்கும் முன்பிருந்தே, கூத்தர், விறலியர், கோடியர், வயிரியர், பாணர், போன்றவர்கள் சங்ககாலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழ் மண்ணில் நாட்டியக் கலையைக் காத்து வளர்த்து வந்திருக்கின்றனர்.

நாட்டிய சாஸ்திரம் என்ற ஒரு நூலை பரத முனிவர் எழுதினார் . அதனால் அவர்தான் பரதத்தின் குரு என்று சிலர் கூற , அதைத்தான் மறுக்கவும் இல்லை வேறுபடவும் இல்லை என்கிறார் முதல்வர்

உண்மையில் பரத முனிவரின் அந்த நாட்டிய சாத்திரம் தமிழில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட நாட்டிய நன்னூலின் மொழிபெயர்ப்பு நூல்தான் .

சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் அவிநயம் என்பது பலவகைக் கூததுகள் விளக்கும் ஒரு நூல் எனக் கூறியுள்ளார். அவிநயர் என்னும் சொல்லுக்குக் கூத்தர் எனப்பொருள் இருப்பதைச் சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது. . எனவே தொல்காப்பியர் காலத்திலேயே அவிநயர்களால் அவிநயம் என்னும் நாட்டிய நன்னூல் எழுதப்பட்டது எனத் தெரிகிறது

இளங்கோவடிகள் குறிப்பிடும் பரத சாத்திரத் தொகுப்பு நூல் இந்த அவிநயம்தான் . .(பரதத்தின் அடிப்படை அபிநயம் பிடித்தல் . அவிநயம் என்ற தமிழ் சொல்லே அபிநயம் என்று வடமொழிக்குப் போனது .தொல்காப்பியர் காலத்திய அவிநயம் இல்லாது போனாலும் சங்ககாலத்தில் சாத்தனார் இயற்றிய கூத்தநூல், அறிவனார் இயற்றிய பஞ்சமரபு, பஞ்ச வாணர் இயற்றிய நாடகத்தமிழ் போன்ற பல நாட்டியக் கலை நூல்கள் தொல்காப்பியர் காலத்து அவிநயத்தின் வழி நூல்களாகத் தோன்றின. சிற்றிசை, பேரிசை, இசை நுணுக்கம், பெருநாரை, பெருங்குருகு போன்ற ஏராளமான நூல்கள் முத்தமிழ் வளர்க்கும் நூல்களாகத் திகழ்ந்திருக்கின்றன. கூத்த நூலும், பஞ்ச மரபும் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. பரதர் தன்னுடைய நாட்டிய சாஸ்திர நூலில் கூறும் 108 கரணம் எனும் தாண்டவ நிலைகள் தமிழுக்குப் புதியன அல்ல.

பரத முனிவர் பற்றி திரேதா யுகக் கட்டுக்கதை இருக்கிறது என்பதை முன்னரே பார்த்தோம் . பின்னாளில் அதை நம்பாமல் யாரவது கேள்வி கேட்பார்கள் என்பதாலோ என்னவோ மெதுவாக வரலாற்றிலும் பரத முனிவர் பெயரை திணிக்கப் பார்த்திருகிரார்கள் .
ஆனாலும் பாவம்!
.
அதாவது , பரத முனிவர் பல்லவர் காலத்தில் கி.பி. நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று ஒரு கருத்து பரத முனிவரை ஏற்பவர்களாலேயே கூறப் படுகிறது .

ஆனால் பரதக் கலையை நான் உருவாக்கவில்லை என்று நேர்மையாக ஒத்துக் கொள்ளும் இளங்கோவடிகளின் காலம் ?

கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் அரசன் குடக்கோ நெடுஞ்சேரலாதன் எனும் சேரப்பேரரசன் . அவனது தலைநகரம் வஞ்சி மூதூர் . சேரப்பேரரசன்.அப் பெருவேந்தனுக்கு இரண்டு பிள்ளைகள்.சேரன் செங்குட்டுவன் மற்றும் இளங்கோ அடிகள் . ஆக சிலப்பதிகாரம் உருவான கால கட்டம் இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டு . அப்படிப் பார்த்தாலும் பரத முனிவர் பின்தங்கி விடுகிறார்

பரத முனிவர்தான் பரதக் கலையை கண்டு பிடித்தார் என்று பொய்யாக நிறுவ இளங்கோவடிகள் வாழ்ந்த காலத்தோடு கொண்டு போய் பரத முனிவரை திணித்த 'மேதைகள் '...பாவம் சிலப்பதிகாரத்தை படிக்காமல் அதற்குள் அவசரப் பட்டுத் திணித்து விட்டார்கள் .

சிலப்பதிகார காலத்துக்கு எல்லாம் முந்தைய தொல்காப்பியர் தனது மெய்ப்பாட்டியலில் பரதக்கலையின் உயிரோட்டமான அபிநய இயல்புகளை மெய்ப்பாடு என்கிறார். நாட்டியக் கலையை நாட்டிய மரபு எனக் குறிப்பிட்டிருக்கிறார். எனவே தொல்காப்பியர் காலத்திற்கும் முற்பட்டது பரதக்கலை. ஆக இளங்கோ அடிகளே பரதக் கலையின் பார்வையாளன்தான் எனும்போது அவருக்குப் பின்னால் வந்ததாக கூறப் படுகிற(அதுவும் கற்பனையாக கூறப் படுகிற ) பரதர் எப்படி பரதக் கலையை உருவாக்கி இருக்க முடியும்?

ஆக பரதர் என்ற கற்பனைப் பாத்திரத்தின் பெயரால் பரதக் கலை ஆராய்ச்சிக்காக ஒரு மையம் அமைப்பது மடமை .

எல்லாம் சரிதான் . ஆனால் இன்று பரதக் கலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் அதில் அதிகம் ஈடுபடுவதும் ஒரு குறிப்பிட்ட சமூகத்த்தினர்தானே'''? அப்படி இருக்க பரதத்தை உருவாக்கியது பரத முனிவர்தான் என்று அவர்கள் சொல்வது ஏன் உண்மையாக இருக்கக் கூடாது என்று தோன்றலாம் . .

அவர்களின் ஈடுபாட்டை மதிக்கலாம் . போற்றலாம் . அதற்காக இவ்வளவு அறிவியல் வளர்ந்த காலத்திலும் வரலாற்றில் பொய் வரக் கூடாது . தவிர பரதம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் புழக்கத்தில் முடங்கியதற்கும் காரணம் உண்டு .

கோவில்களில் அக்காலத்தில் தேவதாசிகள் எனப்படும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் பெண்கள் இருந்தார்கள். இவர்கள்தான் பரதக் கலையை வளர்த்தவர்கள். பரதத்தை முறையாக ஆடி வந்தவர்கள்இவர்கள்தான் . இந்தக் கலை இன்றும் உயிர்ப்புடன் இருப்பதற்கு நாம், அக்கால தேவதாசிகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.கோவில்களில் பலர் பார்க்க ஆடுவது தேவதாசிகள் எனறால் , மற்ற பெண்களும் வீட்டில் பொழுதுபோக்காகவும் கலை வளர்ப்பாகவும் பரதம் ஆடினர். தவிர பரதம் ஒரு நல்ல உடற்பயிற்சியும் கூட .

சோழ மன்னர்கள் காலத்தில் பரத நாட்டியம் கொடி கட்டிப் பறந்தது. இவர்களின் ஆட்சிக்காலத்தை, பரதத்தின் பொற்காலம் எனலாம். (பரதம் உருவானதே சோழ நாட்டில் இருந்துதானே )பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்திலும் பரத நாட்டியம் செழித்தது பரதத்திற்கு சதிர் என்றும் ஒரு பெயர் உண்டு. சதிராட்டம் என்றும் இது அழைக்கப் பட்டது

முன்பு இருந்த பரத நாட்டியத்திற்கும், இப்போதைய வடிவத்திற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருந்தன.இன்றைய பரத வடிவத்தை, தஞ்சாவூர் நால்வர் என அழைக்கப்படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோர் உருவாக்கினார்கள். இவர்கள் முறைப்படுத்திய பரதம்தான் இன்று ஆடப்பட்டு வருகிறது.

அன்று பரதம் மிகப் புனிதமாக கருதப்பட்டது. பரதக் கலைஞர்களுக்கு ராஜ மரியாதைதான். பொன்னும், பொருளும் மன்னர்களால் வாரி வழங்கப்பட்டது. நல்ல ஆதரவும் இருந்தது. ஆனால் இந்த கோலாகலத்திற்கு முகலாயர்கள் வடிவில் முடிவு வந்தது.

முகலாய மன்னர்களின் வரவிற்குப் பிறகு கோவில்களில் பரதம் ஆடுவது தடைபட்டது. பெர்சிய நாடுகளிலிருந்து நடனக்காரர்களை முகலாயர்கள் இந்தியாவுக்குள் கொண்டு வந்தனர். இதனால் தேவதாசிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களது நடனத்தைப் பார்க்க ஆதரவு குறைந்தது.

முகலாயர்கள் போய், வெள்ளையர்கள் வந்தனர். நிலைமை இன்னும் மோசம் ஆனது. மன்னர்கள், ஜமீன்தார்களின் ஆதரவும் பரதத்துக்கு குறைந்தது. தேவதாசிகளுக்குக் கிடைத்து வந்த ஆதரவு நின்று போனது. வயிற்றுப்பாட்டுக்குத் திண்டாட்டம். வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களை விபச்சாரத்திற்குத் தள்ளியது. கலை என்ற பார்வையிலிருந்து வேறு மாதிரியாக பரதம் பார்க்கப்பட்டதால் பெண் பிள்ளைகள் பரதம் கற்பதை நிறுத்தினர்.

19-ம் நூற்றாண்டின் இறுதியில் பரதம் இழிவாகப் பார்க்கப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இந்த நிலை நீடித்தது.

வெள்ளையர் ஆட்சிக்குப் பிறகு நிலைமை மாறியது. பரதத்தின் உண்மை வரலாறு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது.

அதே நேரம் பல்வேறு சமூகப் பெண்களின் வாழ்க்கை மற்றும் சமூக மாற்றங்கள் காரணமாகவும் உழைப்புக்கு அதிகம் நேரம் ஒதுக்க வேண்டிய சூழல்கள் ஏற்பட்டதாலும் பரதம் தமிழ் சமூகத்தில் இருந்து விலகியது . இந்நிலையில் உடல் உழைப்பு அதிகம் தேவைப் படாத வாழ்க்கை வாழும் சமூகப் பெண்கள் பரதத்தை கையில் எடுத்தனர் .

(இந்த மாற்றத்தால் பரதத்தை உருவாக்கியது பரத முனிவர் என்ற கட்டுக் கதை உண்மையாகிவிடாது . )

இன்று பரதர் -- இளங்கோ ஆராய்ச்சி மையம் உருவாக்கும் பத்மா சுப்பிரமணியம் பரத நாட்டியக் கலைஞராக ஆனதும் இந்த வகையில்தான் . அவரது பரதத் திறமை பாராட்டுக்குரியதுதான்

ஆனால் அவர் பரதக் கலையை உருவாக்கியது பரத முனிவர்தான் என்ற பொய்யை தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார் . தவிர பரதர் பெயரால் ஒரு பெரிய ஆராய்ச்சி மையத்தை ஏற்படுத்தி இந்த கட்டுக் கதையை உண்மையாக்கும் முயற்சியிலும் வெகு காலமாக முட்டி மோதிக் கொண்டிருந்தார் பத்மா .

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மேற்கண்ட நோக்கத்திற்காக பத்மாவுக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கித் தந்திருந்தார். ஆனால் பிறகு ஆட்சிக்கு வந்த முதல்வர் கருணாநிதி, பரதமுனிவர் பெயரால் அமையவுள்ள அந்த மையம் ஆரியப் பண்பாட்டைத்தான் பரப்பும் என்று தமிழறிஞர்கள் கூறியதை ஏற்று, ஜெயலலிதா கொடுத்த அனுமதியை நீக்கினார்.

இப்பொழுது அதே முதல்வர் கருணாநிதி பரதமுனிவர் பெயருடன் இளங்கோ அடிகள்; பெயரையும் சேர்த்து, பத்மா சுப்பிரமணியத்தின்; பரதா – இளங்கோ ஆசியப் பண்பாட்டு நிறுவனத்திற்கு முன்பு ஜெயலலிதாவில் கொடுக்கப் பட்டு , தன்னால் அனுமதி மறுக்கப் பட்ட அதே ஐந்து ஏக்கர் நிலத்தை ஒப்படைத்துள்ளார். எனறால் .....

ஏன் இந்த பல்டி என்பதுதான் புரியவில்லை .

பத்மா சுப்பிரமணியம் தமிழ்ப் பண்பாட்டு மரபும் வாழ்வியலும் சமற்கிருதத்திலிருந்து வந்தவை என்று வஞ்சகமாக வாதிடுபவர்

.மதுரையில் 1981ல் நடந்த 5 வது உலகத் தமிழ் மாநாட்டில் “இளங்கோ அடிகள் பரத முனிவரிடமிருந்து கூத்துக் கருத்துகளைப் பெற்றுத் தான் சிலப்பதிகாரத்தில் எழுதினார்.” என்று பேசி “ஆய்வுரை” வழங்கிய போது அங்கிருந்த நீதிபதி மகாராஜன் , டாக்டர் சாலை இளந்திரையன் டாக்டர் இளவரசு முதலிய தமிழறிஞர்கள் பலர் எதிர்த்துப் பேச பாதியிலேயே உரையை முடித்துக்கொண்டு உட்கார்ந்தவர்தான் இந்த பத்மா சுப்பிரமணியம் .

இப்பொழுது இளங்கோஅடிகள் பெயரை பரதர் என்ற பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டதன் மூலம் கூத்தர், விறலியர், கோடியர், வயிரியர், பாணர், போன்றவர்களால் சங்ககாலத்திற்கு முன்பிருந்தே வளர்க்கப் பட்டு , தொல்காப்பியர் , அவிநயர் , இளங்கோவடிகள் , சாத்தனார் , அறிவனார் , பஞ்ச வாணர் , சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு , ஆகிய காலத்தை வென்ற மேதைகளால் பல நூற்றாண்டுகளாக மேம்படுத்தப் பட்ட கூத்து இலக்கணங்களையும் தமிழரின் நாட்டிய மரபையும் மறுத்து நாட்டியக் கலை ஆரியத்திற்கே உரியது என்ற ஆராய்ச்சியை ஊக்கப்படுத்த பத்மா சுப்பிரமணியம் இந்த நிறுவனத்தைத் தொடங்குகிறார்.

பரத முனிவர் என்ற பெயரில் ஒருவர் இருந்ததே இல்லை என்றும் தமிழின் கூத்துக்கலை இலக்கணங்களை சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துக் கொண்ட ஆரியர்கள் பரத முனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திரம் என்று பெயர் மாற்றிக் கொண்டார்கள் என்றும் பரதமுனிவர் என்பது வெறும் கற்பனைப் பெயர் என்றும் இதற்கு முன்பே தமிழறிஞர்களும் ஆய்வாளர்களும் பலமுறை கூறியுள்ளனர்.

17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பிறந்ததாகக் கூறப்படும் இராமன் பிறந்த இடத்தைக்கண்டு பிடித்து விட்டதாகக் கூறி ஆரியப்பண்பாட்டை நிலைநாட்டுகிறார்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்த மாமன்னன் இராசராசன் மறைந்த இடத்தை கண்டுபிடிக்க முடிய வில்லையே” என்று அண்மையில் கூறிய , முதல்வர் இப்போது 'பரத'ப் பொய்யில் இருந்து வேறுபடவும் இல்லை மறுக்கவும் இல்லை என்று கூறுவது என்ன திராவிட சித்தாந்தமோ , தெரியவில்லை.

