Sunday, March 28, 2010

#அங்காடித் தெரு --குறுகலான சந்தில் பிரம்மாண்டமான வாழ்க்கை




இயல்பில் கண்ணால் நாம் பார்க்கும் உலகம் , இயற்கை , காட்சிகள் யாவும் நமக்கு வட்ட வடிவமாகத்தான் தெரியும். (சரியாகச் சொன்னால் ஓவல் எனப்படும் நீள்வட்ட வடிவம்). ஆனால் திரைப்படம் பார்க்கும்போது திரையில் நாம் பார்க்கும் காட்சிகள் அன்று 35 எம் .எம். மில் சதுரமாகவும் இன்று சினிமாஸ்கோப்பில் செவ்வகமாகவும் தெரிந்தன; தெரிகின்றன.

ஆனால் படம் பார்க்க ஆரம்பித்த ஓரிரு நிமிடங்களுக்குள் நாம் புறக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் செவ்வக வடிவம் மறைந்து நாம் இதயத்தின் கண்களுக்கும் ரசனையின் கண்களுக்கும் நீள்வட்ட வடிவத்தில் காட்சிகள் நிகழ ஆரம்பித்து விட்டால் பின்னர் அதை திரைப்படம் என்று மட்டும் சொல்லக்கூடாது . வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டும் . அப்படி ஒரு வாழ்க்கைதான் அங்காடித் தெரு .

அங்காடி என்ற சொல் , சிலப்பதிகாரம் தந்த சொல் . காவிரிப்பூம்பட்டினத்தின் நகர்ப்புறப் பகுதியான பட்டினப்பாக்கத்தில் பகலில் இருந்த கடைகளுக்கு நாளங்காடி என்று பெயர் . இரவில் இருந்த கடைகளுக்கு அல்லங்காடி என்று பொருள் . (அல் என்றால் இரவு )

அந்த அங்காடி என்ற வார்த்தையை சுமார் 17 நூற்றாண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு கொண்டு வந்திருக்கிறார் வசந்தபாலன் (அங்காடித் தெரு வெளியான அன்று பகல் ஒரு மணிக்கு கே டிவியில் பூம்புகார் படம் ஒளிபரப்பியது ஒரு சுவையான பொருத்தம் )

சென்னை தி.நகரில் உஸ்மான் ரோட்டில் , பனகல் பார்க்கில் , ரெங்கநாதன் தெருவில், பிரம்மாண்டமாய் ... பிரம்மா...ண்டமாய் . பிரம்மாண்டமா....ய் , உயர்ந்து நிற்கும் பல மாடிக்கட்டிட துணிக்கடைகளில் .... ஆடை மட்டுமல்லாது ஊசி முதல் ஒட்டகம் வரை அனைத்தும் விற்கிற கடைகளில்... சிறுசும் பொடுசுமாய்.. நண்டுஞ்சிண்டுமாய் ... சுக்கும் இஞ்சியுமாய் ... ஒரே சீருடை அணிந்து பரபரப்பாய் வேலை பார்க்கும் ஆண்பெண்கள் .. அவர்தம் பாவனைகள் , நெல்லை வழக்குப் பேச்சு , உறைந்த முகங்கள் , இறந்த உதடுகள் , சலித்த கண்கள் .. !

இவையெல்லாம் கொல்லூரில் இருந்தும் நெல்லூரில் இருந்தும் துணி எடுக்க வரும் ஷெட்டிகள், ரெட்டிகள் வரை அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . பல நேரம் துணி ஸ்டேண்டுகளோடு தானும் ஒரு இரும்பாய் உறைந்து நிற்கும் அந்த பெண்கள் சில சமயம் நாம் எடுத்திருக்கும் உடையைப் பார்த்து "அண்ணே . இது வேணாம் .. சீக்கிரம் கிழிஞ்சிரும் .. வேற எடுத்துக்கிருங்க .." என்று காதருகில் கிசுகிசுத்து விட்டுப் போவதுண்டு .

பல சமயம் நமக்கு துணி காட்டிக் கொண்டிருக்கும்போதே சக ஊழியர் யாரோ வந்து இமைக்கும் நேரத்துக்குள் ஏதோ சொல்லிவிட்டுப் போக கோபமாக காற்றுக்குப் பதில் சொல்வதுண்டு . பொங்கும் கண்ணீரை துடைக்காமல் தானாக மீண்டும் கண்ணுக்குள் இழுத்துக் கொள்வதுண்டு . அது என்னவாக இருக்கும் என்று ஒரு நிமிடம் நம் மனசில் தோன்றினாலும் உடை எடுக்கும் சந்தோஷத்தில் அடுத்த நொடி அதை மறந்து விடுவதுமுண்டு .

மறக்கவில்லை வசந்தபாலன் !

24 மணிநேரத்தில் 48 மணி நேரத்துக்கு உழைக்கும் அந்த ஆயிரக்கணக்கான தேனீக்களின் நில்லாத ஓட்டத்தை வியர்வையும் கண்ணீருமாக ரத்தமும் சதையுமாக அலறலும் அரற்றலுமாக பாறாங்கல்லில் ஆணி அடித்தது போல பதிவு செய்துள்ளார் இயக்குனர் .

குறுகலான சந்துக்குள் ஒரு பிரமாண்டமான வாழ்க்கை !

அந்த தொழிலாளர்களுக்கு விதிக்கப்படும் பாலியல் வன்முறைகள், மனித உரிமை மீறல்களை கருத்தாண்மையோடு வெளிப்படுத்தி தமிழ்நாட்டில் பெரிய புலனாய்வுப் பத்திரிக்கைகள் எல்லாம் செய்யவேண்டிய ஆனால் செய்யத் தவறிய ஒரு காரியத்தை அல்லது செய்ய விரும்புவது போல் நடித்த ஒரு காரியத்தை தான் முன்னின்று செய்திருக்கிறார் . அதே நேரம் சமூகப் பொறுப்பு என்பதற்காக அதை ஒரு ஆவணப் படம் போல் உருவாக்கி ரசனைப் பட்டினியை ஏற்படுத்தாமல் உணர்வும் உயிர்ப்புமான படைப்பாக உருவாக்கியவிதத்தில் வசந்தபாலனிடம் ஒரு கலைத் தாய்மை பிரகாசிக்கிறது .

நெல்லை மாவட்டம் ஈட்டமொழியில் சைக்கிள் டியூப்பை நறுக்கி சிறு சிறு வட்டமாக ஒன்றன் மேல் ஒன்றாக சுற்றி கிரிக்கெட் பந்து தயாரித்து வெயிலோடு விளையாடும் பனிரெண்டாம் வகுப்பு ஜோதிலிங்கம் . !

"பத்தாவது படிக்கிற புள்ள 420 மார்க்குதான் எடுக்குது . ஆனா நான் ப்ளஸ் டூவுல பத்து மார்க் சேர்த்து 430 எடுத்தும் என்னை ஏன் அடிக்கிற? "என்று பெற்ற அப்பனிடம் மல்லுக்கட்டும் பாண்டி . இருவரும் நண்பர்கள் . ஜோதிலிங்கம் 1200 க்கு 1085 எடுத்தும், திடீரென தந்தை விபத்தில் இறந்து போனதால் தங்கச்சிகளையும் அம்மாவையும் காப்பாற்ற வேலைக்குப் போகவேண்டியுள்ளது .

சென்னையில் பலமாடி துணிக்கடைக்கு வேலைக்கு ஆட்கள் வேண்டுமென்று ஈட்டமொழியில் ஆட்டோவில் ஸ்பீக்கர் கட்டி அறிவிப்பு செய்து ஆள் எடுக்க , திருனவேலி டவுனில் ஒரு ஓட்டல் மாடியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரள கசாப்புக்கடைகளுக்கு போகும் தமிழ்நாட்டு அடி மாடிகள் போல நூற்றுக்கணக்கான பேரோடு சென்னை வந்து சேர்கின்றனர் இருவரும் .

அடி மாடுகளுக்காவது அடுத்த வாரத்தில் மரணம் என்னும் விடுதலை . ஆனால் இங்கே வேலை என்ற பெயரில் நரம்புகளை உருவி வயலின் செய்து வாசிக்கும் அதிகாரவர்க்கம் . கொட்டடிப் பன்றிகளைப் போல உண்ணவும் கழிக்கவும் உறங்கவும் நொந்து சந்திக்கும் அவலம் . ஆனாலும் ஊரில், வறண்ட பூமியில் காய்ந்து கிடக்கும் கண்மாய்களின் விஸ்தீரணத்தில், பாசம் வைத்திருக்கும் அம்மாவுக்கும் தங்கைகளுக்கும் அனுப்பும் கொஞ்சம் காசு நீருக்காக உதிரம் சுருக்கி உழைக்கின்றனர் இருவரும் .