பரத முனிவர் பெயருடன் துவங்கும் பத்மா சுப்பிரமணியம் தொடங்க உள்ள பரத முனிவர் நிறுவனத்திற்கு முதல்வர் கருணாநிதி அரசு நிலத்தை ஒப்படைக்கக் கூடாது . பத்மா சுப்ரமணியத்தின் தமிழ் விரோத போக்கிற்கு துணை போகக் கூடாது

உண்மையில் பரதக் கலை பற்றிய ஒரு ஆராய்ச்சி மையத்திற்கு இளங்கோ அடிகள் பெயரை வைத்தது சரிதான் . கூடவே துணைக்கு இன்னொரு பெயர் வேண்டும் எனறால் அவிநயர்கள் பெயர் வைப்பதே நியாயம் .

இல்லை இல்லை (பரதர் பெயர் போல )ஒரு கற்பனைப் பெயரும் கூடவே அவசியம் வேண்டும் எனறால் மாதவி பெயரையே கூட வைக்கலாம் . அப்போதுதான் அரசு அந்த மையத்திற்கு உதவ வேண்டும் .

'உங்களுக்கும் எங்களுக்கும் பொதுவாக பரதர் -- இளங்கோ என்று பெயர் ' என்று சப்பைக் கட்டு கட்டுகிறார் முதல்வர் . குறைந்த பட்சம் இளங்கோ -- பரதர் என்று பெயர் வைத்திருந்தால் கூட மனது சமாதானப் பட்டிருக்கும் .

ஆனால் முழுக்க முழுக்க கற்பனையான பரதர் என்ற முனிவரின் பெயரை முதலில் வைத்து ஒரு மாபெரும் காவியத்தைத் தந்து இன்னும் காவியமாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இளங்கோ அடிகளின் பெயரைப் பின்னுக்கு தள்ளியதன் மூலம் ,

தமிழ் உணர்வோடு திராவிட சித்தாந்தத்தையும் பின்னுக்குத் தள்ளி 'சரித்திரம் ' படைத்துள்ளார் முதல்வர் கருணாநிதி .



---------------------------------------------------------------------------------------------------------

Sunday, October 3, 2010

# எந்திரன் -- லாஜிக்கும் மேஜிக்கும்


முதலில் ஒரு விஷயம் . விமர்சனம் செய்வதும் கருத்துக் கூறுவதும் எளிது .ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை படைப்பும் உழைப்புமே பெரிது . எனவே ,.எந்திரன் படம் பார்த்தவர்கள் மட்டும் அல்ல ... இந்த விமர்சனத்தைப் படித்துக் கொண்டிருப்பவர்களும் கூட , முதலில் ஒரு முறை மானசீகமாக எழுந்து நின்று ஆசிய சினிமாவின் மாபெரும் தொழில் நுட்பக் கலைஞனாக உயர்ந்து நிற்கும் இயக்குனர் சங்கருக்கு மனம் உவந்த கைதட்டல்களைத் தருவோம் .

கலாநிதிமாறன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ராய் நடிக்க ஷங்கர் இயக்கியிருக்கும் எந்திரன். இந்திய சினிமாவின் நவீன திரைப்படத் தொழில் நுட்பத்தின் உச்சம் ...!.

ஒரு விஞ்ஞானி (ரஜினி ) ஓர் இயந்திர மனிதனை அதாவது ரோபோவை (எந்திர ரஜினி ) உருவாக்குகிறார் . .அது அச்சு அசலான மனிதனாக ரஜினி போலவே இருக்கிறது. நாடுகளுக்கு இடையே போர் நடக்கும்போது நம் நாட்டு ராணுவ வீரர்களின் உயிர்கள் பலியாவதைத் தடுத்து அதற்கு பதிலாக இது போல இயந்திர மனிதர்களை நிறைய படைத்து ராணுவத்துக்கு தர வேண்டும் என்பதே விஞ்ஞானி ரஜினியின் நோக்கம் .

தீவிரவாத செயல்களுக்கு தற்கொலைப் படையாக மனிதர்களுக்கு பதில் இது போன்ற ரோபோக்களைப் பயன்படுத்தி பேரழிவுகளை உருவாக்க முயல்கிறது ஒரு மேற்கத்திய தீவிரவாத கும்பல் . விஞ்ஞானி ரஜினியின் குருநாதரும் சீனியர் விஞ்ஞானியுமான இன்னொருவர் , அந்த தீவிரவாதிகளுக்காக தானும் ஒரு ரோபோவை உருவாக்க முயல்கிறார் . அவரால் முழு வெற்றி பெற முடியவில்லை .

இந்நிலையில் விஞ்ஞானி ரஜினி , தான் உருவாக்கிய ரோபோவை அகில இந்திய ஆராய்ச்சித் துறையின் பரிசோதனைக்கு அனுப்புகிறார் . ரஜினியின் ரோபோ ராணுவத்துக்கு போகக் கூடாது என்று விரும்பும் அந்த வில்லத்தனமான சீனியர் விஞ்ஞானி, சோதனையின் போது ரோபோ ரஜினிக்கு குழப்பமான கட்டளைகள் கொடுத்து விஞ்ஞானி ரஜினியையே கத்தியால் குத்த முயல்வது போல செய்து விடுகிறார் . "இது ராணுவத்துக்கு உதவாது . கட்டளைகள் மூலம் இதை குழப்பினால் அது நமது ராணுவத்துக்கே ஆபத்தாக முடிந்து விடும் . " என்று கூறி ரோபோ ரஜினியை நிராகரித்து விடுகிறார் அந்த சீனியர் விஞ்ஞானி . . பிறகு தனிமையில் விஞ்ஞானி ரஜினியிடம் தீவிரவாதிகளுக்காக பேரம் பேசுகிறார் .

அதை மறுக்கும் விஞ்ஞானி ரஜினி , மனிதர்களால் காப்பாற்ற முடியாத ஒரு பெரும் தீவிபத்தில் இருந்து பலரை காக்க ரோபோ ரஜினியை அனுப்புகிறார் . பலரை காப்பாற்றும் ரோபோ , எரியும் ஒரு வீட்டின் தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை நிர்வாண நிலையில் அப்படியே காப்பாற்றி டிவி கேமராக்கள் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்த , அவமானம் தாங்காமல் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள் . மீண்டும் ரோபோ ரஜினி தகுதியற்றதாக குறிப்பிடப் படுகிறது .

உடனே விஞ்ஞானி ரஜினி ரோபோ ரஜினிக்கு மனித உணர்ச்சிகளை கற்றுத் தர .....வந்தது பிரச்னை .!

விஞ்ஞானி ரஜினியின் காதலியான ஐஸ்வர்யாராயை ரோபோ ரஜினியும் காதலிக்க , பிரச்னை பெரிதாகிறது . ஒரு நிலையில் விஞ்ஞானி ரஜினி கோபம் கொண்டு ரோபோ ரஜினியை பார்ட் பார்ட்டாக உடைத்து கொண்டு போய் சென்னையின் மிகப் பெரிய குப்பையில் கொட்ட, அங்கு வரும் அந்த வில்லத்தனமான சீனியர் விஞ்ஞானி மீண்டும் ரோபோ ரஜினியை அசெம்பிள் செய்து அதன் மூளையில் கொடூர குணங்களை உருவாக்கும் ஒரு மைக்ரோ (மேக்ரோ ?) சிப்பை வைத்து விட , ரோபோ ரஜினி கொடூர வில்லன் ரஜினியாகிறது .

ஐஸ்வர்யாராயை கடத்திக் கொண்டு போய் கட்டாயத் திருமணம் செய்து கொள்ள முயல்வது உட்பட பல தவறான செயல்களைஅது செய்ய, அதை தடுக்க விஞ்ஞானி ரஜினியும் அரசாங்கமும் முயல்கின்றனர் . அதனால் வெறி பிடித்த அந்த வில்லன் ரோபோ ரஜினி, பல கதிகலக்கும் செயல்களை செய்ய , முடிவு என்ன என்பதுதான் ....

எந்திரன் . !

விஞ்ஞானி ரஜினி ரோபோ ரஜினியை உருவாக்கும் விதம் மற்றும் ஒரு கற்பனையை உண்மை என்று நம்ப வைக்கும் அளவுக்கு விஞ்ஞானத் தொழில் நுட்பமும் கலை இயக்கமும் பின்னி விளையாடும் அந்த ஆரம்பக் காட்சிகளில் ஆரம்பிக்கிறது ஷங்கரின் சாகசம் . அதுவும் ரோபோ ரஜினிக்கான இயந்திர மாடலை அப்படியே ரஜினியின் முகம் போன்ற மாடலில் செய்திருப்பது .... மற்றும் அச்சு அசல் ரஜினியின் முகம் போன்ற மாஸ்க், அந்த டை(dye) , பேட்டன் (pattern), ரிப்ளிகா (replica ) அதோடு ரோபோவின் உடலாக காட்டப் படும் இயந்திர பாகங்கள்....

ஆகா ! இது தமிழில் இயக்கப் பட்டிருக்கும் முதல் ஹாலிவுட் படம் !.

தமிழில் அர்த்தம் மாற்றி பொருள் கூறப் படும் வார்த்தைகளை வைத்து (உதாரணமாக மாமூல் கேட்கும் போலீஸ்காரர் 'வெட்டு' என்று சொன்னால் லஞ்சம் கேட்பதாக அர்த்தம். ஆனால் தன்னிடம் அப்படிக் கேட்ட போலீசின் கையை ரோபோ ரஜினி கத்தியை எடுத்து வெட்டி விடுகிறது ) செய்கைகளிலும் , வசனங்களிலும் கொண்டு வந்திருக்கும் நகைச்சுவைகள் , (வசனம் சுஜாதா , ஷங்கர் , கார்க்கி ) கதைக்கு பொருத்தமான வெகு பிரஷ்ஷான ரசனைக்குரிய நகைச்சுவை விருந்து .

பாடல்கள் ஒவ்வொன்றும் படமாக்கப் பட்டிருக்கும் விதத்தில் ஜொலிக்கின்றன . 'காதல் அணுக்கள்..' பாட்டில் லொக்கேஷனும் , 'இதய்ம் முளைத்த இயந்திரம்..' பாட்டில் ஐஸ்வர்யாவின் நடனமும் , 'கிளிமாஞ்சாரோ.....' பாட்டில் காஸ்டியூமும், பிறந்த நாள் நடன இசையில் ரஜினியின் நடனமும் (கிராபிக்ஸ் வித்தை ஏதும்.....?) அரிமா அரிமா பாடலில் நவீனத்துவம் கலந்த அரங்கமும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அசத்துகின்றன. பிரம்மாண்டப் பிரம்மாதம் ! பாடல்கள் பரவாயில்லை . கிளிமாஞ்சாரோ செம ஹிட் .. பின்னணி இசை சுமார் ரகமே. (ராகமே ?)

லோக்கேஷன்களை காட்டுவதிலும் கிராபிக்சுக்கு பொருத்தமான காட்சிகள எடுத்துக் காடுவதிலுமே ஒளிப்பதிவின் பணிபெரும்பாலும் முடிந்து விடுகிறது .

ரோபோ ரஜினி பிரசவம் பார்க்கும் அந்தக் காட்சி பிரம்மிப்பு கலந்த நெகிழ்வு . இந்தப் படத்திலேயே மிகக் சிறந்த காட்சி அதுதான் .

சின்னச் சின்ன காட்சிகளில் கூட சங்கரின் சிரத்தை சிலிர்க்க வைக்கிறது . உதாரணமாக , விஞ்ஞானி ரஜினிக்குப் போட்டியாக ரோபோ ரஜினியும் சேர்ந்து ஐஸ்வர்யாவுக்குப் பிறந்த நாள் பரிசு தரக் கிளம்பும் காட்சியில், அது தன் தலைக்கு செட் பண்ணிப் பார்க்கும் விதவிதமான ஹேர் ஸ்டைல் .... உங்கள் உழைப்பை நினைக்கும்போது எங்களுக்கே களைப்பாக வருகிறது ஷங்கர் .

"இடைவேளை முடியும்போதே ஹாலிவுட் என்ன ஹாலிவுட் .....நம்ம ஆட்கள் அதற்கும் மேலே போய் விட்டார்கள். " என்ற பெருமிதம் ஏற்பட்டுவிடுகிறது . அதுவும் அந்த சீனியர் விஞ்ஞானி பாத்திரப் படைப்பு இதுவரை இந்திய சினிமா கண்டிராத நூறு சதவீதம் முழுமையான வில்லன் கதாபாத்திரப் படைப்பு .

சங்கரின் கைவண்ணத்தில் புதுமையாக வனையப் பட்டிருக்கிறார் ரஜினி . அப்படியே ஐஸ்.

ஆனால்.....

இடைவேளைக்குப் பின்பு ,மேற்சொன்ன எந்த சந்தோஷமும் முழுமையாய நீடிக்கவில்லை .

ரோபோ ரஜினி ஐஸ்வர்யாவைக் காதலிக்க ஆரம்பித்த உடன் விஞ்ஞானிக்கும் ரோபோவுக்கும் ஏற்படும் பிரச்னைகளை அதற்கு உட்பட்ட ஒரு தளத்தில் களத்தில் விறுவிறுப்பான அக்ஷன் கலந்தவிஞ்ஞான ஜனரஞ்சகப் படமாகக் கொண்டு போய் அந்த அளவில் இப்போது படத்தில் உள்ள அந்த கிளைமாக்சுக்குப் போய் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் .

ரோபோ ரஜினிக்குள் ரெட் சிப் வைக்கப் படுகிறது ..அதனால் அவர் கொடுங்க்லனாக மாறுகிறார் என்பதில் ஆரம்பிக்கிறது வில்லங்கம் .

ரஜினியை கொஞ்சம் அதிரடியான வில்லத்தனமாகக் காட்டுவது ரசிகர்களால் ரசிக்கப் படும் என்று ஷங்கர் நினைத்திருக்கலாம் . ஆனால் அதைத்தான்ஷங்கர் சிவாஜி படத்திலேயே பண்ணியாச்சே . அடுத்த படத்திலேயே உடனேயே மீண்டும் அது எதற்கு ?(கிட்டத்தட்ட கெட்டப்பும் கூட ஒரே மாதிரி )

தவிர தன் படங்களில் யாராவது ஒருவரை ஒரு காட்சியில் நிர்வாணமாகக் காட்டி (அதை கிராபிக்ஸ் மூலம் மறைத்தும் ) விடும் ஷங்கரின் செண்டிமெண்ட் இந்தப் படத்திலும் கூட தொடர்கிறது .

திரை முழுக்க நூற்றுக் கணக்கான ரஜினிகள் வரும் காட்சிகளை விட , அரிமா அரிமா பாடலின் கடைசியில் ஒரே காட்சியில் பலப் பல ஐஸ்வர்யாராய்கள் வரும் அந்தக் காட்சி கொள்ளை அழகாய் இருக்கிறது .

வில்லன் ரோபோ ரஜினிகளின் படை அதி நவீன ஆயுதங்களோடு போராட அவர்களை எதிர்க்கும் காவல்துறையை , ஏதோ கும்பல் கும்பலாக வந்து எலெக்ட்ரோ மேக்னட் பேட்டில் சிக்கி பொறிந்து போகும் கொசுக்கள மாதிரி காட்டுவது , அறிவிக்கப் படாத நகைச்சுவை .
நூற்றுக்கணக்கான ரஜினிகள் சேர்ந்து எடுக்கும் அந்த பல மாதிரியான இயந்திர உருவங்கள் வடிவங்கள் , கொஞ்ச நேரம் மட்டுமே காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் . ஆனால் என்னதான் அது சிறப்பான தொழில் நுட்ப உத்தியாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சிய அமுதமாகவே போய் விடுகிறது .

படத்தின் இரண்டாம் பகுதியில் வரும் ஆக்ஷன் காட்சிகள் , நாம் இதுவரை பார்த்த பிரம்மாண்டமான ஹாலிவுட் படங்களான ரோபோ (இயந்திர மனித உருவகம் ), மேட்ரிக்ஸ் (ஒரே காட்சியில் தோன்றும் நூற்றுக் கணக்கான வில்லன்கள் ) , டெர்மினேட்டர் தி ரெய்ஸ் ஆப் மெசின்ஸ் உள்ளிட்ட பல பாகங்கள் (ரஜினிகள் சேர்ந்து எடுக்கும் பல இயந்திர உருவங்கள் , வடிவங்கள் , உதைத்ததும் தரை நொறுங்குவது , சாலையின் மேன் ஹோலில் இருந்து சாலையை இடித்து எழும் பிரம்மாண்டமான உருவங்கள் போன்றவை , ) காட்சில்லா (இயந்திர உருவம் கார்களை விழுங்குவது ) போன்றவற்றின் சிறந்த காட்சிகளின் தொகுப்பாகவே இருப்பது வருத்தமான விஷயம் .

கடைசியில் ரோபோ ரஜினி, தானே தற்கொலை செய்து கொள்வது போல தன் உடலின் ஒவ்வொரு பாகமாய் கழட்டிக் கொண்டே வருவது நெகிழ்ச்சியான கவிதை.

.இப்படியாக முதல் பாதிப் படம் அவ்வளவு புதுமையாக பிரஷ்ஷாக நூறு சதவீத லாஜிக்கோடு அமைந்திருக்க , இரண்டாவது பாதிப் படமோ , சலிக்க வைக்கும் அளவு மேஜிக் செய்வதோடு , அடிக்கடி லோ பேட்டரி ஆகி தடுமாறும் ரோபோ ரஜினி போல தடுமாறிவிட்டது . படத்திலாவது ரோபோ ரஜினி எப்படியாவது மீண்டும் சார்ஜ் ஏற்றிக் கொள்கிறது . ஆனால் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு யாருமே கடைசிவரை முழுசாக சார்ஜ் ஏற்றாததுதான் சோகம் .

ஆயிரக் கணக்கான கன்னிகள் கற்பழிக்கப் பட்டு இன்னும் முள்வேலி முகாம்களில் முடங்கிக் கிடக்கும்போதும், என்னவோ இன்னும் கண்ணி வெடிகள்தான் உலகத்தின் பயங்கரமான ஆயுதம் என்பது போல காட்டி யாரையோ தாக்கி யாரையோ குளிர்விக்கும் தந்திரத்துக்கு ஷங்கரும் பலியாகி இருக்க வேண்டாம் . கண்ணி வெடிகளுக்கு எதிராக செயல்பட்ட ஆயுதங்கள் அவற்றை விட பயங்கரமானவை அல்லவா? (உலகம் முழுக்க கண்ணி வெடிகள் பயன்படுத்தப் படுவதைத்தான் சொன்னோம் என்று சமாதானம் சொல்லலாம் என்றாலும் கூட, உண்மை இதுதானே )

ரோபோ ரஜினியை ரிக் வேதத்தையும் ஆசாரக் கோவையையும் படிக்க வைக்கிறார் ஷங்கர் . ஆனால் திருக்குறளையும் , புறநானூற்றையும் படிக்க வைக்க அவருக்கு தோணவில்லை . ஒரு வேளை அப்படிப் படிக்க வைத்திருந்தால் அடுத்தவரின் ....அதுவும் தன்னை உருவாக்கிய மனிதரின் காதலி மீது ஆசைப் பட்டிருக்காது என்கிறாரா ? அதுவும் சரிதான் .

இரண்டாம் பகுதிப் படத்தின் திரைக்கதைக்காக இன்னும் நிறைய அக்கறை எடுத்து இருந்தால், ஹாலிவுட் அண்ணாந்து பாத்திருக்கும் .

எந்திரன் ...

பாதி மந்திரன்,தந்திரன் !.

ஆனால்... எல்லோரையும் ஈர்க்கும் சந்திரனோ , சுந்தரனோ இல்லை
.

Saturday, September 25, 2010

#இதுதாண்டா பிசினஸ் !


ரசிகர்களே ! ரோட்டில் நீங்கள் நடக்கும்போது எதிர்பாரதவிதமாக தடுக்கி விழுந்தால் , தலை மாட்டில் மூன்று தியேட்டர்களிலும் கால் பக்கம் நான்கு தியேட்டர்கள் தவிர இடது விலா எலும்பு பக்கம் இரண்டு தியேட்டரிலும் வலது விலா எலும்பு பக்கம் ஐந்து தியேட்டரிலும் எந்திரன் படம் ஓடலாம் .

தரையில் இருந்து எழும்போது ஜாக்கிரதையாக எழுங்கள் . ஏதாவது ஒரு தியேட்டரின் சன் ஷீல்டில் தலை இடித்து விடும் அபாயம் உண்டு

இதுதாண்டா பிசினஸ்
!

Friday, September 17, 2010

# மாரடைப்புக்கு சுய முதலுதவி




திடீரென்று ஏற்படும் நெஞ்சுவலி இடது கை வழியாக பரவியும் தாடை வரையும் தொடர்ந்தால்.......

அது மாரடைப்பு

---என்றதும் பயப்படத் தேவை இல்லை .

மருத்துவமான அருகில் இல்லையா ? பதட்டம் வேண்டாம் .

தொடர்ந்து தீவிரமாக இரும வேண்டும் .

முடிந்தவரை இரும வேண்டும் .

ஒவ்வொரு இருமலுக்கு இடையிலும் நன்றாக முடிந்தவரை மூச்சை இழுத்து விட வேண்டும் .

மூச்சை இழுத்து விடுவதால் நுரையீரலுக்கு ஆக்சிஜன் போகும் . இருமுவதால் ரத்த ஓட்டம் உயிரோடு இருக்கும் .

அப்படியே விரைந்து மருத்துவரிடம் போனால் , அவர் நிச்சயம் காப்பாற்றி விடுவார் .

இதயங்கள் வாழ்க !

Tuesday, September 14, 2010

# ஈசல் பூச்சியாகும் தமிழ்ப் படங்கள்


தியாகராஜா பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம் பற்றிக் கூறும்போது மூன்று தீபாவளிகளைக் கண்ட படம் என்று கூறுவார்கள் . அதாவது படம் வெளியான போது தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியிருக்கிறது அந்தப் படம்.

அதன் பின்னரும்கூட நூறுநாள் , நூற்றி ஐம்பது நாள் , வெள்ளிவிழா , பொன்விழா கண்ட படங்கள்தான் தமிழ் சினிமாவில் எத்தனை எத்தனை !

ஒரு நிலையில் இனி நூறு நாள் ஒரு படம் ஓடுவது எல்லாம் சாத்தியமில்லை என்ற நிலை வந்தபோது, படம் வெளியாகும்போதே அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு , மக்கள் காத்திருக்கத் தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கி , படம் பற்றிய எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்து வடிந்து விடுவதற்குள் குறுகிய காலத்திலேயே அவர்களைப் படம் பார்க்க வைத்து, லாபம் சம்பாதிக்கிற வழக்கம் வந்தது .

ஆனால் இன்று ?

மக்கள் கலைஞர் ஜெய்சங்கரை வெள்ளிக் கிழமை நடிகர் என்று ஒரு காலத்தில் சொல்வார்கள் . காரணம் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அவர் நடித்த படம் ஒன்று வெளியாகிக் கொண்டிருக்கும் . குறைவான பட்ஜெட்டில் தயாராகும் அவருடைய படங்கள் பெரும்பாலும் லாபம் கொடுத்தன. அவரது படங்களால் நஷ்டத்தை சந்தித்து ஒட்டாண்டியான தயாரிப்பாளர் என்று யாரும் இல்லை .

இன்று தமிழ் சினிமாவின் நிலை என்ன?

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் படங்கள் வெளியாகின்றன . வெள்ளிக்கிழமை புதுப் படம் என்ற அந்தஸ்தோடு களம் இறங்கி , இன்னும் சினிமாவை மட்டுமே முக்கியப் பொழுது போக்காக கொண்டிருக்கும் ரசிகர்காளால் சனிக்கிழமை கவனிக்கப்பட்டு , ஏதாவது ஒரு படம் பாப்போம் என்ற எண்ணத்தோடு ஞாயிற்றுக் கிழமை படம் பார்க்க வரும் ரசிகர்களை அடைந்து , அவர்களை ஏமாற்றி உதடு பிதுக்க வைத்து, திங்கள் கிழமை காலைக் காட்சியில் காற்று வாங்க ஆரம்பித்து தன் உயிர்க் காற்றை முடித்துக் கொண்டு விடுகின்றன இன்றைய பல தமிழ்ப் படங்கள் .

ஆம் !

ஈசல் பூச்சிகளின் வாழ்க்கை ஒரு நாள் . இந்த ஈசல் திரைப் படங்களின் வாழ்க்கை மூன்று நாட்கள் . அவ்வளவுதான் வித்தியாசம் .

இந்த வருடம் ஜனவரி முதல் முடிந்த செப்டம்பர் மாதம் வரை தமிழில் சுமார் அறுபது படங்கள் வெளியாகி இருக்கின்றன . இதில் ஏழு படங்கள் மட்டுமே லாபம் கண்டவை . இந்த வரிசையில் ஏழாவதாக வந்த படம் களவாணி .

தமிழ் சினிமாவுக்கு என்ன ஆச்சு? கொஞ்சம் ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது

ஒரு காலத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருந்தார்கள் .

தயாரிப்பாளர் எனறால் யார் ? பணம் போடுபவர் என்பீர்கள் . இதுவே தப்பு . பணம் போடுவதால் மட்டுமே ஒருவர் தயாரிபாளர் ஆகி விடலாம் என்ற நிலை வந்ததுதான் தமிழ் சினிமாவின் முதல் சாபக் கேடு .

அன்றைய தயாரிப்பாளர்களுக்கு சினிமா குறித்த சகல அறிவும் ஆற்றலும் இருந்தது . கதை அறிவு , படம் இயக்கும் ஆற்றல் எல்லாம் உண்டு . ஏ வி மெய்யப்பன் , மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் , எஸ் எஸ் வாசன் , எல் வி பிரசாத் , போன்றவர்கள் பல வெற்றிப் படங்களை இயக்கி தன்னை ஒரு வெற்றிகரமான இயக்குனராக நிரூபித்து விட்டு , ஒரு நிலையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் தயாரிப்பு பணிகளுக்கே நேரம் போதாத காரணத்தாலும் தயாரிப்பாளராக மட்டும் தங்களை சுருக்கிக் கொண்டவர்கள் . எனவே தங்கள் படத்தை உருவாக்கும் படைப்பாளிகள் பாதியில் தவறாகப் படத்தைக் கொண்டு போனாலும் படைப்பிலும் தலையிட்டு அதை சரிசெய்யும் திறமை அன்றைய தயாரிப்பாளர்களுக்கு இருந்தது .

முதலில் சரியான கதையை முடிவு செய்யும் ஆற்றல் , அடுத்து பொருத்தமான இயக்குனர் , பின்னர் சரியான நடிகர் நடிகைகள் , மற்ற கலை நுட்ப தொழில் நுட்ப கலைஞர்கள் என்று திட்டமிட்டு படம் எடுத்து அவர்கள் வென்றார்கள் . ஒரு வேளை சில படங்கள் தோற்றாலும் பெரிதாக கையைக் கடிக்காமல் பார்த்துக் கொண்டார்கள்

ஒரு நிலையில் தயாரிப்பாளர் என்று யாரும் இல்லாமல் போனார்கள் . தயாரிப்பாளர் என்ற பெயரில் திட்டம் உருவாக்குவோர் (ஆங்கிலத்தில் புரபோசல் மேக்கர் என்பார்கள் ) வந்தார்கள் . இவர்கள் எப்படியாவது ஒரு பிரபல நடிகர் அல்லது இயக்குனரின் கால்ஷீட்டைப் பெறுவார்கள். பின்னர் அந்த பிரபல நடிகரின் விருப்பப்படிய எல்லாம் நடக்கும் . கதையாவது மண்ணாங்கட்டியாவது . ! இந்த இடத்தில்தான் தயாரிப்பாளர்கள் சுணங்கிப் போனார்கள் .

பொதுமக்களின் ரசனைக்காக அல்லாமல் ஒரு தனிப்பட்ட நடிகரின் விருப்பத்துக்காக வைக்கப் படும் காட்சிகள் படத்தின் வெற்றிக்கு பாதகமானது .

அதன் பின்னர் தயாரிப்பாளர் என்பவர் பைனான்சியரின் கையாளாக மாறிப் போனார் . விநியோகஸ்தர் சொன்ன படியெல்லாம் ஆடி, கரைந்து போனார் .

இன்றைய பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பலர் எப்படிப் பட்டவர்கள் ? அவர்களுக்கு சினிமா பற்றிய புரிதலோ அறிவோ இல்லை . சரி இல்லாவிட்டால் பரவாயில்லை . பிறக்கும்போதே யாரும் சினிமா அறிவோடு பிறப்பதில்லை .

ஆனால் படம் தயாரிக்க என்று முடிவு செய்த உடன் , அனுபவப் பட்ட தயாரிப்பாளர் சினிமா பிரமுகர்களிடம் இருந்து அதை முறைப் படிக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வமோ .. குறைந்த பட்சம் நல்ல ஆலோசனை பெறவேண்டும் என்ற எண்ணமோ கூட அவர்களுக்கு . இல்லை

இப்போது படமெடுக்க வரும் பலருக்கு சினிமா நிரந்தரத் தொழிலே அல்ல . அவர்கள் வேறு ஏதாவது ஒரு தொழிலில் சம்பாதிக்கிறார்கள் . அவர்களுக்கு இருக்கும் சில பல அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அங்கு இருக்கும் வாய்ப்புகளை விட சினிமாவில் அது எளிது .என்று எண்ணுகிறார்கள் எனவே அவர்கள் படம் எடுக்க நினைக்கும்போதே படம் ஓட வேண்டும் என்பதை விட விரும்பிய ஆசைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதிலேயே குறியாக உள்ளனர் .

அவர்களுக்கு கதை என்று ஏதாவது ஒன்று வேண்டும் . இயக்குனர் என்று யாராவது ஒருவர் வேண்டும் . மற்றபடி ஆசைகள் நிறைவேறுவதே குறி .

அன்றைய தயாரிப்பாளர்கள் தான் கோடீஸ்வரராக இருந்தாலும் தன் படத்தில் பணியாற்ற வருபவன் ஓட்டை சைக்கிளில் வந்தாலும் திறமைகளுக்காக அவர்களை மதித்தார்கள் . முக்கியத்துவம் கொடுத்தார்கள் . ஏனெனில் அந்தத் தயாரிப்பாளர்களும் படைப்பாளியாக ஜெயித்துக் காட்டியவர்கள்தானே . எனவே அவர்களிடம் படைப்பாளிகளும் தன்னம்பிக்கையோடு பணியாற்ற முடிந்தது . படைப்பு மிளிர்ந்தது . வெற்றி கிடைத்தது .

ஆனால் இன்று படமெடுக்க வருபவர்கள் பலருக்கு படைப்பாளிகள் மீது மரியாதை இல்லை . நிஜ படைப்பாளிகளை மதிக்க வேண்டும் என்ற அவசியமும் அவர்களுக்கு இல்லை . நல்ல படைப்பாளிகள் அவர்களை நெருங்க முடிவதில்லை . ஒரு அறிமுக இயக்குனர் கதை சொல்ல வாய்ப்பு கேட்கும்போதே அவர்களை மேலும் கீழும் அலட்சியமாக பார்த்தால் அவன் எப்படி தன்னம்பிக்கையோடு கதை சொல்வான் ?

உலகின் சிறந்த படங்களைத் தரும் பல நாடுகளில் கதை திரைக் கதை ஆசிரியர்கள் ஒரு கல்லூரி பேராசிரியர் போல கம்பீரமாக கதையை விவரிக்க , இயக்குனரும் தயாரிப்பாளரும் மற்ற கலை நுட்ப மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் மாணவாகள் போல அமர்ந்து கதை கேட்பது உண்டு. அங்கு உள்ள தயாரிப்பாளர்களும் பணம்தான் போடுகின்றனர் . அவர்கள் மட்டும் வெறும் காகிதத்தையா போடுகின்றனர்?