அதே போல பெண்கள் . திருச்செந்தூர்க்காரி கனி .... தோழிகள் .. பெண்கள் ...

சின்னத் தவறுக்கும் சிங்களத்தனமாய்த் தண்டிக்கும் சூபர்வைசர்...! அடியாள்! வேட்டை நாய்கள் . ஆண்களுக்கு என்றால் ரத்தம் தெறிக்கும் . பெண்களுக்கு என்றால் பாலியல் கொடூரம் வக்கரிக்கும் . அங்கே பொறிபறக்கும் நிமிடங்களிலும் குறுகுறுத்து முகிழ்க்கும் காதல்கள் . அதில் ஜோதிலிங்கம் கனி காதலும் ஒன்று

. இந்நிலையில் வேறொரு ஒரு காதல் ஜோடி நிர்வாகத்திடம் மாட்டிக் கொள்ள , வேலை போய்விடும் என்று பயந்து காதலித்தவனே இல்லை என்று மறுக்க , அதோடு வேசி என்றும் திட்டி விட மாடியில் இருந்து குதித்து மரணித்து ரத்தப் பூவாய் பூத்து விடுகிறாள் செல்வராணி என்ற அந்தப் பெண் . இனி ஜோதிலிங்கம் கனியின் காதல் என்ன ஆனது என்பதுதான் கதை

---என்று, வழக்கமான படங்களுக்கு விமர்சனத்தில் கதை சொல்வது போல சொல்லி முடிக்கிற படம் அல்ல இது . லட்சக்கணக்கான தலைகளுக்கு மத்தியில் இரண்டு இளநீர் இதயங்கள் என்று ஒற்றை வரியில் கதை சொல்வதுதான் நியாயம் .

நாம் பார்க்கும் வழக்கமான வாழ்வில் நம்மிடையே நமக்கே தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு அற்புதமான கதையை கைபிடித்து அழைத்து வந்து நம் அருகே அமர வைத்து அசரவைக்கிறார் இயக்குனர் வசந்தபாலன் .

முக்கியக் கதையைச் சுற்றி , பல அற்புதமான குட்டிக் க(வி)தைகளும் குறுங்காவியங்களும் ,


நூல் பிடித்தது போல செல்லும் கதையில், தானே விரும்பி 'கட்டு'ப்படும் பூக்களைப் போல் சேர்ந்து திரைக்கதை மாலையாகின்றன . நாயகன் நாயகி கதைப்போக்குக்கு முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் எதிராகவும் எதிர்ப்பாகவும் நடக்கிற சம்பவங்கள் மாலையில் மின்னும் பட்டு நூலாய் ஜொலிக்கின்றன .


பராமரிக்கப் படாத பொதுக் கழிப்பறையை சுத்தம் படுத்தியதால் மட்டுமே சொந்தம் கொண்டாடி தொழில்தேடிக்கொள்ளும் நபர் "சிரி.. சிந்தி " என்கிறார் .

கண் இல்லாத ஆனால் இதயம் திறந்திருக்கிற தாத்தா" நினை .. நெகிழ் "என்கிறார் . பாலியல் தொழில் செய்த பெண் குட்டையான நபரின் தாம்பத்யம் மனசுக்குள் சிம்மாசனம் போட்டு அமர்கிறது . இப்படி பிரம்மாதமான விவரணைகளோடு விரிவாகப் பயணிக்கும் திரைக்கதை ,

அதே நேரம், இது போன்ற பெரிய கடைகளில் ரொம்பநேரம் நின்று கொண்டே வேலை செய்வதால் வரும் நோய் .. அதனால் பாதிக்கப் பட்ட கதாபாத்திரம் என்று ஆச்சர்யமூட்டும் ஆழத்திலும் பயணிக்கிறது . இப்படி ஒரு முழுமையான திரைக்கதையில் ஒரு படம் பார்த்து ரொம்ப நாளாச்சு .

"குழந்தை என்னைப போலவே குட்டையான உருவமா வார மாதிரி பொறந்துடுச்சே என்று அந்த மனிதன் வருந்த , மனைவியோ அப்படிப் பிறக்கனும்னுதான் நான் ஆசைப் பட்டேன் " என்று கூறி அதற்கு சொல்லும் காரணம் இதயத்தை உலுக்குகிறது .

அதே போல சென்னைக் கடையில் துணி எடுத்துக் கொண்டு டவுனில் வந்து இறங்கும் ஒரு தம்பதியிடம் சோதிலிங்கத்தின் தங்கை கடையின் பேர் போட்ட பையை காட்டி " மெட்ராஸ்ல இந்தக் கடையிலதான் எங்க அண்ணன் வேலை பாக்குது . அந்தப் பையத் தாரீயளா..." என்று கேட்டு வாங்கி மார்போடு அனைத்துக் கொண்டு ஓடும் காட்சியில் இதயத்தின் ஈரம் கண்களில் தெரிகிறது .

"விக்கத் தெரிஞ்சவந்தான் வாழத் தெரிந்தவன்" என்று ஒற்றை வரியில் உலகம் சொல்லும் ஜெயமோகனின் வசனங்கள் மறுபுறம் "கனி.. நீ இருக்க வேற பொண்ணப் பார்ப்பேனா ? கனியிருப்பக் காய்கவர்ந்தற்று" என்று ,

அழகான இளம்பெண்ணின் கண்ணாடி வளையல் போட்ட கையாகக் கன்னத்தைக் கிள்ளிவிட்டு செல்லமாய் குமட்டில் குத்தி விட்டும் போகிறது .

மற்ற விசயங்களை ஒப்பிடுகையில் ஒரு மாற்றுக் குறைவுதான் என்றாலும் , புருஷனுக்கு அடங்கிய பொண்டாட்டியாய் கடமை செய்திருக்கின்றன இசையும் பாடல்களும் .

பனங்காய் சுமக்கும் சிட்டுக்குருவிகளைப் பார்த்திருக்கிறோம் . ஹெர்குலிஸ் சுமக்க வேண்டிய உலக உருண்டையை சுமந்திருக்கிறது மகேஷ் என்னும் அறிமுக சிட்டுக்குருவி . அஞ்சலி விருது உயரங்களுக்கு வேகமாக ஏறிக் கொண்டிருக்கிறார் என்றால் "நிஜமாத்தான் சொல்றீங்களா ?"என்று யாரும் சந்தேகப்பட முடியாது . பாண்டி நிப்பாண்டி .

மனிதர்களைத் தள்ளி வைத்து விட்டு காற்றும் வெளிச்சமும் கட்டிப் பிடித்துக் கானம் பாடிக் காதலிக்கும் கிராமத்து வீதிகள் , காற்றே இல்லாமல் அதிசயமாய் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் ரங்கநாதன் தெரு இரண்டையும் இருவேறு துருவங்களாக நின்று ஒரே தரத்தில் பரிமாறுகிறது ஒளிப்பதிவு.

கனியின் தங்கைக்கு வேலை செய்யும் இடத்தில் ஏதோ பிரச்னை என்பதை சொல்லும்போது வயது பதிமூணு என்று வரும் தகவல் அடுத்து அவளுக்கு நடந்தது என்ன என்று யூகிக்க வைக்கிறது . அதே போல யாருமற்ற இரவில் கடைக்குள் கனியும் ஜோதிலிங்கமும் ஆடிப் பாடும் பாடல் காட்சியில் சர்கியூட் கேமராவைக் காட்டுவது அடுத்து என்ன என்று யூகிக்க வைக்கிறது . இந்த இடங்களில் எடிட்டர் இயக்குனரை இழுத்துப் பிடித்திருக்க வேண்டும் . அந்தப் பாடல் காட்சியில் சில நடன அசைவுகள் கதாபாத்திரமான கனிக்கு பொருத்தமாக இல்லை /அங்கு நடிகை அஞ்சலி தெரிகிறார் ..இந்த இடத்தில் இயக்குனர் வசந்தபாலன் , டான்ஸ் மாஸ்டரை இழுத்துப் பிடித்திருக்க வேண்டும் .

பண்டல் விழுந்து கழுத்தில் பட்டை போட்ட சூப்பர்வைசரை கிண்டல் செய்து பாடும் அந்தப் பாடல் (என்னதான் சிறியபாடலாக நின்றுவிட்டாலும் கூட ) படத்துக்கு எந்த விதத்திலும் உதவவில்லை ,

சமையலறையில் நிற்கும் அழகான பெண்ணின் முகத்தில் உள்ள சின்ன கரித்தீற்றலால் எப்படி அவளின் அழகை குலைத்து விட முடியாதோ .. அப்படி இந்த சின்னக் குறைகள் படத்தைப் பாதிக்கவில்லை .

குடும்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு நிற்கும் பிஞ்சுப் பூக்களின் ரத்தம் உறிஞ்சும் போக்கை கண்டித்த்ததோடு மட்டுமின்றி அதே படத்தில் அதே வீரியத்தில் வர்ணாசிரம ஏய்ப்பின் வக்கிரங்களைச் சுட்டிக்காட்டிய வசந்தபாலனின் அந்த தில்லுக்கு , தெனாவட்டுக்கு, ஒரு ராயல் சல்யூட் . அதே நேரம் சாமியிலும் தாய்மை சொன்ன கனிவுக்கு ஒரு கனியான (திருச்செந்தூர்க்காரி அல்ல) முத்தம் .

அங்காடித்தெரு ....
தரத்தில்
பல படிகள்
உயர்ந்தது என்றாலும்
அடையாளப்படி
ஆசியாவின் 'ஸ்லம் டாக் மில்லியனர்' !

Tuesday, March 23, 2010

# ஈசல் பூச்சித் தமிழ்ப் படங்கள்;"பில்டிங் ஸ்ட்ராங் : பேஸ்மென்ட் வீக் "





ஈசல் பூச்சித் தமிழ்ப் படங்கள்
-------------------------------------------
"பில்டிங் ஸ்ட்ராங் : பேஸ்மென்ட் வீக் "
**********************************************************

மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு "வெள்ளிக்கிழமை நடிகர்" என்ற ஒரு [பட்டப் பெயர் உண்டு . காரணம் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் அவரது படங்கள் வெளியாகும் . ஆனால் அவை எல்லாம் சின்ன பட்ஜெட் படங்கள் . ஜெய்சங்கரும் படப்பிடிப்புக்கு அவளவு ஒத்துழைப்பு கொடுப்பார் . பெரும்பாலும் போட்ட காசு வந்து விடும் . யாருக்கும் பெரும்பாலும் நஷ்டம் இல்லை . அதனால்தான் சினிமா உலகில் அவருக்கு அவ்வளவு நண்பர்கள் .

அவரது கதாநாயக மார்கெட் காலப்போக்கில் குறைந்த போது அவரை எல்லாருமே தங்களது படங்களில் வில்லன் , குணச்சித்திர கதாபாத்திரம்ம் என்று பல வாய்ப்புகளைக் கொடுத்து இரண்டாவது ரவுண்டிலும் அவரைத் தூக்கிப் பிடித்தார்கள் . அது பழைய கதை .

ஆனால் இன்று தமிழில் வெளிவருகிற எல்லா படங்களுமே ஒரு வாரப் படங்களாக மாறி விட்டன. நாளிதழைப புரட்டினால் கொசகொசவென்று குட்டிக்குட்டியாய் தமிழ்ப்பட விளம்பரங்கள் . ஒரு புதன் கிழமையில் விளம்பரம் வந்து வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகி திங்கள் கிழமை ஈயோட்டி செவ்வாய்க் கிழமை பெட்டிக்குள் பதுங்கி விட , புதன் கிழமை மறுபடியும் புது வரிசை .

ஈசல் பூசியின் வாழ்க்கை 24 மணி நேரம் என்றால் வெளிவரும் பல தமிழ்த் திரைப்படங்களின் வாழ்க்கை 7 நாட்கள்தான் .

போகிற போக்கில் எல்லா நடிகர்களுமே வெள்ளிக்கிழமை நடிகர்கள் ஆகிவிடுவார்கள் என்று தோன்றுகிறது . அன்று குறைந்த பட்ஜெட்டில் எல்லோருக்கும் பெரும்பாலும் லாபம் சம்பாத்தித்துக் கொடுத்த ஜெய்சங்கரை வெள்ளிக்கிழமை நடிகர் என்று சொன்னதில் கிண்டலும் இருந்தது .
ஆனால் இன்று கதையை மீறிய -- நடிகர்களின் மார்க்கெட் அளவை மீறிய செலவில் எடுக்கப் பட்டு பெரும்பாலும் மரண அடியைச் சந்திக்கிற
இந்தப் படங்களையும் இதில் நடிபவர்களையும் என்ன சொல்வது?

அதிக திரையரங்குகளில் வெளியாகி எண்ணிக்கையில் குறைந்த நாட்களே ஓடினாலும் லாபம் சம்பாதித்துக் ஓடுத்து விடுகிற அல்லது நாக்குத் தள்ளப் போராடி போட்ட காசையாவது மீட்டுக் கொடுத்து விடுகிற ஒரு சில படங்களைப் பற்றி நாம் பேச வரவில்லை . ஆனால் இப்படி பல தியேட்டர்களில் வெளியாகி எல்லா தியேட்டர்களிலும் காத்து வாங்குகிற படங்களின் எண்ணிக்கையும் எகிறிக் கொண்டிருக்கிறதே .

தாகம் எடுத்தவன் தண்ணீர் குடிப்பதற்குப் பதில் தாகம் தீர்க்கும் என்று சாராயத்தைக் குடித்துவிட்டு அடுத்த சில நிமிடங்களில் வயிறு வெந்து
துடிப்பதைப் போல மக்களைக் கவருகிறேன் பேர்வழி என்று வக்கிரமான சிந்தனைகளை திரையில் வடித்து அதனாலும் தோற்று .. மேலும் நஷ்டத்தைச் சந்திக்கின்றன பல படங்கள் .


தெரிந்தோ தெரியாமலோ தமிழ் நாட்டில் இன்னும் சினிமா ஒரு முக்கியப் பொழுது போக்காக இருக்கிறது , திரையில் வருபவர்கள் படத்தில் பேசுவதை எல்லாம் உண்மை என்று நம்பி , பின்னர் நம்பப்பட்ட நடிகனே , " டைரக்டர் எழுதித் தர்றத நான் பேசுறேன் . நீ ஏன் நம்புற ?" என்று கேட்ட பிறகும் மாறாத கூட்டம் இருக்கிறது . " உன் பிரச்னைக்கு நான் வர மாட்டேன் .. என்ன கூப்பிடாத " என்று சொன்ன பின்னும் தலை கிறுகிறுத்துத் திரியும் வால்கள் நிறைய உள்ளன .

எது நல்ல சினிமா என்று தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமலே பல காலமாக ஒரு மயக்கத்தில் வைக்கப்பட்டுள்ள கூட்டம் இருக்கிறது .

இவர்கள் ஆராதிக்கிற சினிமா நல்ல சினிமாவாக இல்லாவிட்டாலும் அதுவும் மேலும் கெட்டு பார்க்கிறவனையும் மேலும் கெடுக்கிற சினிமாவாக மாறி விடக் கூடாதே என்ற அச்சம் வருகிறது . ஆனால் தமிழ் சினிமாவின் போக்கு தரம் , வியாபாரம் இரண்டிலும் நம்பிக்கை தருவதாக இல்லை .

என்ன ஆச்சு தமிழ் சினிமாவுக்கு?

அண்மையில் வந்துள்ள சில திரைப்படங்கள் என்ன சொல்கிறது என்பதில் இருந்தே அது புரிய வரும்.
தீராத விளையாட்டுப் பிள்ளை என்று ஒரு படம் . ஒருவன் மூன்று பெண்களை மயக்குவனாம். ஐ லவ் யூ சொல்வானாம் . பிறகு மூன்று பேரில் யார் நல்ல பெண் என்று கண்டு பிடித்து அவளை மட்டும் திருமணம் செய்து கொள்வானாம் . மற்ற ரெண்டு பெண்களையும் அம்போ என்று விடுவானாம் . காதல் சொல்லப் பட்டு , இவன் திட்டத்தைக் கண்டு பிடித்து மனம் உடைந்த பெண்கள் , இவன் மீது கோபப்பட்டால் அவர்கள் வில்லியாம். இவன் ஹீரோவாம் .
தன்னை விரும்பும் மூன்று பெண்களிடமும் இவன் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றாமல் தனக்கு ஏற்ற பெண் யார் என்று கண்டு பிடித்து அவளிடம் மட்டும் காதல் சொன்னால் அது நியாயம். ஆனால் தீராத
விளையாட்டுப் பிள்ளை எந்த மாதிரி பிள்ளை ?