ஆனால் இங்கே பல தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்ல வரும் புது இயக்குனர் தன் முன்னால் நிமிர்ந்து உட்காருவதே தவறான செயலாகப் படுகிறது .

எனவே நிஜமான திறமைசாலிகள் ஒதுங்கி நின்று விட சம்மந்தப் பட்டவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதில் உதவத் தயாராக இருப்பவர்கள் படைப்பாளிகளாக நுழைந்து விடுகிறார்கள் . 'தயாரிப்பாளர் என்ற தனி மனிதனை எப்படியாவது திருப்திப் படுத்துவது முக்கியமல்ல ; ஒரு சமூகத்தின் கலை ரசனையை கட்டி உறவாடுகிற படைப்பே வெற்றி பெறும்' என்ற உண்மை பற்றி அவர்கள் கவலைப் படுவதில்லை .

படம் என்ற பெயரில் எதையோ ஓட்டி வைக்க , அந்தப் படம் முடிந்ததும் அவிழ்த்து விட்ட நெல்லிகாய் மூட்டையாக அனைவரும் சிதற , வெள்ளிக் கிழமை வெளியே போன படப் பெட்டி திங்கள் கிழமை சோகமாக திரும்ப வருகிறது .

இப்படிப் பட்டவர்கள் இயக்குனர் பதவியை குறுகிய காலத்தில் அடைந்து எப்படியோ கொஞ்சம் காசும் பார்த்து விடுவதால் முறைப்படி இயக்குநராகி முன்னேற நினைக்கும் இளைஞர்களும் பொறுமைஇழந்து அவசரப் படுகிறார்கள் .

திரைப்பட இயக்கம் என்பது ஒரு வித் கலையறிவு . ஒரு இயக்குனரிடம் உதவியாளராக இருப்பதால் மட்டும் அது வந்து விடுவதில்லை . ஆனால் எப்படிப் பட்ட கதை திரைக்கதைகளையும் கையாளும் அறிவு , படப்பிடிப்பு தளத்தில் பதறாத பக்குவம் , நடிகர் நடிகைகளை வியந்து பிரம்மித்து நின்றுவிடாத தெளிவு இவையெல்லாம் வர குறைந்தது மூன்று படங்களிலாவது முழுமையாக பணியாற்றுவது அவசியம் .

ஆனால் இப்போது பலர் ஒரு படத்திலேயே அதுவும் அரைகுறையாக வேலை பார்தது விட்டு கம்பியூட்டரில் சில டிசைன்களை செய்து கொண்டு கதை சொல்ல கிளம்பிவிடுகிறார்கள் .

ஒரு கேமரா மேனோ எடிட்டரோ இயக்குனராவது பரவாயில்லை . சினிமாவில் ஏதாவது சின்ன சின்ன வேலை பார்த்த்வர்கள் கூட அதையும் அனுபவமாக சொல்லி இயக்குனர் ஆகும் கோதாவில் கலந்து விடுகிறார்கள் .

விளைவாக , நல்ல திறமைசாலிகள் கூட அதிவேக பயணத்தில் இறங்குகிறார்கள் . டைரக்ஷன் என்பது பேப்பரில் இருப்பதை இதயங்களில் இறக்குவது என்ற அக்கறையோ தெளிவோ இல்லாமல் சும்மா ஸ்டார்ட் கட் சொல்வது , எழுத்திய காட்சிகளை சும்மா கோர்த்து விடுவதுதான் என்று படம் எடுக்கின்றனர் . எனவே அந்தப் படங்கள் எல்லாம் உதிரிக் காட்சிகளிண் குவியலாக இருக்கின்றனவே ஒழிய ஒரு முழுமையான திரை அனுபவமாக மாறி மக்களின் ரசனையை ஈர்ப்பதில்லை .

இன்னொன்றும் கவனிக்க முடிகிறது .

முன்பெல்லாம் தமிழில் வந்த --- நாடகத்தனமான செயற்கையான படங்கள் என்று இப்போது நாம் கருத்துக் கூறும் ----படங்களில் கூட , படத்தின் இடைவேளைக்குப் பின்பு வரும் இரண்டாம் பகுதியை மக்கள் விரும்புகிற , ரசிக்கிற , பிரம்மிக்கிற ஏதோ ஒரு வகையில் உருவாக்கி படத்துக்கு வெற்றி தேடித் தருவதில் அன்றைய இயக்குனர்கள் கில்லாடிகளாக இருந்தனர் .

ஆனால் இப்போது ?

பெரும்பாலான இயக்குனர்கள் அவர்கள் உருவாக்கும் படத்தின் இரண்டாவது பாகத்தை சரியாகச் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் . இரண்டாம் பாகத்திடம் சிக்கி அவர்களும் சீரழிந்து படம் பார்க்க வருபவர்களையும் குதறி விடுகிறார்கள் . காரணம் இவர்களிடம் கற்பனை திறன் உண்டு . ஆனால் தொழில் நுட்ப ரீதியாக தன்னை தயார் படுத்திக் கொள்ளாமல் அவசரப் பட்டு இயக்குனர் ஆகிவிடுவதால் வரும் ஆபத்து இது . இப்போதைய பல தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் 'சினிமா அறிவு'க்கு இதை வேடிக்கை பார்ப்பதைதவிர, அவர்களால் பாவம் என்ன செய்ய முடியும் ?.

அதனால்தான் திரைக்கு வந்து சில 'நொடி'களே ஆன படங்கள் கூட தொலைக்காட்சிகளுக்கு வந்து விடுகின்றன .

இது இப்படி இருக்க , அதிகார , பண , படை பலம் கொண்ட சிலர் தமிழ் சினிமாவில் நுழைந்து தொழிலை ஆக்கிரமித்து , திரையரங்குகளையும் ஆக்கிரமித்து விட்டனர் . தாங்கள் எடுக்கும் பிரம்மாண்ட படங்களுக்காக மொத்தமாக திரையரங்குகளை தங்களுக்கென முடகிக் கொள்கின்றனர் . வித்தியாசமான சில படங்கள் எடுத்தால் கூட மக்களிடம் நேரடியாக போக முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது . . இந்த நபர்களிடம் போய் , தான் எடுத்த படத்தை கொடுத்து "எப்படியாவது ரிலீஸ் செய்ய வைத்து நீங்கள் எடுக்க வேண்டியதை எடுத்துக் கொண்டு கொடுக்க வேண்டியதைக் கொடுங்கள் " என்று கெஞ்சிக் கொண்டு நிற்க வேண்டிய நிலை தயாரிப்பாளர்களுக்கு . .

இதனால் தியேட்டர் கிடைக்காத காரணத்தால் பெட்டியில் தூங்கி , கடன் வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கு வட்டி ஏறி , பெட்டிக்குள்ளேயே அழுகிக் கொண்டிருக்கும் படங்கள் பல .

இது போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் வரும்போது எல்லா தியேட்டர்களையும் அவர்கள் கைக்குப் போய்விடும் என்பதால் அதற்கு முன்பே கும்பல் கும்பலாக படங்களை வெளியிட வேண்டிய நிலைமை சிறிய தயாரிப்பாளர்களுக்கு ஏற்பச்டுகிறது .

ஓட்டப் பந்தயம் வைத்தால் மைதானத்தில் வைக்கவேண்டும் . தி நகர் ரங்கநாதன் தெரு ஜனத்திரளுக்கு நடுவில் ஓட்டப் பந்தயம் வைத்தால் ? அந்தக் கதையாய் கும்பல் கும்பலாக ரிலீஸ் ஆகும்போது , ஓகே ரக படங்களும் காணாமல் போய் விடுகின்றன

'என்ன இது .. இப்படி ஒரு அபத்தமான கட்டுரை . !

படம் ஓடாததற்கு இவைகளா காரணம் ? அன்று மக்களுக்கு வேறு பொழுதுபோக்கு இல்லை . இன்று எத்தனையோ உண்டு , பெருகும் விலைவாசி . திருட்டு வீடியோ , ஆதிக்கம் . தொலைக்காட்சியில் மூழ்கும் மக்கள் இவை தானே திரைப்படங்கள் ஓடாததற்கு காரணம் . இந்தக் கட்டுரையில் என்னென்ன்னவோ சொல்கிறார்களே.....'

----என்று நினைப்பது மடமை .

இவைகளும் படங்கள் ஓடாததற்கு காரணம்தான் , மறுக்க வில்லை . ஆனால் நமக்கு முன்பே இவைகளை சந்தித்த ஹாலிவுட் பட உலகம் எப்படி சிக்கலில் இருந்து மீண்டது ?

உலகைக் கலக்கிய நேற்றைய ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கலக்கியிருக்கும் எக்ஸ்பெண்டபிள் போன்ற படங்கள் இங்கே ஏன் சாத்தியமில்லை ? அவர்களுக்கு எல்லாம் இல்லாமல் இங்கே இருப்பவர்களுக்கு மட்டும் தலையில் எந்தக் கொம்பு முளைத்திருக்கிறது ?

தமிழ் சினிமா ஏன் நிஜமான படைப்பாளிகளின் கையில் இருந்து வேகமாக நழுவுகிறது ?

இன்றைய கூவம் எப்படி இருக்கிறது ? இப்போது இதை சுத்தப் படுத்த பல நூறு கோடிகள் வேண்டுமென்று கூறப் படுகிறது . ஆனால் இதே கூவத்தில் ஒரு நாள் சுகமான படகுப் படகுப் போக்குவரத்து நடந்தது . எப்போது சாக்கடை கலக்க ஆரம்பித்ததோ அந்தக் காலத்திலேயே தடுத்து வேறு வழி செய்து தீர்வு கண்டிருந்தால் இன்று கோடிக்கணக்கான ரூபாய்கள் ஆகும் என்று திட்டம் போட்டு கனவு கண்டுகொண்டிருக்க தேவை இல்லை .

தமிழ் சினிமாவில் இப்போது தரம் அழித்தல் வேகமாகவே நடக்கிறது . கூவத்திலாவது இப்போது சாக்கடை ஓடுகிறது .

ஆனால் திரையுலக நிலைமை இப்படியே போனால் தமிழ் சினிமா இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகலாம் .

தமிழ் படங்கள் எனும் ஈசல் பூச்சிகளின் ஆயுள் இன்னும் குறையலாம்

Tuesday, September 7, 2010

#சிந்து சமவெளியா ? அநாகரிகச் சிகரமா ?






தணிக்கைத் துறை என்ன புல் பிடுங்கிக் கொண்டு இருக்கிறது ...... எவ்வளவு துட்டு வாங்கிக் கொண்டு இந்தப் படத்தை அனுமதித்தார்கள் என்று , தயக்கமே இல்லாமல் சந்தேகப் படவைத்த படம் இது .

முடிந்த வரை இந்தக் கதையை கண்ணியமாக சொல்ல முயல்கிறேன் . மீறி தவறு நடந்தால் ரசிகர்கள் மன்னிக்கவே வேண்டாம்..........படம் எடுத்தவர்களையும் அனுமதித்தவ்ர்களையும் !

ஒரு ராணுவ வீரர் . பதினேழு வருட திருமண வாழ்க்கையில் ஒரு மகன் பிறந்து கல்லூரி வரை போய்விட்டாலும் மொத்தமாக முப்பது நாளே மனைவியுடன் வாழ்ந்தவர் . ராணுவ பணியின் போதும் ஒழுக்கமாக இருந்தவராம் . ஒரு போரில் சிக்கி கால் பாதிக்கப் பட்ட நிலையில் தகுதி இழந்து வி ஆர் எஸ் வாங்கிக் கொண்டு ஊர் வருகிறார் .

தாம்பத்திய வாழ்க்கையிய இனிமேல்தான் அனுபவிக்க வேண்டும் என்ற சூழலில் திடீர் என அவரது மனைவி பாம்பு கடித்து இறந்து விடுகிறார் .

ராணுவ வீரரின் ராணுவ சேவையைப் பாராட்டி அரசாங்கம் கடல்புரம் ஓரமாகஅவருக்கு தரும் ஐந்து ஏக்கர் நிலத்தில் ஒரு வீடு கட்டி தோட்டம் போடுகிறார் . பெரிய வீடு . மகனுக்கு அவன் காதலித்தத பெண்ணையே திருமணம் செய்து வைக்கிறார் .

மகன் மேல் படிப்பு படிக்க வெளியூர் போகிறான் . யாருமில்லாத பெரிய வீட்டில் மாமனாரும் மருமகளும் மட்டும் (அதற்கான காரணங்கள் எல்லாம் நொண்டிச் சாக்கு !). ஒரு நிலையில் எதிர்பாராத விதமாக மாமனாரும் மருமகளும் ... கண்றாவி , (மருமகளை வற்புறுத்தி பலாத்காரப் படுத்தி ) தவறு செய்து விடுகிறார்கள் .

அதன் பின்னர் இருவரும் வருத்தப் படுகிறார்கள் . அதோடு முடிந்து தொலைக்கவில்லை கருமம் .!

மறுநாள் இரவு மருமகளே விரும்பிப் போய் மாமனாரிடம் .. சீச்சி !.

அதோடும் முடியவில்லை .

இருவரும் புது மணத் தமபதிகள் போல இளம் ஜோடிகள் போல வாழத் துவங்குகிறார்கள் . சீண்டல் , சிணுங்கல் , சரசம் ... எல்லா இழவும் !

வீடு வருகிறான் மகன் . நடப்பது அறிவுக்குப் புரிகிறது . ஆனாலும் நம் மனைவியும் தந்தையும் அப்படி இருக்கமாட்டார்கள் ; நாம்தான் தவறாக நினைக்கிறோம் என்று நம்புகிறான் . அது மட்டுமல்ல மனைவியை சந்தேகப் பட்டதற்காக அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவன் முடிவெடுப்பது தெரிய வர , அதை அறிந்த மனைவி மனம் தாளாமல் தண்டவாளத்தில் படுத்து உடல் துண்டாகிப் போகிறாள் .

தவிர கணவனுக்கு எல்லா உண்மைகளையும் தெரிய வைத்து விட்டுப் போகிறாள் . "நானும் உன் அப்பாவும் உடம்புக்கு அடிமையாகி விட்டோம் "என்று நல்ல பிள்ளையாக விளக்கமும் கூறி வைக்கிறாள்

ஒரு நிலையில் நடுக்கடலில் குடி போதையில் மகன் தந்தையிடம் உண்மை கேட்க , குடிபோதையில், எல்லாவற்றையும் ஒத்துக் கொள்ளும் தந்தை மனைவியையும் மனைவியாகிப் போன மருமகளையும் (அதாவது மகனின் மனைவி ) உடல் ரீதியாக ஒப்பிட்டு அருவருப்பாகப் பேசுகிறான் . தவிர "உன் மனைவி உனக்கு துரோகம் செய்துவிட்டு என்னுடன் சுகம் அனுபவித்த போது என் மனைவி அதாவது உன் அம்மா மட்டும் ஒழுக்கமாக வாழ்ந்திருப்பாள் என்பது என்ன நிச்சயம் ?"என்று ஒரு மானங்கெட்ட கேள்வி வேறு கேட்கிறார் (என்ன ஒரு சாக்கடைப் புழு சிந்தனை !)

கொந்தளிக்கும் மகன் படகில் ஓட்டை போட்டு அப்பாவை ஜலசமாதியாக்கி விடுகிறான் .

கடைசியில் 'சிந்து சமவெளி காலத்திலேயே நாகரீகம் கண்டவர்கள் நாம் . எனவே ஒழுக்கம் முக்கியம்' என்ற ரீதியில் சாத்தான் வேதம் ஓதும் கதையாக கருத்துக் கூறி படத்தை முடிக்கிறார்கள்

அடத் தூ!

பெரிய வீடு ...தனிமை .. சரிதான் ,, ஆனால் என்னவோ வீட்டில் வேறு இடமே இல்லாத மாதிரி மாமானார் புழங்கும் வழியில் ஆடை விலக அலங்கோலமாக படுத்து இருக்கிறாள் மருமகள் . போங்கடாங் ! நல்லா வருது வாயில .!

குருவிக் கூடு போன்ற சிறிய வீட்டில் அப்பா அம்மா அண்ணன் தம்பி அவர்தம் மனைவியார் , அக்காள் தங்கை அவர்தம் கணவன்மார் என்று எல்லா உறவுகளும் வருடக் கணக்காய் உறங்கினாலும், மனத்தால் கூட தவறாக நினைக்காமல் வாழும் குடும்பங்கள் இருக்கும் மண்ணில் இதெல்லாம் ஒரு சாக்கு . இவர்கள் முகத்தில் உமிழ்ந்தால் அது நம் எச்சிலுக்கு அவமானம் .

உடல் சுகத்தை தவிர்க்க , விபச்சாரி வீட்டுக்கு போகிறார் மாமனார் . ஆனால் அங்கு தனி அறையில் இருக்கும் விபச்சாரி இவருக்கு போதையில் மருமகள் மாதிரி தெரிய, அதனால் விபச்சாரியையே தொடாமல் வருவாராம் மாமனார் .

அவ்வளவு நல்ல அந்த கதாபாத்திர நாய் , நிஜ மருமகளை கெடுத்து , அவள் தானே தேடி வருவதையும் அனுமதித்து ஒரு நிலையில் மனைவியாகவே குடும்பம் நடத்துவது என்ன துடைப்பக் கட்டை நியாயம் ? கழட்டி அடி !

மாமனாரவது' குடி போதையில் கெடுத்தான்... உணர்வுக் கொந்தளிப்பில் கெடுத்தான் ' என்று மருந்துக்கு ஒரு அநியாய சமாதானமாவது சொல்ல முடியும் .

ஆனால் மறுநாள் மருமகளே மாமனாரை தேடிப் போவது எப்பேர்ப்பட்ட அருவருப்பு !

உடல் சுகத்துக்கு அடிமையகிவிட்டோம் என்பது என்ன நொண்டி சாக்கு ! உடல் சுகத்தை ரசிக்க வேண்டாம் என்று யார் சொன்னது . ? கணவன் என்ன செவ்வாய் கிரகத்துக்கா போய்விட்டான் ? பக்கத்தில் ஒரு டவுனில்தான் படித்துக் கொண்டிருக்கிறான் . தேவைப் படும்போது மனைவி கணவனைத் தேடிப் போவதில் என்ன சிரமம் இருக்க முடியும் ? அல்லது கணவனை வரச் செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்? அது ஒன்றும் தவறல்லவே

அங்கொன்றும் இங்கொன்றும் தவறுகள் நடக்கலாம் . ஆனால் அதை பல கோடி பணம் இசையமைத்து போட்டு நல்ல ஒளிப்பதிவோடு கலை இயக்கத்தோடு சினிமாஸ்கோப் திரையில் விலாவாரியாகக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

இப்படி யோசித்துப் பாருங்கள்

வாழ்வில் எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் மகன் மனைவிக்காக பணம் சம்பாதிக்க ராணுவத்தில் உழைத்தான் ஒரு கணவன் . வாழ்வில் பின் பகுதியையாவது மனைவியுடன் பக்குவப் பட்ட பாலியல் உறவைச் சுகித்து வாழ ஆசைப் பட்டு வந்தால் எதிர்பாராவிதமாக மனைவி மரிக்கிறாள் .

மகனுக்கு திருமணம் . மருமகள் வருகிறாள் . அவளோடு தனிமையில் இருப்பு . ஏதோ ஒரு அசந்தர்ப்ப சூழலில் (அதுதான் , இருக்கவே இருக்கிறதே , குடி போதை எனும் சாக்கு !) மருமகளை தவறாக நினைக்கும் கேவல சலனம் ஏற்படுகிறது .

மருமகளும் அதை உணர்ந்து பதற , அருவருப்பான் சூழல் . அடுத்த நொடியே மாமனார் மனம் மாறி தவறை உணர்ந்தாச்சு .

ஆனால் இந்த நிலையில் எப்படியோ மகனுக்கு எதிர்பாராத விதமாக சந்தேகம் ஏற்பட ,

தன்னுடைய ஒரு நொடி மன சலனத்தால் மகன் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை போக்கி , மகனையும் மருமகளையும் நல்லபடியாக வாழ வைக்க , அந்த ராணுவ வீரன் தன் உயிரையே கொடுத்து சாதித்தான்

---என்ற ரீதியில் இவர்கள் கதை சொல்லி இருந்தால் இந்தப் படத்தின் படைப்பாளிகளை கோவில் கட்டிக் கொண்டாடி இருக்கலாம் .

தவிர கண்ணியமான உறவுகளில் சலனத்துக்கு ஆளாகிறவர்களுக்கும் அது ஒரு பாடமாக இருந்திருக்கும் .

அதை விட்டு விட்டு எங்கோ நடக்கும் ஒரு சில தவறுகளை சாக்காக வைத்து உண்மையைத்தானே சொல்கிறேன் என்ற பெயரில் இப்படி ஒரு கேவலமான படம் எடுத்ததன் மூலம் ,

வருடக் கணக்கில் கணவனைப் பிரிந்த நிலையிலும் உடல் இச்சையை அடக்கி ஒரே வீட்டில் மாமனாருடன் மற்ற உறவுகளுடன் , பத்தரை மாற்றுத் தங்கமாய் வாழும் பெண்களை மட்டுமின்றி , குடும்ப வாழ்வின் கண்ணியம் மிக்க உயர்ந்த உறவுகளையும் அசிங்கப் படுத்தி யுள்ளது இந்தப் படம் .

இவர்களை விட ரகசியப் பயன்பாட்டிற்காக நீலப் படம் எடுப்பவர்கள் எவ்வளவோ மேல் . ஆனால் அது குற்றம் . இப்படி ஒரு படத்தை எடுத்து அதனை தணிக்கைத் துறையும் அனுமதித்து படம் ஓட்டினால் அது குற்றமில்லை .

எதிரிகளாலும் துரோகிகளாலும் நசுக்கப் பட்ட ஈழ விடுதலைக் குரலை ஆதரித்து ஒரு வார்த்தை பேசினால் கூட உடனே கததரிக்கோல் தூக்கிக் கொண்டு வரும் சென்சார் போர்டு , இந்தப் படத்தை அனுமதித்தது எப்படி?

ஒருவேளை...................!?

Tuesday, August 10, 2010

#இறையாண்மை என்றால் ....





அவன் உன்னை
செருப்பால் அடிப்பான் .
அடிபட்ட இடத்தை நீ
துடைக்கக் கூடக் கூடாது .

துடைத்தால் நீ
துரோகி .

அவன் உன் முகத்தில்
காறி உமிழ்வான் .
நீ உன் முகத்தை
விலக்கிக் கொள்ளக் கூடாது .

விலக்கினால் நீ
விரோதி .

அவன் உன் கையை
கத்தியால் வெட்டுவான் .
நீ அவன் பாதத்தில்
நகத்தால் கூடக்
கீறக் கூடாது .

கீறினால் நீ
கீழ்த்தரமானவன் .

அவன் உன்
தாலியறுப்பான்.
பதிலுக்கு நீ
தடுக்கக் கூடாது .

தடுத்தால் நீ
தரங் கெட்டவன்.

அவன் உன் மேல்
வெடிகுண்டு வீசுவான் .
பதிலுக்கு நீ ஒரு
வெங்காயத்தைக் கூட
வீசக் கூடாது.

வீசினால் நீ
வீணன் .

அவன் உன் பெண்டிரின்
கர்ப்பப்பையில் அடிப்பான்
நீ அவன் பெண்ணைப் பார்த்து
கண்ணடிக்கவும் கூடாது

அடித்தால் நீ
இறையாண்மைக்கு
எதிரானவன்

சீச்சி ...

இந்த மண்ணில்
இறையாண்மை என்பதென்ன?

இல்லவே இல்லாத
ஆண்மையா
?

Wednesday, June 30, 2010

# இரவுக்கு ராஜா கண்ணதாசன்






மக்களுக்குப் புரியாத வார்த்தைகளில் பாட்டெழுதி அவர்களை மலைக்க வைத்து வாய் பிளக்க வைப்பதுதான் நல்ல கவிஞனுக்கு அடையாளம் என்று பலரும் எண்ணி எழுதிக் கொண்டிருந்த சூழலில் , மலைக்க வைத்த கவிதைகளை மக்களுக்குப் புரிந்த வார்த்தைகளில் சொல்லி அவர்களையும் ரசிக்க வைப்பதில் மகுடம் சூடிய கவிஞன் கவியரசு கண்ணதாசன் .

கண்ணதாசன் பற்றி அதிகம் வெளியே தெரியாத பல அரிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் அவரது அண்ணனும் பிரபல படத் தயாரிப்பாளருமான ஏ எல் சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் .

" குப்பஞ் செட்டியார் மகன் நல்லாஞ் செட்டியார் . நல்லாஞ் செட்டியார் மகன் வெள்ளையப்பச் செட்டியார் . அவரது மகன் சாத்தப்பச் செட்டியார் . இந்த சாத்த்தப்பச் செட்டியாரின் பிள்ளைகள்தான் எனது மாமனார் ஏ எல் சீனிவாசன் அவர்களும் கவியரசு கண்ணதாசன் அவர்களும் . எனது கணவர் கண்ணப்பன் சீனிவாசனின் மகன் . எனவே கண்ணதாசன் எனக்கு சின்ன மாமனார் .

வெள்ளையப்பச் செட்டியார் அந்தக் காலத்திலேயே ஒரு பெரிய நூற்பாலை வைத்திருந்தவர் . ஆங்கிலேயர் காலத்திலேயே வெள்ளையப்பச் செட்டியாருக்காக ரயில் தினமும் சில நிமிடங்கள் நின்று போகுமாம் . இவர் அங்கு இருந்தபடி சென்னையில் உள்ள அயனாவரத்துக்கே உரிமைப்பட்டவராக இருந்தவராம் . அவருக்கு சென்னையில் ஜமீன்தார் என்றே பேராம்

கண்ணதாசனின் தந்தை சாத்தப்பச் செட்டியாரும் அப்படிதான் . அவர்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் ஊரில் எல்லோரும் வந்து சாப்பிட வேண்டும் என்று ஏற்பாடு செய்வார் . அதோடு நிற்காமல் நடந்து போய் ஊரில் யார் வீட்டிலாவது சமைக்கிற புகை வருகிறதா என்று பார்ப்பாராம் . யாரும் சமைத்தால் உரிமையாக கோபப் பட்டு அழைப்பாராம் . தவிர யாராவது " நாங்க சமைக்கல. குளிக்க வெந்நீர் போட்டிருக்கோம் என்று சொன்னால் அதை குறித்துக் கொண்டு அவர்கள் சொன்னது உணமைதானா என்று பார்தது அவர்கள் சாப்பிட வருகிறார்களா என்று கவனிப்பாராம் . அந்த அளவுக்கு விருந்தோம்பலில் சிகரம் தொட்டவர் அவர் .

பொதுவாக கவிதை எழுத நல்ல சூழல் இருந்தால் நல்லது என்பார்கள் . பசுமை . வயல் வரப்புகள் . நதி . தோப்பு . கூட்டம் கூட்டமாய் பறக்கும் பறவைகள் இவைகள் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள் அல்லவா? அது எதுவுமே இல்லாத ஊர்தான் கவிஞர் பிறந்த சிறுகூடற்பட்டி . வறண்ட செம்மண் பூமி . அங்கிருந்து அந்தக் கவியரசர் தோன்றியதுதான் நான் அவரிடம் வியக்கும் முதல் விஷயம் .

கண்ணதாசன் சின்ன வயதில் குடியிருந்த இடம் மிகப் பெரிய கூட்டுக் குடும்பம் . நான்கு மூலைகளிலும் நான்கு வீடுகள் இருக்க நான்கு வீட்டின் பின் புறங்களும் சந்திக்கும் படியாக ஒரு பெரிய முற்றம் இருக்கும் . அந்த இடத்தில் நான்கு வீட்டுக் காரர்களும் புழங்குவர் . நிறைய குழந்தைகள், பெண்கள் , சடங்குகள் , சம்பிரதாயங்கள் பார்தது வளர்ந்தவர் அவர் . திருமணங்கள் நடந்து கொண்டிருக்கும் . விதவிதமான பெயர் கொண்ட நகைகளின் புழக்கம் ஒரு பக்கம் . குழந்தைகள் பிறக்கும் .தாலாட்டுகள் ஒலிக்கும் .

பொதுவாக படைப்பாளிகள் படைப்புக்காக அனுபவங்களை தேடுவார்கள் என்று சொல்வார்கள் . ஆனால் மாமாவைப் பொறுத்தவரை அவர் கண்ணுக்கு முன்னாலேயே வாழ்க்கை அனுபவங்கள் சிறு வயதில் கிடைத்தன . அது பின்னாளில் அவரது பாடல்களில் வலிமையாக விளக்கமாக ஒலித்தன என்றால் மிகையாகாது .

மகனைப் பற்றி எல்லோரையும் விட அம்மாவுக்குத்தானே அதிகம் தெரியும் . கவிஞரைப் பற்றி சின்ன வயதில் அவர்கள் தாயார் " என் புள்ள வளந்த பின்னாடி ஆயிரம் பாட்டுக்கு அடி எடுத்துக் கொடுப்பான் " என்று சொல்லியிருக்கிறார் . அது போலவே கண்ணதாசன் பாடல்களால் உலகளந்தார் .

எனது மாமனார் சீனிவாசனுக்கு சின்ன வயதில் இரவு என்றால் பயமாம். ஆனால் அவரை விட இளையவரான கண்ணதாசன் கொஞ்சம் கூட பயமில்லாமல் இரவில் காடு மேடு எல்லாம் சுத்துவாராம் .
அதனால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் "பகலுக்கு ராஜா சீனிவாசன் . இரவுக்கு ராஜா முத்தையா " (கண்ணதாசனின் இயற்பெயர் ) என்பார்களாம்

இப்படியெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்த குடும்பம் ஒரு நிலையில் நொடித்தது . இப்போது சென்னையில் நியூ உட்லண்ட்ஸ் உள்ள இடத்தில் அப்போது முருகப்பச் செட்டியார் என்பவரின் வீடு இருந்தது . அங்கு இருந்தபடி அஜாக்ஸ் என்ற கம்பெனியில் சீனிவாசன் கணக்கேழுதுபவராகவும் கண்ணதாசன் ஒரு எளிய ஊழியராகவும் வேலைக்குப் போன கொடுமையும் நடந்தது .

பின்னாளில் அந்தக் கம்பெனி தங்கள் நிறுவனம் பற்றிய ஒரு வெளியீட்டில் இருவரது படத்தையும் போட்டு இவர்களை ஊழியர்களாகக் கொண்டிருந்த பெருமை பெற்ற கம்பெனி என்று மகிழ்ந்தது .
பிறகு ஒரு நிலையில் இருவரும் மீண்டும் ஊருக்கே போய் பின்னர் அங்கிருந்து கண்ணதாசன் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் பட நிறுவனத்துக்கும் சீனிவாசன் கோவை ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் வேலைக்குப் போனார்கள் .

என் மாமனார் சீனுவாசன் ஒரு பெரிய தயாரிப்பாளராகவும் சின்ன மாமனார் கண்ணதாசன் மாபெரும் கவிஞராகவும் உயர்ந்தார்கள் . பொதுவாக கவிஞர் ஆள் யார் என்று பார்க்காமல் எல்லோருக்கும் அற்புதமான பாட்டுக்கள் தருவார் என்றாலும் அண்ணன் படம் என்றால் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டு அற்புதமான பாடல்கள் தருவார் .

திருடாதே , சாந்தி , பெண் என்றால் பெண் , லக்ஷ்மி கல்யாணம் , பட்டணத்தில் பூதம் , சாரதா என்று எததனையோ படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம் .