ஒரு படத்தின் முதல் பகுதியை விட இரண்டாம் பகுதி நன்றாக இருப்பது முக்கியம் என்பதை உணர்ந்து அந்த அடிப்படையில் முன்பெல்லாம் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்களை எல்லாம் நாம் மசாலா இயக்குனர்கள் என்று சொல்லி , தள்ளி வைத்து விட்டோம் .

சிலசமயம் அப்படி இரண்டாம் பகுதி பிரம்மாதமாக நன்றாக இருந்து விட்டால் இடைவேளைக் காட்சி ரொம்ப சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பது கூட அவசியமில்லை .
உதாரணம் காதலுக்கு மரியாதை படம் . இடைவேளைக்கு என்று ஸ்பெஷலான காட்சி ஏதும் இல்லாமல் சும்மா ஒரு தங்கச் செயினைப் பிடித்துக் கொண்டு நிற்பார் விஜய் . அப்போது ஒன்றும் அது சிறப்பாகத் தோன்றாது . ஆனால் கடைசியில் அந்த செயின் தான் கிளைமாக்சில் முக்கிய திருப்பத்தைஉருவாக்கும்


ஆனால் திரையில் வாழ்க்கையை சொல்ல வருகிறோம் என்பவர்கள் ரசிகனை திருப்திப் படுத்துவதற்கான இந்த அடிப்படை விதியை மறந்து விடுகிறார்கள் .

உதாரணம் அவள் பெயர் தமிழரசி . தோல்பாவைக் கூத்துகே கலையின் பின்னணியில் ஒரு தனித் தன்மையோடு எளிய இலகுவான காதலைச் சொல்கிற படம் இரண்டாவது பகுதியில் எங்கே போவது என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி நிற்கிறது . கடைசியில் தானும் ஏமாறி பார்பவரையும் ஏமாற்ற , வசூல் விவகாரத்தில் ரசிகன் பழி வாங்கி விடுகிறான் .

நாம் எடுத்துக் கொள்ளும் கதைக்கு ஏற்ப எப்படிக் காட்சி அமைக்க வேண்டும் என்பதை விட அந்தக் கதையைக் கெடுக்கும் விதத்தில் எப்படிக் காட்சி அமைக்கக் கூடாது என்பதில், அட ! நல்ல இயக்குனர்களை விடுங்கள் .... மசாலாப் பட இயக்கனர்கள் என்று பரிகசிக்கப் பட்ட பல இயக்குனர்கள் கூட சென்ற தலைமுறை தமிழ் சினிமாவில் எப்படிக் கண்ணுங்கருத்துமாக இருந்தனர் என்று இப்போது திரும்பிப் பார்த்தல் வியக்க முடிகிறது . ஆனால் இப்போது அது கொடத் தெரியாத பலரின் படைப்புகள் இரண்டும் கெட்டானாகப் பல்லிளிக்கின்றன

அழகான பொண்ணுதான் என்ற ஒரு படம் .
ஒரு பெண் அழகாக இருந்தால் அவள் எப்படியெல்லாம் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டியுள்ளது என்று பாசாங்கு பண்ணிக் கொண்டு அதை அளவான கவர்ச்சியோடு யதார்த்தமாகவும் நெகிழ்ச்சியாகவும் சொல்லாமல் லாகிகே இல்லாமல் , விரசமான காட்சிகள் ஆபாசக் காட்சிகள் , அர்த்தமற்ற காட்சிகளோடு அரைவேக்காடாக வடிக்க , கதை சொல்லும் கருத்துக்காக நெகிழும் குணம் உள்ளவர்களையும் படம் ஈர்க்கவில்லை . அழகை ரசிப்பவனையும் ரசிக்க விடவில்லை . தவிரே பொருத்தமான காட்சிகளே இன்றி நொண்டுகிறது படம் .

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக முகம் சுளிக்க வைத்த படம் மாத்தி யோசி , இந்தக் கட்டுரை எழுத வேண்டிய பிரசவ வலியை , பேனாவுக்கு ஏற்படுத்திய படம் .
வித்தியாசமான சிந்தனையில் அன்றைய வழக்கத்துக்கு மாறாக அதே நேரம் புத்திசாலித்தனமாக மனித மதிப்பீடுகளை உள்வாங்கி மாத்தி யோசித்து அன்று முதல் பீம்சிங், ஸ்ரீதர் , கே.எஸ். கோபால கிருஷ்ணன் , பாலசந்தர் , பாரதிராஜா , மணிரதனம் உட்பட பல சினிமா மேதைகள் பல படங்களை உருவாகியுள்ளனர் , அதற்கெலாம் அவர்கள் மாத்தி யோசி என்று பெயர் வைக்கவில்லை . ஷங்கரின் இந்தியன் கதை நிஜமான மாத்தி யோசித்தலின் வெளிப்பாடு .

ஆனால் ஒன்றுக்கும் உதவாத கதை காட்சிகளை வைத்துக் கொண்டு பத்து நிமிடத்துக்கு ஒருமுறை மாத்தி யோசி மாத்தி யோசி என்று பாட்டுப் போடுகிற மாத்தியோசி படத்தில் மாத்தி யோசித்த விஷயங்கள் என்ன தெரியுமா?
உங்கள் ஊரில் உன்னை தாழ்ந்த சாதி என்று தள்ளி வைக்கிறார்களா ? சென்னைப் பட்டணம் வந்து திருடி கொள்ளையடித்து , கூலிக்குக் ஓலை செய்கிறவனாக மாறு .
தவறான ஒரு மனிதரால் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தப்பட இளம்பெண்ணா? இந்த தருதலைகளோடு சேர்ந்து திருடி வாழ்க்கை நடத்து .

வயசுப் பெண்ணான தன் மகளை யாராவது கடத்தி விட்டுப் போய்விட்டார்களா? பணம் கொடுத்து மீட்டு வரப போகும் கணவனிடம்
"அவ போனாப் போறாயா .. பணம் போனா திரும்ப வருமா? இன்னும் புள்ளை பெத்துத் தர நான் ரெடி . உனக்கு உடம்புல தெம்பு இருக்கா?" என்று வசனம் பேசு . அப்பத்தான் நீ பெண் ரவுடி .

தொழில் செய்ய விடாமல் தடுக்கிற இன்ஸ்பெக்டரைப் பழிவாங்க ரவுடிகளுக்கு ஐடியா வேண்டுமா? இதோ ..

இன்ஸ்பெக்டரின் மனைவியைக் கடத்திக் கோடு வந்து கட்டிப் போட்டு விட்டு , அவள் கண் முன்னால் உனது ஆசை நாயகியோடு விரசமாக உறவாடி அதை இன்ஸ்பெக்டரின் மனைவியைப் பார்க்க வை . இப்படி இன்ஸ்பெக்டரைப் பழி வாங்கு .

இது போல ஏகப்பட்ட மாத்தி யோசிப்புகள் .


இப்படி ஏராளாமான கொடுமைகள் படங்களாக வந்துகொண்டிருக்கின்றன .

யார் காரணம்? என்ன காரணம்?

ஆரம்பத்தில் சினிமா எழுத்தாளர்களின் கையில் இருந்தது . பின்னர் நல்ல எழுத்தாளர்களாகவும் இருக்கிற நேரம் கேமரா மொழி தெரிந்த படைப்பாலிகலின் கைக்கு வந்தது . அத்ன பின்னர் நல்ல ரசிகர்களாக
மட்டுமாவது உள்ளவர்கள் படமெடுக்க வந்தார்கள்
இப்போது இயக்குனராக வருபவர்களுக்கு படிக்கிற பழக்கமே இல்லை . வாழ்க்கையைப் படிக்கிற , சமூகத்தைக் கூர்ந்து கவனிக்கிற இயல்போ அறிவோ இல்லதவர்களாக உள்ளனர்

தயாரிப்பாளர்களும் திறமைசாலிகளுக்குப் படம் தருவதற்குப் பதில் தனனை பல்வெறு விதஙகளிலும்
குளிர்விக்கிற திருப்தி செய்கிற நபர்களுக்குப் பட வாய்ப்பை பிச்சையாக எறிவதிலேயே இன்பம் காணுகின்றனர்

விளைவு ? படம் பப்படமாகிறது .

மாத்தி யோசி போன்ற படங்களை இயக்கியவர்களை விட .அதைப் படமாக எடுக்க முன்வந்து
பண‌த்தையும் கொட்டிய தயாரிப்பாளர்களின் சினிமா அறிவை எண்ணிதான் வியக்க வேண்டியுள்ளது.

இலக்கிய ரசனை , நல்ல படம் ககுரித்த தெளிவு இல்லாதது மட்டுமல்ல ; யாரிடமும் உதவி இயக்குனாரகப்
பணியாற்றி தொழில் கற்றுக் கொண்ட அனுபவம் எதுவுமெ இல்லாத இயக்கம் குறித்த படிப்பும் கூட இல்லாத
பலபேர் பல படஙகளில் இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டுள்ளனர என்றால் எப்படி அந்த வாய்ப்பு தரப் படுகிறது?

வாய்ப்புக் கேட்டு வருபவன் அடிமையைப் பொல் நடந்து கொள்ள வேண்டும் என்ற மனோபாவம் நல்ல படைப்பாளிகளைத் தள்ளியே வைக்கிறது .

இது போன்ற காரணங்களால் இப்போது தமிழ் சினிமாவின் நிலமை ஒருபடத்தில் வடிவேலு சொன்ன மாதிரி
தொழில்னுட்பம் என்ற பில்டிங ஸ்ட்ராங்காகவும் கதை திரைக்கதை உள்ளிட்ட கலை நுட்பம் , என்னும்
பேஸ்மெண்ட் வீக்காகவும் ஆகிக் கிடக்கிறது .
மாற்றம் வரவில்லை யெனில் நிலவரம் கலவரம் ஆகலாம் !

#'ஓடிப் போகும்' வாகனங்கள் : ஒய்யார திட்டங்கள்


தொடரும் பைக் திருட்டுக்கள் :
'ஓடிப் போகும்' வாகனங்கள் : ஒய்யார திட்டங்கள்
********************************************************

வழக்கம் போல் பரபரப்பாக இயங்குகிற ஒரு உடற்பயிற்சிக் கூடத்தின் வாசல் அது. .தனது மோட்டார் பைக்கில் வந்து வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்த ஒருவர் மீண்டும் வீட்டுக்குப் போகும்போது நடைப் பயிற்சியாகவே வீட்டுக்குப் போனார் . காரணம் சைக்கிள் கேப்பில் அவரது பைக் திருடப்பட்டது .

கோவில் வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு சாமி கும்பிடப் போனவர் வெளியே வந்ததும் வெறுப்பில் நாத்திகராக முடிவு செய்தார் . காரணம் அவரது இரு சக்கர வாகனம் காணாமல் போயிருந்தது .

ஒரு துணிக்கடையில் பைக்கை நிறுத்தி விட்டு தள்ளுபடி விலையில் ஜீன்ஸ் எடுக்கப் போனவர் வெளியே வந்த பிறகுதான் நஷ்டப்பட்டதை உணர்ந்தார் . அது மட்டமான ஜீன்ஸ் என்பதால் அல்ல . அதற்குள் அவரது பைக்கை யாரோ தள்ளிக் கொண்டு போயிருந்தார்கள் .


70000 ருபாய் கொடுத்து 180 சிசி பைக்கை வாங்கிய நண்பர் ஒருவர் ஒரு மாத காலத்துக்குள் ஒருநாள் ,தனது விலை உயர்ந்த பைக்கை பெசன்ட் நகரில் ஒரு காப்பி ஷாப் அருகில் உள்ள சந்தில் நிறுத்தி வைத்து விட்டு, தவறாமல் ....சரியாக.... சைட் லாக் எல்லாம் போட்டு விட்டுப போய் ... காப்பி ஷாப்பில் நண்பர்களோடு அரை மணி நேரம் இருந்து விட்டு வந்த அன்று இரவு.... அதே நண்பர்களோடு டாஸ்மாக்கில் மணிக்கணக்கில் புலம்பும் பரிதாப நிலைக்கு ஆளானார் . ஆம் , அந்த விலை உயர்ந்த முரட்டு பைக்கை அவர் சரியாக லாக் செய்தும் திருடப் பட்டிருந்தது .

குறுகிய கால இடைவெளியில் சென்னை நகரின் ஒரு பகுதியில் மட்டும் ..நாம் விசாரிக்கவேல்லாம்ம் செய்யாமல் நமக்குத் தானாகத் தெரிய வந்த பைக் திருட்டுச் சம்பவங்கள் இவை .

தினசரி சென்னைப பேருந்துகளில் சோகமாக உட்கார்ந்திருக்கும் யாராவது ஒரு நபர் காதல் தோல்வி காரணமாகத்தான் அப்படி உட்கார்ந்திருக்கிறார் என்று சினிமா பார்த்த ஞாபகத்தில் நீங்களாக நினைத்துக் கொள்ளத் தேவையில்லை . அவர் பைக் தொலைத்த சோகத்திலும் கூட இருக்கலாம் . அடிக்கடி பேருந்துகளில் பைக் தொலைத்துவிட்டு அது எப்படியாவது போலீஸ் உதவியுடன் கிடைத்து விடும் என்று நம்பி பரபரப்பாக அலைந்து தோற்று நொந்து போனவர்களின் புலம்பல்கள் பேருந்து உறுமல்களையும் மீறி காதில் விழத்தான் செய்கின்றன .

ஆம் சென்னை மட்டுமல்ல எல்லா நகர்ப்புறங்களிலும் இப்போது பிரபலமான திருட்டுகள் எல்லாம் இருசக்கர வாகனத் திருட்டுகள்தான்.

ஒரு காலத்தில் நகர்ப்புறங்களில் ஜன நெரிசல் உள்ள பகுதிகளில் அதிகம் அதிர்ச்சி தருவது பிக்பாக்கேட்தான். பெரும்பாலும் அதில் வரும் கொஞ்ச தொகை திருடர்களுக்கு சலிப்பை ஏற்படுத்த ,பின்னர் அது நோகாமல் நகை திருடும் வகையாக முன்னேற்றம் கண்டது . அதிலும் ரிஸ்க் அதிகம் என்பதால் கொஞ்சம் தயங்கிய 'தேவரனைய கயவர்களுக்கு' வராது வந்த மாமணியாய் அமைந்ததன செல்போன்கள் . சற்று முயற்சி செய்தாலே வெண்ணெய்க்கட்டி போல வழுக்கிக் கொண்டு கைமாறும் செல்போன்களின் நளினம் , திருடர்களுக்கு ரொம்ப வசதி . கிட்டத்தட்ட பிக்பாக்கெட் திருடர்கள் அனைவரும் செல்போன்களுக்கு "நெஞ்சகமே கோவில் நினைவே சுகந்தமன்பே மஞ்சன நீர் பூசை செய்ய வாராய் பராபரமே " என்று மானசீக கோவில் கட்டினார்கள் . ஒரு நிலையில் செல்போன் ஆட்கள் பௌச், இயர் போன் இணைக்கப் பட்ட ஒயர்கள் மூலம் கொஞ்சம் பாதுகாப்பை பலப் படுத்தி விட்டதால் அதிலும் ரிஸ்க் அதிகமாகி விட்டது .

ஆனால் பைக் திருட்டு அப்படியல்ல .
யாராக இருந்தாலும் பொது இடங்களுக்குப் போகும்போது பைக்கை மடியில் கட்டிக் கொண்டு போக முடியாது .' மவன..நீ எங்கயாவது நிறுத்திட்டுதான போகணும்..'

கொஞ்சம் 'தொழில் நுட்பம் ' கற்றுக் கொண்டால் போதும் . திருபி விட்டால் மற்ற எந்தப பொருளையும் விட பணம் அதிகம் கிடைக்கிறது . கவனிக்க வேண்டியவர்களைக் கொஞ்சம் கவனித்தால் போதும் ... பாதுகாப்புச் சலுகைகளும் கிடைக்கும் . அப்புறம் என்ன ?

முன்பெல்லாம் பைக்கில் வந்து நகையைப் பறித்தார்கள் இப்போது பைக்கையே பறிக்கிறார்கள் .