அதுபோல தனிப்பட்ட அண்ணன் தம்பி பாசத்தில் உள்ள கொடுக்கல் வாங்கல் போக , எழுதும் ஒவ்வொரு பாட்டுக்கும் அப்போதே பாட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று கவிஞருக்கு கொடுத்து விடுவார் என் மாமனார் சீனிவாசன் .

இங்கு ஒரு செய்தி உண்டு . அதாவது ஒருமோரை கண்ணதாசன் தன் அண்ணனிடம் பண உதவி கேட்டதாகவும் அவர் மறுக்க அந்த விரக்தியில்தான் அண்ணன் என்னடா தம்பி என்னடா என்ற பாட்டை எழுதியதாகவும் கூறப் படும் தகவல்தான் அது .. ஆனால் அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது . அந்தப் பாட்டுக்கு ஒரு அரசியல் பின்னணி உண்டு என்றும் கூறக் கேட்டிருக்கிறேன் . ஒருவேளை அது உண்மையாக இருந்தாலும் கூட எதோ ஒரு சூழலில் பணமுடை காரணமாக என் மாமனார் மறுத்திருக்கலாம் . குழந்தையுள்ளம் கொண்ட கவிஞரும் ஒரு கவிஞனுக்கே உரிய குணத்தோடு அதைப் பாட்டாக வடித்திருக்கலாம் .
மற்றபடி அவர்கள் பாசமுள்ள அண்ணன் தம்பிகளாக இருந்ததற்கு பல உதாரணங்கள் கூற முடியும்.
என் மாமனார் தனது ஏ எல் எஸ் புரடக்ஷன்ஸ் மூலம் அகில இந்தியா முழுக்க வெற்றிக் கொடி நாட்டியவர் . பல வெற்றிகரமான இந்திப் படங்களைத் தயாரித்தவர் . அதனால் பல இந்திப் பட சூப்பர் ஸ்டார்களுக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர் . அவர்கள் எல்லோரும் என் மாமனாரை கிங் என்றுதான் செல்லமாக அழைப்பார்கள் .

ஒரு முறை சென்னை வந்த இந்தி நடிகர் திலீப் குமார் என் மாமனாரிடம் " கிங் ....இங்க கண்ணதாசன்னு ஒரு பெரிய கவிஞர் இருக்காரே .. அவரை நான் சந்திக்கணும் . நீங்கதான் ஏற்பாடு செய்யணும் " என்றுமிகுந்த ஆர்வத்தோடு கூற , எதுவுமே சொல்லாமல் ஏ எல் எஸ் கண்ணதாசனுக்கு போன் செய்து " தம்பி கொஞ்சம் வந்துட்டுப் போப்பா " என்று சொல்ல , அருகில் இருந்த கவிஞரும் உடனே சென்று விட்டார் .

அவ்வளவு சீக்கிரம் கவிஞர் வந்து விடுவார் என்று எதிர்பார்க்காத திலீப் குமார் என் மாமனாரைப் பார்தது வியந்து போய் "நீங்க கூப்பிட்டதும் கண்ணதாசனே உடனே வந்து விட்டாரே ." என்று கூற, என் மாமனார் அமைதியாக "கண்ணதாசன் என் உடன்பிறந்த தம்பிதான்" என்று கூறியிருக்கிறார் . வியப்பின் உச்சிக்கே போன திலீப் குமார் " கண்ணதாசன் உங்கள் உடன் பிறந்த தம்பிஎன்றால் நிஜமாகவே நீங்கள் கிங் தான் "என்று பாராட்ட சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்தது நெகிழ்ந்து நின்ற சம்பவமும் உண்டு .

அவ்வளவு ஏன்?

ஏ எல் சீனிவாசனின் மகனான என் கணவர் கண்ணப்பனும் நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் . இது கலப்புத் திருமணமும் கூட . இருவரது குடும்பத்துக்கும் தெரியாமல் நாங்கள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு நேராக கண்ணதாசனைப் பார்த்துதான் ஆசி வாங்கினோம் .

"சித்தப்பா எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க ' என்று என் கணவர் கேட்டதும் உடனே தயங்காமல் ஆசிர்வாதம் செய்த கவிஞர் நாங்கள் கிளம்பியதும் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? தன் அண்ணனுக்குப் போன் செய்து விசயத்தைச் சொன்னதுதான் !. என் மாமனார் எங்கள் திருமணத்தை அங்கீகரிக்க மறுக்க , கவிஞரோ அதன் பின் முழுக்க தனது அண்ணனுக்குதான் துணை நின்றார் . அந்த அளவு அண்ணன் பாசம் !

அது மட்டுமல்ல ! என் மாமனாரும் அவரது மனைவியும் பிரிந்து இருந்த சூழலில் மகனும் அண்ணன் மனது புண்படும்படி இப்படி ஒரு காரியம் செய்து விட்டானே என்ற வருத்தத்தில்தான் " கேளாய் மகனே ... கேளொரு வார்த்தை" என்ற பாடலையே எழுதினார் .

பின்னாளில் கவிஞரின் அன்பை நாங்கள் பெற்றோம் . என் திருமணத்தை அவர் எதிர்த்ததை நான் தவறாகவே நினைக்கவில்லை . இந்த உயரிய குடும்பத்துக்கு தகுதியான பெண்ணாக என் அன்பாலும் பாசத்தாலும் நான் மாறினேன் .

சிறு கூடற்பட்டியில் கவிஞர் பிறந்த வீடு பாழடைந்து கிடந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பே அந்த இடத்தில் என் கணவர் இருபது லட்சம் செலவில் பெரிய வீடு கட்டினார் . அப்போது கவிஞர் தவழ்ந்த அந்த வீட்டின் நடு மையத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மண்ணை எடுத்து சென்னை கொண்டுவந்தேன் . இப்போதும் அதை பொக்கிஷமாக வைத்திருக்கிறேன் .
என் மாமனார் இறந்தது அவரது ஐம்பத்தி நான்காம் வயதில் . கண்ணதாசன் இறந்ததும் அவரது ஐம்பத்தி நான்காம் வயதில்தான். தவிர சீனிவாசனின் மகள் அதாவது எனது நாத்தனார் ஒருவரும் அவரது ஐம்பத்து நான்காம் வயதில் இறந்தார் . இதோடு முடிந்ததா? என் கணவர் கண்ணப்பனும் தனது ஐம்பத்து நான்காம் வயதில்தான் இறந்தார் . இந்த விஷயம் உண்மையிலேயே சிலிர்க்க வைக்கிற ஒன்றாக இருக்கிறது .

வழக்கமாக வரும் கவிஞரின் பிறந்த நாட்களை விட இந்த வருடம் வரும் அவரது பிறந்தநாள் சிறப்பானது . ஏனெனில் இன்று அவரது பிறந்தநாள் மட்டுமல்ல . அவர் பிறந்த சிறு கூடற்பட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கோவிலில் கும்பாபிஷேகமும் இன்று நடக்கிறது . நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கும் தினம் நாங்கள் அந்த கும்பாபிஷேக விழாவில்தான் இருப்போம் .

இன்னொரு விஷயம் . கவியரசு கண்ணதாசன் பிறந்த இதே ஜூன் இருபத்திநான்காம் தேதிதான் நானும் பிறந்தேன் . அதில் எனக்கும் பெருமைதான் ' என்று சந்தோஷத்தில் முடித்தார் ஜெயந்தி கண்ணப்பன் .

Monday, June 21, 2010

# ராவணன் (படம்) துடைத்த கம்பனின் கண்ணீர்








ஒரு மண்ணில் காலகாலமாக வாழும் மக்கள் தமது நிறம் உயரம் போன்றவை குறித்தும் இயற்கைச் சூழலால் தமக்கு அமைந்த சில பழக்க வழக்கங்கள் குறித்தும் தம்மீது தாமே ஒரு வித தாழ்வு மனப்பான்மை கொண்டிருக்க , அங்கு புதிதாக வரும் இன்னொரு இனம் அந்த தாழ்வு மனப்பான்மையைப் பயன்படுத்தி, அந்த மண்ணிலேயே அந்த மக்களை அறிவு ரீதியாக அடக்கி, தாம் தாழ்த்தப் பட்டவர்கள்தான் என்று அந்த மக்களையே நம்பவைத்து சமூகத்தின் ஆட்சியைப் பிடிக்கிறது .

தவிர தம்மை உயர்ந்தவர்கள் என்றும் அந்த மக்களைத் தாழ்ந்தவர்கள் என்றும் விளக்கும்படியாக ஒரு சிறந்த கதைக் காவியத்தையும் படைத்து அந்தக் கதையின் நாயகனைக் கடவுளாகவும் ஆக்கி அந்த மக்களிடமே பரப்புகிறது . அரசியல் ரீதியாகவும் தன்னை பலப் படுத்திக் கொண்டு அந்தக் காவியத்தை அந்த மக்கள் சமூகத்திடமும் திணிக்க திட்டமிடுகிறது .

இப்படிப் பட்ட ஒரு சூழலில்தான் சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வான்மீகியின் ராமாயணத்தை தமிழில் காவியமாகப் பாட வேண்டிய சூழல் கவிச் சக்கரவர்த்தி கம்பனுக்கு அமைந்தது . 'நாம் பாடாவிட்டாலும் அதை ஒட்டக்கூத்தரோ அல்லது வேறு யாரோ தமிழில் படைக்கத்தான் போகின்றனர்' என்ற நிலையில் வான்மீகி ராமாயணக் 'கதை ' அப்படியே தமிழில் வந்தால் அது தமிழ்க் கலாச்சாரத்துக்கே மாபெரும் இழுக்காகி விடும் என்ற இக்கட்டில் கம்பன் தானே அந்தப் பொறுப்பை ஏற்றான் .

வான்மீகி ராமாயணத்தின் அழுக்குகளைக் கழுவி எல்லா பாத்திரங்களுக்கும் உயர்வு தந்து கம்பராமாயணத்தைப் படைத்தான் . பின்னர் கம்பராமாயணமே இந்தியாவெங்கும் பரவியது . ராமனின் புகழுக்கு பெரும் காரணமாக அமைந்தது

--- இவையெல்லாம் இலக்கியமும் வரலாறும் இணைந்து கூறும் தகவல்கள் .

ஆனாலும் தன் இனத்து அரசனை கெட்டவன் என்று சொல்லி வேற்று இனத்து நாயகனை உயர்ந்தவனாகக் காட்ட வேண்டியிருக்கிறதே என்ற கம்பனின் வலி கம்பராமாயணம் முழுக்க விரவிக் கிடப்பதை ஊன்றிப் படித்தால் உணர முடியும் . அதன் விளைவுதான் ராவணனுக்கு கம்பன் கொடுக்கும் மிக உயர்ந்த அறிமுகம். அது மட்டுமல்ல வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றதை அடுத்து வரும் பகுதிகளில் ராமனை கம்பன் நார் நாராக கிழித்துத் தொங்க விடுவதும் தாரை புலம்பறு படலத்தில் வாலியின் கால் தூசுக்குக் கூட ராமன் ஆக மாட்டான் என்ற தொனியைக் கொண்டு வந்திருப்பதும் கூட கம்பனின் அந்த வலியின் விளைவுகள்தான் .

இவற்றிலும் கூட திருப்தி அடையாமல் "நான் ராமாயணத்தை எழுதியதற்காக நாளை என் சமூகமே என்னைப் பழிக்கும் சூழல் கூட வரும் . ஆனால் உண்மை மீண்டும் வெல்லும். என்னைப் புரிந்து கொள்பவர்கள் தோன்றுவார்கள் " என்று கம்பனே ஒரு பாடலில் குறிப்பிட்டதாகக் கூட ஒரு தகவல் உண்டு .

அது உணமை எனில் கம்பன் சொன்ன அந்த மனிதன் சுமார் அம்பது வருடங்களுக்கு முன்பே தோன்றி நம்மிடையே மணியாக ரத்தினமாக நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் .

மணிரத்னம் .... அன்றைய கம்பனின் ஏக்கத்தை ஓர் ஆயிரம் ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தீர்த்து வைத்திருக்கிறார் இந்த மாபெரும் கலைஞன் .

அந்த விதத்தில் ராவணன், யுகங்களைக் கடந்த படம் !

அன்று சூழ்நிலைக் கைதியாக இருந்த காரணத்தால் கம்பன் எழுத முடியாமல் தவித்த உண்மையான ராமாயணத்தை இன்று செல்லுலாய்டில் கருத்தாண்மையோடு எழுதியிருக்கிறார் யுகங்களைக் கடக்கும் மணிரத்னம் என்ற இந்தக் கலைஞன் .

எப்படி தளபதி படம் மகாபாரதக் கர்ணன் கதையின் நவீன வடிவமோ அதுபோல ராவணன் படம் ராமாயணத்தின் நவீன வடிவம் . அப்படியே ராமாயணக் கதையாக இருந்திருந்தால் இது இன்னொரு வழக்கமான மணிரத்னம் படமாகவே இருந்திருக்கும் . ஆனால் ராமாயணத்தை நவீனமாக எழுதியது மட்டுமின்றி திருத்தியும் எழுதிய அந்த மாவீரத்தால் நூறு தலை கம்பீரத்தோடு ஜொலிக்கிறது இந்த ராவணன் .

மலைவாழ் மக்களில் ஒருவனாக--- (ஒரு பக்கம் கட்டைப் பஞ்சாயத்து செய்பவன் என்று வசனத்தில் கூறப் பட்டாலும் )---அந்த மக்களின் காவலனாக வாழும் நேர்மையான வீரமான முரட்டு ராவணன்தான் வீரய்யன் (விக்ரம்) . அந்த மனிதன், திடீரென்று டி எஸ் பி தேவ் என்ற ராமனின் (பிருத்வி ராஜ்) மனைவியான சீதை போன்ற ராகினியை (ஐஸ்வர்யா ராய்) கடத்திக் கொண்டு வந்து வனத்தில் (அசோக வனம்?) சிறை வைக்கிறான் . வீரைய்யனுக்கு ஒரு முரட்டு அண்ணன் சிங்கராசு (பிரபு)
வீரய்யனின் நிறம் , உடல் , காட்டுத்தனம் , தன்னைக் கடத்திய விதம் போன்றவற்றால் வீரய்யனை அசுர ராவணனாகவே பார்க்கிறாள் ராகினி ஒரு நிலையில் தன்னை ஏன் வீரைய்யன் கடத்தினான் என்ற உண்மை ராகினிக்கு தெரிய வருகிறது .

வீரய்யனின் தங்கை வெண்ணிலா (பிரியாமணி ) சூர்ப்பனகை போன்ற தைரியமான பெண் . ராமாயணக் கதையில் தன்னிடம் காதலைச் சொன்ன சூர்ப்பனகையை--- பிடிக்காவிட்டால் கண்ணியமாக ஒதுக்கியிருக்க வேண்டிய--- லக்ஷ்மணன் அவள் மூக்கறுத்து அநியாயமாக அசிங்கப்படுத்தினான் . இந்த ராவணன் படத்தில் வீரைய்யன் தன் தங்கைக்கான கல்யாண ஏற்பாட்டுக் கொண்டாட்டங்களில் இருக்கும்போது அவனைக் கைது செய்ய , டி எஸ் பி தேவ் தலைமையில் ஊடறுக்கும் போலீஸ் , ஒரு நிலையில் வீரைய்யன் தங்கை வெண்ணிலாவை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போகிறது . அங்கு எல்லா போலீசாரும் சேர்ந்து வெண்ணிலாவை சீரழிக்கின்றனர் . வெண்ணிலா தற்கொலை செய்து கொள்கிறாள் .

தங்கையை அவமானப்படுத்தியவன் வீட்டுப் பெண்ணை தூக்கி வந்து சிறை வைப்பதன் மூலம் , தமது குடும்பத்துப் பெண் அவமானப் படும்போது ஏற்படும் வலியை அவர்களும் உணரவேண்டும் என்பதற்காக, ராவணன் சீதையைக் கடத்தியது ராமாயணம் . தன் தங்கையின் அவலம் மற்றும் மரணத்துக்குக் காரணமான டிஎஸ்பி தேவ் வின் மனைவியைக் கடத்திப் பிரித்து வைப்பதன் மூலம் , தான் அனுபவித்த வலியில் கால்பகுதியையாவது தேவுக்குத் தரவேண்டும் என்பது வீரய்யனின் எண்ணம் .

ஆனால் அங்கு ராவணனுக்கு நிகழ்ந்த எதிர்பாராத அதே சலனம் இங்கு வீரய்யனுக்கும் . ஆம் ! அழகி(ய)ல் மயக்கம் . அடுத்து காதல் .

மனைவியைத் தேடி தேவ் (அரசாங்கப் ) படை பலத்தோடு காட்டுக்கு வருகிறான் .

காட்டின் சகல ஏரியாக்களையும் அறிந்த--- குரங்கு போல மரம் பாறை எல்லாம் தாவித்தாவி ஏறும் திறன் வாய்ந்த--- ஒரு வன ஊழியர் (கார்த்திக்) தேவுக்கு துணை வருகிறார் (அனுமன் போல் என்பதை சொல்லவும் வேண்டுமோ?)

பிரச்னை வெடிக்கிறது . ராமாயணத்தில் ராமனின் தம்பி விபீஷணன் ராமனின் படைபலத்தைப பற்றி ராவணனிடம் சொல்லி சமாதானமாகப் போகலாம் என்கிறான் . இங்கும் வீரய்யனுக்கு அப்படி ஒரு (பிளஸ் டூ வரை படித்த) தம்பி . அந்த ராமனாவது விபீடணனை ஏற்றான் . ஆனால் இந்த நவீன ராம(தேவ)ன் வீரய்யனின் தம்பியை கொடூரமாக சுட்டுப் பொசுக்குகிறான் .

தன் கணவனை விட வீரய்யன் உண்மையில் நல்லவன் என்பதை உணர்ந்த ராகினி வீரய்யனின் காதலை ஏற்கும் மனநிலைக்கு வருகிறாள். பதிலாக தன் கணவனை உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தக் கூடாது என்று மட்டும் வீரய்யனிடம் கேட்கிறாள் .

ஒரு நிலையில் வீரய்யனும் தேவும் இரு மலை முகடுகளுக்கு இடையேயான ஒரு பெரிய மரப் பாலத்தில் மோதுகிறார்கள் . எப்படியாவது வீரய்யனைக் கொல்லவேண்டும் என்று தேவ் முயல . மாறாக தேவ் வைக் கொல்ல வாய்ப்பு வந்தும் , ராகினிக்கு கொடுத்த வாக்குக்காக தேவுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறான் வீரய்யன் .

ராகினியையும் கணவனோடு அனுப்பியும் வைக்கிறான் .

வீரய்யன் நடந்து கொண்ட விதம் பற்றி ராகினியிடம் தேவ் கேட்க, ராகினி வீரய்யன் பற்றி மிக உயர்வாக சொல்ல, மனைவியையே சந்தேகப் படுகிறான் தேவ் இனி தேவுடன் வாழ்வதை விட , காதலை மட்டும் சொல்லியபடி, வாய்ப்பிருந்தும் விரல் கூட படாமல் வைத்திருந்த வீரய்யனுடன் இருப்பதே மேல் என்ற உணர்வுடன் அவனைத் தேடி வருகிறாள் ராகினி .

காதலை மனம் திறந்த நெகிழ்வோடு பரிமாறும் தருணம் , பெரும் படையுடன் வரும் தேவ் வீரய்யனை சுட்டுக் கொள்ள முயல்கிறான் . துப்பாக்கி குண்டு சீறி வரும் தருணம் வீரய்யனைக் காப்பாற்றி துப்பாக்கிக் குண்டை தான் வாங்க ராகினி முயல, அவளைக் காப்பாற்றி எல்லாக் குண்டுகளையும் தன் மீது வாங்கிக் கொண்டு,

நல்ல காதலனாய் காவலனாய் தலைவனாய் ஆண்மகனாய் மாவீரனாய் சொல்லப் போனால் நிஜமான அவதார புருஷனாய் மரணம் அடைகிறான் வீரய்ய ராவணன் .

இப்படி முழுக்கதையையும் தெரிந்து கொண்டு பார்த்தால் கூட எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஒரு அற்புதமான படம் ராவணன் . சொல்லப்போனால் இந்தப் படத்தில் இவ்வளவு விஷயம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு பார்த்தால் இன்னும் கூட ஆழமாக மணியான இரத்தின உணர்வுகளை ரசிக்க முடியும் . கம்பநாடன் எழுத முடியாமல் விட்டு விட்டுப் போன கண்ணீர்த் துளிகளை மையாக ஊற்றி கடைசிக் காட்சிகளை எழுதியிருக்கிறார் மணிரத்னம் .

வழுக்கும் ஆபத்தான பாறையில் வழுக்கிச் சறுக்கியபடி விக்ரம் பாய்ந்து வருவது , உச்சியில் இருந்து குதிக்கும் ஐந்வர்ய்ச்ஸ் ராய் மரத்தில் தொங்கி கிளை உடைந்து பாய்ந்து சுழன்றுஅருவி நீரில் விழுவது , பின்னர் இருவரும் நீர்ச் சிதறல் விளையாடும் வழுக்குப் பாறையில் விழுதுகளைப் பிடித்தபடி ஏறுவது போன்ற காட்சிகள் நாம் பார்ப்பது சினிமாதான அல்லது நாமும் காட்டுக்குள் நின்றபடி பார்க்கும் நிஜக் காட்சிகளா என்ற பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன .

விகரம் .. உங்களைப் பாராட்ட தமிழில் கூடப் போதுமான வார்த்தைகள் இல்லை . பக் பக் சொல்லி கழுத்தைக் குலுக்கி தலையை உலுக்கி தட்டிக் கொண்டு கம்பீரப் புன்னகையோடு கண்களை விரிக்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் ஒற்றைத் தலையின் பக்கவாட்டில் பத்துத் தலைகள் முளைப்பதை மானசீகமாக உணரமுடிகிறது .

முழு முகம் மறைக்கும் மேக்கப்பில் கண்களை சிமிட்டியபடி சுருதி விலகிய ராகத்தில் பேசிய சீதைகளையே இதுவரை சினிமாவில் பார்த்த நமக்கு நிஜ சீதையின் உணர்வுகளின் அருவியாக பிரமிக்க வைக்கிறார் ஐஸ்வர்யாராய் .

லொக்கேஷன்கள் , சந்தோஷ் சிவன் மணிகண்டன் இவர்களது ஒளிப்பதிவு சமீர்சந்தாவின் கலை இயக்கம் இவை மணிரத்னத்தின் படைப்பாற்றலோடு இணைந்து தொழில்நுட்ப ரீதியாக அசுர பலம் கொண்ட படமாக ராவணனை மாற்றியுள்ளன . பெரிதாக ஏமாற்றியது ஏ ஆர் ரகுமான் . (ஏன், ரகுமான் ? ஏன் ?)

"சோத்துல பங்கு கேட்டா எலையப் போடு ; சொத்துல பங்கு கேட்டா தலையப் போடு " என்கிறார் வைரமுத்து . காட்டில் வாழும் அந்த இயற்கை மனிதர்களுக்கு சொத்தே சோத்துக்காகத்தானே கவிஞரே !

பிரியாமணியின் பிளாஷ்பேக் காட்சிகளில் துவங்கி கடைசி வரை வசனங்களால் அசத்தியிருக்கிறார் சுஹாசனி மணிரத்னம் .
படத்தின் முதல் பகுதி, சற்று இறங்கி, கதையிலும் பாய்வு இல்லாமல் கொஞ்சம் பயமுறுத்தியது நிஜம் ஆனால் இரண்டாம் பகுதியில் எல்லா விதங்களிலும் மகுடம் தொட்டுவிட்டார் மணிரத்னம் .

அந்த தொங்குபால சண்டைக் காட்சி பிரம்மாண்ட பிரம்மாதம் .

தான் கிடைத்த பின்னும் வீரய்யனைக் கொல்லத் துடிக்கிற கணவனைப் பார்தது " நீங்க தேடி வந்தது என்னையா? இல்லை அவரையா?" என்று ராகினி கேட்கும் இடம் திரைக்கதையின் சிகரம் என்றால் ....

வீரய்யன் ராகினி இருவரின் தனித்தையான புன்னகைக்கும் புகைப் படங்களை வேகமாக (தேவ சுழற்றுவது போல ) சுழற்றிக் காட்டி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்பது போல தேவ் உணர அதன் மூலம் அவன் தன் மனைவியை சந்தேகப் படுகிறான் என்பதற்கான முன்னோட்டத்தை அழுத்தப்படுத்தயிருக்கும் உத்தி டைரக்ஷனின் உச்சம் .

மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படம் வெளிவந்த போது, சில பல காரணங்களுக்காக, சொல்ல வந்த கதைக்கு எதிராகவே சிலகாட்சிகளை மணிரத்னம் வைத்தார் என்று விமர்சனங்கள் எழுந்தது உண்டு . ஆனால் இந்தப் படத்தில் அப்படி எதுவுமே சொல்ல முடியாத அளவுக்கு ----எந்த விஷயத்திற்காகவும் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் ---சொல்ல விரும்பிய கதையை நூறு சதவீத துணிச்சலோடு சொல்லியிருக்கும் விதத்தில்

திரையுலகின் சுப்ரமணிய பாரதியாக உயர்ந்து நிற்கிறார் மணிரத்னம் . பாஞ்சாலி சபதம் எழுதிய பாரதி ஒரு வேளை சீதையின் கேள்விகள் என்று எதுவும் எழுதி இருந்தால் இப்படித்தான் எழுதி இருப்பான் .

வீரா சுடப் பட்டு ராகினியைப் பார்த்தபடியே பாதாளத்தை நோக்கிப் பயணிக்கும் போது காற்றும் ஒலியும் கசியும் ஆன்மாவின் நடுக்கமுமாக ராகினி வீரா என்று அழைப்பது, யுகயுகமாக அடக்கி வைக்கப் பட்டு திடீரென வெளிப்பட்ட சீதையின் குரலாகவே ஒலிக்கிறது .

வெகு ஜன மக்கள் பார்க்கும் திரையரங்கில் நாம் இந்தப் படத்தைப் பார்த்தபோது படம் முடிந்த பின்பு அவர்கள் முகத்தில் நாம் பார்க்க முடிகிற--- உறைந்து கிடக்கும் அந்த பிரம்மிப்புதான் மணிரத்னத்திற்குக் கிடைத்திருக்கும் முதல் விருது .

மணிரத்னத்திற்கு இந்த அற்புத தருணத்தில் ஒரு வேண்டுகோள் . கர்ணன் கதையில் இருந்து தளபதி எடுத்தது உங்களின் சாதனையல்ல . அது ஒரு நிகழ்வு . ஆனால் ராமாயணத்தில் இருந்து வந்துள்ள ராவணன் உங்கள் சாதனை. ஆனால் இதை விட உங்களுக்கு முக்கியமாக இன்னொரு கடமை இருக்கிறது .

சிலப்பதிகாரத்தை நீங்கள் முழுமையாக உள்வாங்கி உங்கள் பாணியில் ஒரு படமாக எடுக்க வேண்டும் . இந்தக் கதைகளை விட உங்களுக்கு அது பிரம்மாதமாக கைவரப் பெறும் என்பதற்கு அடையாளம்தான் உங்களது மறக்க முடியாத மௌனராகம் படம் .

உங்களது இன்றைய திரைக்கதை மற்றும் தொழில்நுட்பத் திறமையில் சிலப்பதிகாரம் படமாக வெளிவந்தால் .....
என்றென்றும் உலகின் சிறந்த பத்துப் படங்களில் ஒன்றாக --- மாற்ற முடியாத சாதனையாக மாறி, அது உங்களின் நிரந்தரமான சரித்திரமாகவே அமையும் . அவசியம் செய்யுங்கள்

இராவணன் ---- மணியான ரத்னமான அவதாரம் !


Wednesday, June 9, 2010

# ஈழத் தமிழனைக் கேவலப் படுத்தும் மலையாளப் படம்







சுரேஷ் கோபி என்ற மலையாள நடிகர் கதாநாயகனாக நடிக்க முகமது ரபி என்பவரின் தயாரிப்பில் பிஜு வட்டப்பாரா என்பவர் இயக்கிய ராம ராவணன் என்ற மலையாளப் படத்தைப் பார்க்க, சென்னையில்ஓர் அழைப்பு வந்தது . 'என்னடா இது திடீரென எலி சட்டை போட்டுக் கொண்டு வருகிறது என்றஎண்ணத்தில் போனால் .....

ரத்தம் கொதித்தது !

மலையாள எழுத்தாளர் மாதவி குட்டி என்கிற கமலாதாஸ் என்கிற கமலா சுரையா என்பவர் பலப்பல வருடங்களுக்கு முன்பு எப்போதோ எழுதிய ஒரு நாவலைத் தழுவி எடுக்கப் பட்டிருந்த அந்தப் படம் இலங்கையில் ஈழத் தமிழர் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது . ஆனால் அடிப்படையையே தகர்க்கிற அராஜகம் !

எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல , வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போல , கண் பார்வை மங்கியவனின் கண்களைப் பிடுங்கி அரைகுறைப் பார்வையையும் அழிப்பது போல , ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் ஈழத் தமிழர்களின் வாழ்வையும் கேவலமாகச் சொல்லி, தமிழ் நாட்டுத் தமிழர்களையும் அசிங்கப் படுத்தி அவமானப் படுத்தி , போராளிகளைப் பயங்கரவாதிகளாக கோழைகளாக சுயநலவாதிகளாகச் சித்தரித்த அந்தப் படம் நம்மை நிலை குலைய வைத்தது .

இதை எல்லாம் விட முக்கியமாக சிங்களர்கள் நல்லவர்கள், அன்பானவர்கள், புத்தனின் வழி வந்தவர்கள் , தியாக சீலர்கள் , பற்றற்றவர்கள் , என்று மீண்டும் மீண்டும் கூறி தமிழர்களின் போராட்டம் காட்டுத் தனமானது என்று பச்சைப் பொய் சொல்கிறது .அது மட்டுமல்ல இலங்கையில் உள்ள தமிழன் எல்லாம் இங்கிருந்து பிழைக்கப் போனவன்தான் . இலங்கை அவ்னது சொந்த மண் இல்லை என்று மறைமுகமாக பசப்ப முயல்வதோடு இந்திய தேசத்தில் தமிழனுக்கு (தாயகத் தமிழனையும் சேர்த்து )உள்ள உரிமையை விட தமிழ் நாட்டிலே கூட சிங்களனுக்கு அதிக உரிமை உண்டு என்று பிதற்றுகிறார்கள் இந்த படத்தை எடுத்தவர்கள். .

தண்ணீர் விசயத்தில் தமிழனை ஏமாற்றுவது போதாதா? ரத்த விஷயத்திலும் ஏமாற்ற வேண்டுமா? அடப் பாவிகளா!

படத்தில் சொல்லப் படும் கதையைப் பார்த்தாலே எப்பேர்ப்பட்ட வஞ்சகம் இந்தப் படம் என்பது புரியும் . இவர்கள் இந்தப் படத்தை பிலிமில் எடுத்தார்களா இல்லை அயோக்கியத்தனத்தில் எடுத்து அக்கிரமத்தில் பிரதியிட்டார்களா என்ற ஆத்திரம் எழும் .

இவர்கள் சொல்லியிருக்கும் -- இல்லையில்லை விட்டிருக்கும் கதையைப் பாருங்கள்.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழன் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்குப் பிழைக்கப் போனானாம் . அவன் பெயர் அண்ணாதுரை . அங்கு ஒரு சிங்களவன் அந்தத் தமிழனுக்கு வாழ்க்கை அளித்து வசதி செய்து கொடுத்து , வியாபாரம் செய்ய வைத்து பணக்காரனாக வாழ விட்டானாம் . எப்படி இருக்கு?