திருடப்படும் பைக்குகளில் 99 .99 சதவீதம் மீண்டும் உரிமையாலர்களுக்குக் கிடைப்பதே இல்லை . அதற்கான காரணங்கள் .....

திடுடப்படும் பைக்குகள் உடனடியாக உடல்தானம் ரேஞ்சுக்கு , சொல்லப் போனால் அதற்கும் மேலாகவே அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கப் பட்டு ஸ்பேர் பார்ட்ஸ் ஆகா மாறி புதுப்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள மெக்கானிக் கடைகளுக்குப் போய்விடுகின்றன . சில மாதங்களுக்கு பின் தொலைத்தவர் வாங்கிய அடுத்த செகண்ட் ஹேன்ட் பைக்கிற்கு ஸ்பேர் பார்ட்சாக ஒன்றும் தெரியாத அப்பாவியாக அதுவே வந்து சேரலாம் . நாமும் நமக்கு உரிமையாக இருந்து அநியாயமாக திருடு போன பொருளை மீண்டும் காசு கொடுத்து வாங்கிவரும்....வடிவேலு பாணி ' ரொம்ப நல்லவராக' ஆகலாம் .

அடுத்த கட்டமாக வண்டி ரொம்பப் புதுசாக இருந்து , 'பிரிக்கவே மனசு வரல தலைவா' என்று பிரிப்புப பார்ட்டிகளே உச்சுக்கொட்டும் அளவு புதுசாக இருந்தால் உடனடியாக லாரிகள் டேம்போக்களில் ஏற்றி ஆந்திரா கர்நாடகா பக்கம் போய்விடுகிறது .

இன்னொரு விஷயம் ... கடலில் மீன் பிடிக்கப் பயன்படும் மோட்டார் வைக்கப் பட்ட படகுகளுக்கு இந்த இரு சக்கர வாகன எஞ்சின்கள் அல்வாத்துண்டு மாதிரி , அப்படி பிரமாதமாக செட் ஆகும் . எனவே அதற்காக திருடப்பட்டு, என்ஜின் பகுதி மீனவர்களிடம் விற்கப் பட்டு ,

வாகனத்தின் மற்ற பகுதிகள் முறையற்ற தவறான மக்கானிக்குகளிடமும் எஞ்சிய பகுதிகள் காயலான் கடைகளுக்கும் கூட போகின்றன . அநியாயமாக பொருட்கள் வீணாகிறதே என்று திருடியவனுக்கு என்ன கவலை? வண்டிக்கு சொந்தக்காரன் எங்கேயோ புலம்பிக்கொண்டு இருக்கப் போகிறான் . அதனால் திருடனுக்கு என்ன?

இந்தக் விஷயங்கள் கூட உங்களில் ஒரு சிலருக்கு முன்பே தெரிந்திருக்கலாம் . ஆனால் அடுத்து வருவதுதான் அநியாய அராஜக அக்கிரமம் !

அது பற்றி காவல் துறை நண்பர் ஒருவர் சொன்னார் .
" சார்.. வண்டி திருடு போச்சுனா உடனே போலீஸ்காரன குத்தம் சொல்றதுல மட்டும் குறியா இருக்காதீங்க . எல்லா இடத்துலயும் வாகனம் பெருத்துப் போச்சு .
எல்லா அரசியல்வாதிங்க வீட்லயும் பொறக்கும்போதே இப்ப எல்லாம் வி.ஐ.பி.யா பிறக்குதுங்க... அதுகளுக்கு எல்லாம் பந்தோபஸ்துக் கொடுக்கவே ஆட்கள் பத்தல . காயலான் கடையில குன்டூசியத் தேடுற மாதிரி பைக் திருட்டை கண்டுபிடிகறதும் இப்ப சிரமம் ஆயிருச்சி .

நான் ஒரு கேள்வி கேட்குறேன் ... 70000 , 80000 ம்னு கொடுத்து பைக் வாங்குறீங்க . அத லாக் பண்ண அவன் ஒரு சிஸ்டம்ல லாக் ரெடி பண்றான் . அதுக்கு உள்ள எல்லா சாவியையும் உங்க கிட்டயே கொடுத்துடறான் . 70000 ரூபா பொருளுக்கு அந்த லாக் எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கனும் ?.. ஆனா ரோட்ல நிறுத்தி வச்சிட்டு காப்பி குடிசசிட்டு வர்ற நேரத்துல அத எவனோ ஒருத்தன் ஈசியா திருட முடியுதுன்னா .. அப்புறம் என்ன அது பொல்லாத லாக்? அது என்ன சேப்டி?

அந்த மாதிரி விலை உயர்ந்த பைக்குக்கு காமா சோமான்னு லாக் போடுற கம்பெனிக்காரனையும் டீலரையும் நீங்க எப்பவாவது போய் கேள்வி கேட்கறீங்களா?

இல்ல . ஏன்?

விஷயம் தெரியுமா?

பெரிய பெரிய பைக் நிறுவனங்கள் வேணும்னே திட்டம் போட்டே காஸ்ட்லியான வண்டிகளுக்குக் கூட இப்படி உருப்படாத லாக் போடுறாங்க . பைக் தொலையனும்னு அவங்களே ஆசைப்படறாங்க .

அப்பதான அடுத்த பைக் சீக்கிரம் வாங்குவாங்க . அவங்களுக்கு வியாபாரம் ஆகும்.

தொலைச்சவன் நஷ்டப்பட்டா அவங்களுக்கு என்ன?
அது மட்டுமில்ல பெரும்பாலும் இன்ஷ்யூரன்ஸ் எடுத்தவங்களுக்கு அந்த நிறுவனம் பணம் தருது .

அந்த இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம் அரசு நிறுவனமாவோ அல்லது அரசு உதவி பெறும் நிறுவனமாவோ இருந்தா பைக்கை திருட்டுக் கொடுத்தவர் இன்ஷ்யூரன்ஸ் மூலம் வாங்கும் அடுத்த பைக்கிற்கு, பைக்
தயாரிப்பு நிறுவனங்களுக்கு தரப்படும் பணத்தில்....

மற்ற மக்களின் வரிப்பணமும் கலந்திருக்கு .

திடுடமுடியாத படி லாக் போட இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கு ? என்ன தொழில் நுட்பத்த பயன்படுத்தியிருக்கு ? ஒன்னும் செய்ய மாட்டாங்க . வேணும்னே மறைமுகமா திருடு போவதை அவங்களே ஊக்குவிக்கிறாங்க .
திருட்டுக் கொடுதவன் கண்ணீர் விக்கிறான் . இத முதல்ல எல்லாருக்கும் புரியவச்சிட்டு அப்புறம் எங்ககிட்ட வாங்க " என்றார் அந்த காவல்துறை நண்பர் .

ஆக.. வண்டியோட்டும் மகாஜனங்களே !
புதிதாக ஒரு தொழிற்சாலை வர விரும்பினால் தங்களுக்கு 30 சதவீதமோ 40 சதவீதமோ டீல் போட்டுக்கொண்ட பிறகே அந்த கம்பெனிக்கு இடம் தருகிற அரசியல் அறிஞர்கள் உள்ள நம்மூரில்
எந்த நிறுவனமும் இரு சக்கர வாகனங்களின் லாக் சிஸ்டத்தை மேம்படுத்தப் போவதில்லை .

ஒரு இரு சக்கர வாகனத்தை நீங்கள் வாங்கி ரோட்டில் இறக்கி விட்ட அடுத்த நொடியே அதன் விலை மதிப்பில் 25 சதவீதம் குறைந்து விடுகிறது எனும்போது , இன்னும் திருடனுக்கு உதவியாக லாக் சிஸ்டங்களை எப்படி பலவீனபடுத்தலாம் என்றுதான் அவர்கள் யோசிப்பார்கள் .


ஆக வண்டி வாங்கியதும் இன்ஷ்யூரன்ஸ் போடுவதும் முடிந்தவரை பத்திரமாக பார்த்துக் கொள்வதுமே நம்மால்; முடிந்த விஷயங்கள் . வேறு ஒன்றும் இல்லை

வேண்டுமானால் இந்த கட்டுரையையும் சம்பிரதாயமாக இப்படி முடிக்கலாம் .

'பெருகி வரு இருசக்க்கர வாகனத் திருட்டைத் தடுக்க காவல்துறையும் அரசும் முதல்வரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் '
போதுமா?