(கொழும்பு வீதிகளில் தமிழனை அநியாயமாக அடித்துக் கொன்ற சூழலில் சில மனிதாபிமான சிங்களர்கள் தற்காலிக தமிழர்கக்ளுக்கு அபயம் கொடுத்திருக்கிறார்கள் மறுக்கவில்லை . ஆனால் வாழ்வளித்ததாக எல்லாம் கூறுவதைப் பார்த்தால் .... அய்யகோ!.

பிறகு அந்த சிங்களவன் மகள் -- ஒரு சிறுமி -- அடிக்கடி தமிழகம் வருவதும் உண்டாம் . தமிழகத்தில் உள்ள அண்ணாதுரையின் கிராமத்து வீட்டில் அண்ணாதுரையின் பிள்ளைகளோடு தாயாய்ப் பிள்ளையாய் பழகுவது உண்டாம்


சிங்களவனால் ஓகோவென்று வாழ்ந்த தமிழன் தமிழகம் வந்து சிங்களவன் கொடுத்த காசால் இங்கு நன்றாக வாழ்கிறானாம் . (இந்த காட்சி யோசிக்கும்போதுதான் ஒருவேளை சம்மந்தப் பட்ட நபர்களுக்கு இப்படி ஒரு படம் எடுக்க சிங்களவன் பொட்டி கொடுத்திருப்பானோ? )

இரண்டு குடும்பங்களுக்கு இடையே கடிதப் போக்குவரத்து எல்லாம் இருக்கிறதாம் . ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருக்கிறார்களாம் (எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ? )

இந்த நிலையில் அந்த அன்பான சிங்களவனை இலங்கையில் ஆயுதம் ஏந்திப் போராடும் தமிழ்ப் போராளிகள் அநியாயமாக கொன்று விடுகின்றனராம் கொன்றவர்களில் ஒருவன் தான் திருச்செல்வம் . கதாநாயகன் .

திருச்செல்வம் ஒரு நிலையில் திருட்டுத்தனமாக தமிழகம் தப்பி வந்து விடுகிறானாம் . அவனது சில போராளி நண்பர்களும் இங்கே இருக்கின்றனராம் . அவர்களுக்கு அண்ணாதுரையின் பிள்ளைகள் உதவுகின்றனர் . ஒரு காலத்தில் அண்ணாதுரை குடும்பத்தோடு வாழ்ந்த‍‍‍‍‍‍‍, இப்போது சிதலமாக இருக்கிற வீட்டில் திருச்செல்வத்தைத் தங்க வைக்கின்றனர் .

அங்கே இலங்கையில், செத்துப் போன சிங்களவனின் மகள் மனோமி யாருமல்லாத அனாதையாகி விடுகிறாளாம் . அவளைக் காப்பாற்ற யாருமே இல்லையாம்

அந்தப் பெண் பிழைக்க வழியின்றி தமிழ்நாட்டில் உள்ள அண்ணா துரையிடம் அடைக்கலம் தேடி வந்து காப்பாற்ற சொல்லி இறைஞ்சுகிறாளாம். அவரும் ரொம்ப நல்லவராம் . அன்போடு ஏற்கிறாராம்.

ஆனால் அவரது மகன்கள் மகள்கள் எல்லோரும் ஒரு சிங்களப் பெண்ணை ஏற்க முடியாது என்று கல் மனசோடு கூறுகின்றனர்களாம் . அவர்கள் கெட்டவர்களாம் .


இந்நிலையில் அண்ணாதுரையின் பழைய வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் திருச்செல்வத்தை மனோமி பார்தது விடுகிறாள் . தன் தந்தையை கொன்றவன் என்பதைத் தெரிந்தும் அவனை மன்னித்து காதல் கொள்கிறாளாம் அவ்வளவு நல்லவளாம் அவள்

சரி திருச்செல்வம் யார் தெரியுமா ? கவிஞர் கண்ணதாசன் போல கவிஞராக ஆக வேண்டும் என்று ஆசைப் பட்டு பின்பு தவறான வழியில் போய் பயங்கரவாதியானவனாம் . தமிழகத்தில் இருந்து இலங்கை சென்று பயங்கரவாதத்தில் ஈடுபட்டவனாம்

(இப்படி சொல்வதன் மூலம் இலங்கையில் விடுதலைக்காகப் போராடுகிற எல்லோரும் தமிழ்நாட்டில் இருந்து போனவர்கள்தான் அந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் அல்ல என்று கதை விட்டிருக்கும் இவர்களை என்ன செய்தால் தகும்? )

அதுவும் பெற்ற தாயைக் கண்டு கொள்ளாமல் பரிதவிக்க விட்டு விட்டு இலங்கை சென்று பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு இப்போது மீண்டும் தமிழகம் வந்து மறைந்து வாழ்பவனாம் திருச்செல்வம் அப்படிப்பட்ட திருச்செல்வத்தால் தனது தந்தையே கொல்லப் பட்ட போதும் அவனை மன்னித்து காதலிக்கிறாளாம் அந்த சிங்களத்தி . அது மட்டுமல்ல சிங்கள நாட்டில் புத்தன் பற்றி எழுதப்ப பட்ட பல நூல்களைக் கொடுத்து அவனைப் படிக்கச் சொல்லி "அன்பு பாசம் மனிதாபிமானம் மனித நேயம் எல்லாம் என்ன என்று எங்களைப் பார்த்துப் புரிந்து கொள்" என்கிறாள்

மனோமியே திருச்செல்வத்துக்கு வாழ்வு கொடுக்க முனைந்தும் அண்ணாதுரை மறுக்கிறாராம் . "அவன் பயங்கரவாதி அவனுக்கு உன்னை கல்யாணம் செய்து கொடுக்க மாட்டேன்" என்கிறாராம்

அதே நேரம் அண்ணாதுரையின் பிள்ளைகள் மனோமியை ஏற்காததால் அவள் மனம் குமைந்து அண்ணாதுரை வீட்டில் இருந்து வெளியேறுகிறாளாம் . அதில் மனம் நொந்த அண்ணாதுரை தன் பிள்ளைகளுக்கு சொத்தில் எந்தப் பங்கும் தராமல் பணத்தை வைத்து முதியோர் இல்லம் வைத்து விடுகிறாராம் .


இதற்கிடையில் போராளியாக இருந்து விட்டு இப்படி காதல் என்று போகலாமா எனக் கேட்கும் மற்ற போராளிகள் கெட்டவர்களாம். உடனே அவர்களுக்குள் அடித்துக் கொள்வார்களாம் . உடனே திருச்செல்வம் "நீங்க ரொம்ப காட்டுத்தனமா இருக்கீங்க , உங்க சித்தாந்தம் காட்டுத்தனமா இருக்கு" என்று அவர்களோடு சண்டையிடுகிறான் .

போலீஸ் திருச்செல்வத்தை நெருங்க திருச்செல்வம் தப்பி ஓடுகிறான் . அவன் தாயை மீண்டும் சந்திக்கிறான் , அங்கு பார்த்தால் ... தமிழ்ப் போராளியான திருச்செல்வத்தின் தாய்க்கு பணிவிடை செய்து கொண்டு அங்கு உத்தமி போல வாழ்வது சிங்களப்பெண் மனோமியாம் (எப்பூஊஊஉடி?)

திருச்செல்வத்தின் தாயே தன் மகனிடம்" நீ மனோமியோடு போய் எங்காவது வாழ்" என்று அனுப்ப, திருச்செல்வம் மனோமியோடு போலீசுக்கு பயந்து திருட்டுத்தனமாக ஓட இதுவரை அடைகலம் கொடுத்த போராளிப் பெண்ணே அநியாயமாக திருச்செல்வத்தை சுட்டு வீழ்த்துகிறாளாம்.

சிங்களப் பெண் மனோமி அவனுக்காக கண்ணீர் விடுகிறாளாம்


இந்தப் பைத்தியக்காரப் படம்தான் ராம ராவணன் .

என்ன ஒரு அற்பத்தனம் பாருங்கள் . !

படத்தில் போர்க்களமாகக் காட்டப் படும் ஒரே காட்சி எது தெரியுமா? தமிழ்ப் போராளிகள் சிங்களனை கொல்வது அதுவும் 'அநியாயமாக'க் கொல்வதுதான் .மற்றபடி சிங்களவனுக்கு எறும்புக்குக்
கூட துன்பம் இழைக்கத் தெரியாதாம் . போங்கடாங் ......! போராளிகள் எந்த அப்பாவி சிங்களனையாவது கொன்றதாக வரலாறு உண்டா? அப்படி அவர்கள் நினைத்திருந்தால் இலங்கையில் எத்தனையோ லட்சம் சிங்க‌ளனைக் கொன்றிருக்க முடியுமே !

இதைவிடக் கொடுமை என்னவென்றால் ஆடு திருடி அகப்பட்டவன் அடிக்கடி "நான் திருடல... திருடல...." என்று செயற்கையாக முனகுவதுபோல கதாநாயகி அடிக்கடி "நான் அன்பை போதித்த புத்தனின் மகள் " என்று உளறிக் கொண்டே இருக்கிறாள் .
இன்று சிங்கள புத்த்ர்களிடம் அன்பு இருக்கிறது என்று வாதிடுபவன் எவ்வளவு பெரிய மடையனாக மக்கட்டையாக மரமண்டையாக இருக்கமுடியும் .? இந்த படம் எடுத்தவர்களும் அந்த வரிசையில் !.

ஒரு காட்சியில் ஈழத் தமிழர்கள் எல்லாரும் வெறும் சாப்பாட்டு ராமர்கள் எனபது போல ஒரு அற்ப சிந்தையில் விளைந்த காட்சி .


தவிர அந்த சிஙகளப் பெண் தமிழக கிராமத்திலே இஷ்டம் போல சுத்தி வருவாளாம் . அவளை மற்ற தமிழ்ப் பெண்கள் எல்லோரும் "நீதான் எங்க அண்ணாதுரை அய்யா தத்தெடுத்து வளர்க்கிற சிங்களப் பெண்ணா . நல்லா இரும்மா" என்று வாழ்த்தும் ரீதியில் பேசுவார்களாம் . இது போல தமிழகத்தின் எந்த கிராமத்திலாவது இதுவரை ஒரு சம்பவம் நடந்ததாக படம் எடுத்த பக்கிரிகள் காட்ட முடியுமா?


படம் முழுக்க போராளிகளை டெரரிஸ்ட் .. டெரரிஸ்ட் என்று தேவை இல்லாத இடங்களில் எல்லாம் அந்த வார்த்தையைத் திணித்து வசனம் வருகிறது . (படத்தில் பல வசனங்கள் தமிழிலேயே வருகின்றன.) ஒருவேளை கேரளாவில் இருந்து காஷ்மீர் தீவிரவாதத்துக்கு ஆள் அனுப்புகிறவர்களை நினைத்துக் கொண்டு எழுதினார்களோ என்னவோ .


பெற்ற தாயை பரிதவிக்க விடுபவன் போராளி என்று ஒரு சரடு விட்டிருக்கிறார்களே ... அடச்சீ !

பெற்ற தாய், உடன்பிறந்த சகோதரி , , கட்டிய மனைவி இவர்கள் தமது கண் முன்னாலேயே சீரழிக்கப் படுவது கண்டு பொங்கி ஆயுதம் எடுத்தவன்தான் போராளி . டெல்லியில் காரியம் சாதிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ப‌வர்களுக்கு அது எப்படி தெரியும்?

இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரும் தமிழகத்தில் இருந்து போனவர்கள்தான் என்று ஒரு தொனி படத்தில் வருகிறது . உலக வரை படத்தை வரைந்த டாலமியே இலங்கையில் தமிழர்கள் இருந்ததாகத்தான் குறிப்பிட்டுள்ளார் . அதற்குப் பின்பு அங்கு உருவான இனம்தான் சிங்கள இனம் .

மாதவிகுட்டி நாவலை எழுதிய காலகட்டம் வேறு . அப்போது ஒரு வித்தியாசமான கதை முயற்சியில் அவர் இப்படி கற்பனையாக எதையோ உளறி எழுதி விட்டுப் போயிருக்கலாம் .

ஆனால் இப்போது ஓர் இனம் தன் சொந்த மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப் பட்டு அநியாயமாக அழிக்கப் பட்ட ரத்தக் கறை இன்னும் காய்வதற்குள் இப்படி ஒரு தவறான வரலாற்றை சொல்ல---- அநியாய ஆலாபன செய்ய‍‍‍ இவர்களுக்கு மனது வருகிறது என்றால் ......புரிகிறது!

இந்தியாவில் ‍‍, தென்னிந்தியாவில், தவறான அரசியல் போக்காக தமிழனை வெறுப்பவர்கள் கூட , இலங்கையில் தமிழினத்துக்கு நடக்கும் கொடுமைகளை எண்ணி உள்ளம் கசிகிற வேளையில், அவர்கள் மனதிலும் பொய்யை விதைத்து புளுகை வளர்த்து மேலும் தமிழனுக்கு எதிரான முட்டாள்தனமான கருத்தியலை வளர்க்க.... இலங்கை அரசு செய்யும் சதிக்கு சோரம் போன சிலரின் செயலே இது .

தவிர தமிழ்நாட்டிலும் விவரம் புரியாதவர் மனதில் விஷம் தூவலாமே !

இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் , வெளியுறவுத் துறைச் செயலர் , ஐ நா.வின் பான் கி மூனின் உதவியாளர் , இலங்கையின் ராணுவ ஆலோசகர் என்று நான்கு பதவிகளிலும் ஒரே நேரத்தில் உட்கார்ந்து கொண்டு ஈழத் தமிழர்களைக் கருவறுத்த பின்பு படம் எடுத்து பசப்புவதா கஷ்டம்?

மனசாட்சியுள்ள மலையாளிகளுக்கு ஒரு கேள்வி .

இலங்கைப் பிரச்னை என்பது சிங்களனுக்கும் மலையாளிக்குமான பிரச்னையாக இருந்திருந்தால் இப்படி ஒரு படத்தை நீங்கள் எடுப்பீர்களா? மனமுள்ளவர்கள் பதில் சொல்லட்டும் .


இது இப்படி இருக்க , படத்தின் அறிமுகக் காட்சியில் கலந்து கொண்ட நடிகர் சுரேஷ்கோபி "ஒரு தமிழன் எடுக்க வேண்டிய படத்தை மலையாளிகளாக நாங்கள் எடுத்திருக்கிறோம் " என்று உளறியது கொடுமையின் உச்ச கட்டம் .

சுரேஷ்கோபி !

தமிழன் உப்புப் போட்டு சோறு தின்பவன் சுரேஷ் கோபி . இன்னும் எத்தனை துரோகங்கள் துரோகிகள் இங்கு இருந்தாலும் மற்றவர்கள் அளவுக்கு தமிழன் சோரம் போகமாட்டான் .


இன்னும் கேரளாவில் கூட திரையிடப் படாத -- இப்படிப்பட்ட ஒரு ---கேவலமான --தமிழின விரோத --அற்பத்தனமான-- படத்தை ‍‍‍ திட்டமிட்டு --தமிழ்நாட்டில் கொண்டு வந்து இங்கு போட்டுக் காட்டுகிறார்கள் என்றால் என்ன ஆணவம் ? இது யார் கொடுத்த தைரியம்? யாரை ஆழம் பார்க்கும் செயல் ?


ஒன்று உறுதி !
இந்தப் படம் தமிழ்நாட்டில் ஒரு திரையரங்கில் திரையிடப் பட்டால் கூட அது கேவலம் .

அதோடு கேரளா உட்பட உலகின் எந்த மூலையில் இப்படம் திரையிடப் பட்டாலும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டியது தமிழனின் கடமை மட்டுமல்ல .

நாகரீகம் உள்ள -- தன் வீட்டுப் பெண்களை மானத்துடன் வளர்க்க விரும்புகிற ‍‍ ஒவ்வொரு நல்ல மனிதனின் கடமை கூட !