Sunday, March 7, 2010

# மாஞ்சா கொலை:காத்தாடியில் ஊசலாடும் உயிர்கள்




நகரின் முக்கியச் சாலையில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவரா நீங்கள்?

ஓவர் டேக் செய்கிறேன் பேர்வழி என்று உரச வரும் திமிரான நான்கு சக்கர வாகனங்கள் , சட்டென்று சாலையின் குறுக்காகப பாய்ந்து மூட வீரம் காட்டி முடமாகத் துடிக்கும் கோமாளிகள் , சிக்னலில் நின்று பச்சை விளக்குக்குக் காத்திருக்கும் போது சிக்னல் மாறுவதற்கு முன்பே கிளம்பச்சொல்லி ஹாரன் அடிக்கும் அநாகரீக ஆத்மாக்கள் , தனக்கு முன்னால் ஒரு இரு சக்கரவாகனம்( அது போதுமான வேகமாகப் போனாலும் கூட) பயணிப்பதை தனது ஏழேழு தலைமுறைக்கும் கவுரவக் குறைச்சலாக நினைத்து கதற வைக்கிற , கார் மற்றும் பேருந்து ஓட்டும் பிரம்மாக்கள் .....

மாரடைப்பு வரும் அளவுக்கு திடிரென்று ஏர் ஹாரனை அலறவிடும் மன நோயாளிகள் , போன ஜென்மத்தில் கொசு மருந்து அடிப்பவராகப் பிறந்ததின் விட்ட குறை தொட்ட குறையாக இப்போதும் குப் குப் என்று கரும்புகையைக் கக்கியபடி வண்டி ஓட்டுவதை குலப் பெருமையாய்க் கருதும் புகையாண்டிகள் , அளவுக்கு மீறிய வேகத்தில் வண்டி ஒட்டி ஒரு நிமிடம் நம் வண்டியைத் தள்ளாட வைக்கும் பொல்லாத ஜந்துக்கள் திடீரென்று சாலையில் மனம் தூவி கண்களைப் பதம் பார்க்கும் திறந்த லாரிகள் .......

ஓட்டை டேங்குகளில் தண்ணீர் நிரப்பி அது ஒழுக ஒழுக உள்ளே உருவாகும் வெற்றிடத்தால் ஏற்படும் சமநிலை மாறுபாட்டால் தண்ணீர் தளும்பி அதன் மூலம், தறிகெட்டுப் பாயும் தண்ணீர் லாரிகள் ...
இவை எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஹெல்மெட் மஞ்சள் கோடு சமாசாரங்கள் மற்றும் , லாரி , டெம்போக்கள் இவர்களிடம் காசு வாங்குவதையே போக்குவரத்து சீர்படுத்தல் என்று என்னும் போக்குவரத்துக் காவல்துறை ....

இரு சக்கர வாகனம் ஓட்டுபவருக்கு அடிக்கடி தொல்லை தரும் கண்ணுக்குத் தெரிந்த தொல்லைகள் இவை .

இவற்றில் எதாவது ஒன்றிரண்டால் அல்லல் பட்டோ அல்லது சிக்னலில் சிக்கிஸ் சீரழிந்தோ அல்லது டிராபிக் ஜாமீன் கடைவாய்ப் பற்களில் சிக்கி அரைபட்டோ தப்பிய நிலையில் ஒரு ஆற்றுப் பாலம் (அது கூவமாக இருந்தாலும் சரி ), மைதானத்தை ஒட்டிய சாலை , அல்லது கடற்கரையை ஒட்டிய சாலையில் நுழையும்போது நல்ல சாலை , சுகமான காற்று , போக்குவரத்து குறைவான சூழல் உள்ள இடங்களில் வாகனத்தை செலுத்தும்போது உங்களையும் அறியாமல் கொஞ்சம் அதிகமான ஆனால் பாதுகாப்பான வேகத்தில் வாகனத்தை செலுத்தி ரசிப்பவரா நீங்கள் ....

அய்யா கவனம் ... அய்யோ கவனம் !


மேற்சொன்ன எல்லா ஆபத்துகளையும் விட கொடூரமான கொடுமையான எதிர்பாராத கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத குரூரமான ஒரு ஆபத்து ... அதுவும் கண்ணுக்குத் தெரியாத ஆபத்து ஒரு நொடியில் வாகனம் ஓட்டுபவரின் உயிருக்கு உலை வைத்து விடும் .

வேலைவெட்டியற்ற வெட்டிக் கும்பல் தனது உருப்படாத பொழுதைக் கழிப்பதற்காக பொழுது போக்கு என்ற பெயரில் வாகனம் ஓட்டுபவரின் கழுத்தறுத்துவிட்டுப் போய்விடும். அதுவும் தனிப்பட்ட ஒரு ஆண் அல்லது பெண்ணின் கழுத்தை அல்ல. குடும்பத்தின் , தாய் தந்தையரின் மனைவியின் , பிள்ளைகளின் , அண்ணன் தம்பிகளின் ஒரு தலைமுறையின் பல நம்பிக்கைகளின் சில இலட்சியங்களின் கழுத்தை அறுத்து விட்டுப் போய்விடும் .

ஒரு நொடியில் இப்படி பலரின் கழுத்தறுக்க அவர்கள் வாளெடுத்து வருவதில்லை : வேலேடுத்தும் வருவதில்லை . ஒரு நூல் எடுத்துதான் வருகின்றனர் .

மாஞ்சா !


பட்டம் என்றும் காத்தாடி என்றும் அழைக்கப்படுகிற நூலின் முனையில் ஒரு சிறு வாலோடு பறக்கிற காத்தாடிப் பட்டம் விடுவது ஒரு காலத்தில் மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் ஒரு வண்ணமயமான பொழுது போக்காக இருந்தது . இன்றும் உள்ளது . நூல் கண்டின் முனையில் பட்டத்தை இணைத்து மேலே பறக்க விட ஒரு குறிப்பிட்ட நேக்கில் கையை அசைக்க அசைக்க வானத்தில் பறக்கும் பட்டம் . எல்லாம் சரிதான் .

ஒரு நிலைக்கும் மேல் காற்றின் வேகம் தாளாது பட்டம் இணைக்கப் பட்ட நூல் பிய்ந்து பட்டம் பறந்து போய் கண்காணாத இடத்தில் விழுந்துவிடும் . அதுவே ஒரு வெற்றி என்று கருதி அதோடு ஆட்டம் முடிந்து வந்து கொண்டிருந்தவரை இந்த பட்டம் விடும் விளையாட்டு ரசிக்கத் தக்கதாகவே இருந்தது .

ஆனால் அந்த ஒன்றரையணா பட்டம் காணாமல் போனால் வேறு பட்டம் வாங்கியும் ,
இன்னொரு நூல் கண்டு வாங்கியும் பட்டம் விட்டுக் கொள்ளலாம் என்ற
பெருந்தன்மை இல்லாமல் ,
பட்டமும் விட்டு விளையாட வேண்டும் , அது மிகுந்த உயரத்திலும் பறக்க
வேண்டும் , தொலைந்து போவதோ பிய்ந்து போவதோ கூடாது ..
யார் கழுத்தறுந்து யார் தாலியறுத்தாலும் பரவாயில்லை மீண்டும் மீண்டும்
எந்த செலவும் இல்லாமல் அந்த பட்டத்தையே வைத்து விளையாடவேண்டும்
என்று சில காட்டுமிராண்டித்தனமான பாவ புண்ணீயம் பாராத சுய ந‌லச்
சிந்தனைகள் விஸ்வரூபம் எடுத்ததன் விளைவு....


காத்தாடி இன்பமான பொழுதுபோக்கு விளையாட்டு என்ற தகுதியை இழப்பதற்குக்
காரணமான 'மாஞ்சா'வைத் தந்தது .

மாஞ்சா?

கண்ணாடி பாட்டிலை அரைத்துக் கூழாக்கி அதில் சப்பாத்திக் கள்ளி இல்லை , வலிமையான வஜ்ரம் , மயில் துத்தம் போன்றவை கலந்து பிசின் சேர்த்து இந்தக் கலவையில் வெள்ளை நூலை முக்கி எடுக்கிறார்கள் . அதன் பின்னர் அந்த நூல் வலுவேறி முரட்டுத்தனமான கண்ணாடித துகள்கள் செறிந்த நூலாக இல்லை இல்லை கழுத்தை அறுக்கும் வாளாக மாறி விடுகிறது

ஒரு சமயத்தில் இந்த மாஞ்சா நூலால் பறவைகள் சிக்கித துடிப்பதைப் பார்த்தது அவைகளையே காப்பாற்றிய சம்பவங்கள் சில மனிதபிமானிகளாலும் ப்ளூ கிராஸ் போன்ற அமைப்பினராலும் செய்யப்பட்டன. அப்போதே இந்த மாஞ்சாவைத் தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன .ஆனால் யாரின் செவியிலும் அது விழவில்லை .பறவைகளின் அலறலைக் கேட்கும் சக்தி அந்தக் காதுகளுக்கு இல்லாமல் இருக்கலாம் .

எனவே ஒரு நிலையில் மனித உயிர்களும் பறிபோயின. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் .
கண்ணாடி பிசின் , வஜ்ரம் , மயில் துத்தம் போன்றவை வெள்ளை நூலை சூழ்ந்து ஒட்டிக் காய்ந்து பளபளப்பாக மாறி விடுவதால் , பெரும்பாலும் ரோட்டின் குறுக்கே இந்த எமன் சத்தமில்லாமல் ஆனால் வலுவான குரூரத்தோடு காத்திருப்பது இரு சக்கர வாகன ஒட்டிகளுக்குத் தெரிவதில்லை .

கத்தியை ஓங்கி கழுத்தறுப்பது ஒரு வகை . அதற்கு நீர் மாறாக கத்தியை வாகாக வலுவாக நிற்க வைத்து விட்டு அதன் மேல் கழுத்தைக் கொண்டு போய் மோதி அறுபட செய்வதை ஒரு நிமிடம் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு கற்பனை செய்து பாருங்கள் . அதுதான் நடக்கிறது இங்கே .
கண்ணுக்குத் தெரியாமல் வலிமையோடு காத்திருக்கும் இந்த மாஞ்சா நூலில் வேகமாகப் பாய்ந்து வரும் வாகன ஓட்டிகள் மோதும் வேகத்தில் பெரும்பாலும் கழுத்து வாகாகச் சிக்கிக் கொள்ள வஜ்ரத்துடன் இணைந்ததால் வலுவும் கூர்மையும் ஏறி இருக்கும் கண்ணாடிப் போடு நூலின் பாதையில் கோடு போடுவது போலக் கழுத்தை கரகரவென அறுக்கிறது .


அடுத்த நொடி?
ஹேராம் படம் ஞாபகம் வருகிறதா? கொல்கொத்தா கலவரக் காட்சியில் கற்பழிக்கப் பட்டு கழுத்தறுக்கப்படும் ராணி முகர்ஜியின் கழுத்தில் இருந்து ரத்தம் ஆர்டிஷியன் ஊற்று போலப் பீய்ச்சி
அடிக்குமே அதே கொடூரம்தான் இங்கு எந்த ஆர்ட் டைரக்டரின் செட்டப்பும் இல்லாமல் , நிஜமாக ... நிஜத்திலும் நிஜமாக , நிஜமான ரத்தமாக சதையாக அலறலாக உயிராக ,,, இழப்பாக!

தமிழகத்தில் குறிப்பாக வட தமிழகத்தில் இப்படி மாஞ்சா நூலால் எதிர்பாரதவிதமாக கொடூரமாய் உயிரிழப் போரின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போனது .

எனவே காத்தாடிப பட்டம் விடத் தடை விதிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்ததன் விளைவாக
சென்னை நகரில் கடந்த 2007ம் ஆண்டு பட்டம் விடுவது தடை செய்யப்பட்டது. அந்த ஆண்டு, மாஞ்சா தடவப்பட்ட பட்டக் கயிறு 8 வயது சிறுவனின் கழுத்தை அறுத்து பரிதாபமாக உயிரைப் பறித்ததைத் தொடர்ந்து இந்தத் தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்தும் இதைக் கட்டுப் படுத்த முடியாததால் 2009 ஆண்டில் பட்டம் விற்கவும் போலீஸார் தடை விதித்தனர். மேலும் பட்டம் விற்பதும், மாஞ்சா கயிற்றுடன் பட்டங்களை பறக்க விடுவதும் ஜாமீனில் வெளி வர முடியாத குற்றமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு பட்டம் விற்பனையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர் .

இதை விசாரித்த உயர்நீதிமன்றம்,அதே ஆண்டில் பட்டம் விற்பதற்குத் தடை கிடையாது என உத்தரவிட்டது. அதேசமயம், உயிரைப் பறிக்கும் ஆபத்தான மாஞ்சா தடவிய பட்டங்களை விற்பதற்கும், பறக்க விடுவதற்கும் தடையை நீக்க அது மறுத்து விட்டது.

ஆனாலும் இன்றும் மஞ்சா தடவிய பட்டம் விடுவதை காவல் துறையால் தடுக்க முடியவில்லை .
இன்றும் மஞ்சா நூலில் வெகு உயரத்தில் படங்கள் பறக்கின்றனவோ இல்லையோ , தவறாமல் கழுத்தை அறுத்துக் கொண்டுதான் உள்ளன .கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் மட்டும் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் மூன்று கழுத்துகள் !

தி.நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் , எப். எம் ரேடியோவில் வருனனையாளராகப் பணியாற்றும் கண்மணி என்ற பெண் ஒருவர் ,மற்றும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த வசந்தி என்ற குடும்பத் தலைவி .. இந்த மூவரும்தான் அந்த அப்பாவிகள் . யாரோ சிலரின் விளையாட்டு இவர்களுக்கு வினையானது .

ஒரு சின்ன தாக்குதலுக்கு காரணமானவர்களையே கடுமையாகத் தண்டிக்கும் காவல்துறை , போது இடத்தில் நகம் பட்டு கீறல் விழுந்தாலே 506 ம் பிரிவைத் தூக்கி வந்து அடித்து ரத்தக் காயப் படுத்தியதாக வழக்குப் போடும் சட்டம் ,
இந்த மாஞ்சா நூல் வைத்துக் காத்தாடி விடுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
எதாவது ஒரு கழுத்து அறுபட்டால்தான் மாஞ்சா விடுபவர்களைக் கைது செய்வோம் என்றால் எப்படி ?

மாஞ்சா தயாரித்துக் காத்தாடி விட்டு அதனால் யாரும் பாதிக்கப் பட்டால் அந்த மாஞ்சா காத்தாடி விட்டவர்களை வழக்கமான பிரிவுகளில் தண்டிப்பதை மாற்றி கொலைக் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் .

யாருக்கும் ஆபத்து வருகிறதோ இல்லையோ மாஞ்சா தயாரித்துக் காத்தாடி நூலில் ஏற்றுபவர்கள் கடுமையாக தண்டிக்கப் படவேண்டும் .எந்த காரனத்துக்க்காகவும் மாஞ்சா தயாரிப்பது பெறும் குற்றமாக அறிவிக்கப் படவேண்டும் .

நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே காற்றாடிகள் விடப்படவேண்டும் . அதுவும் சாதாரண நூலால் பிணைக்கப் பட்ட காற்றாடிகளாகவே இருக்க வேண்டும் என்பது சட்ட மாக்கப் படவேண்டும் .காற்றாடி விடுவோர் யாராக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சங்க அமைப்பில் இடம் பெற்றவர்களாகவே இருக்கவேண்டும் . அந்த சங்கத்திற்கு போலிஸ் அனுமதி கட்டாயம் வேண்டும் .
அந்த அமைப்பில் உள்ளவர்கள் மாஞ்சா காற்றாடி விடுவது உட்பட முறைகேடான முறையில் காத்தாடியைப் பயன்படுத்தினால் அதற்கு அந்த குறிப்பிட்ட சங்க அமைப்பினரே பொறுப்பேற்க வேண்டும். மாஞ்சா நூலால் உயிர் போவது பற்றிக் கூட கவலைப் படாமல் காத்தாடி விடுவதை தடை செய்யக் கூடாது என்று கோர்ட்டுக்குப் போனவர்கள் இந்த பொறுப்பைக் கட்டாயம் ஏற்க வேண்டும் .

வீர விளையாட்டு ஜல்லிக்கட்டால் உயிர்கள் போகின்றன அதைத் தடை செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுகின்றன.ஜல்லிக்கட்டில் விரும்பிக் கலந்து கொள்பவரின் உயிருக்கோ அல்லது அந்த வீர விளையாட்டின் விபரீதம் புரிந்து விரும்பி அதைப் பார்க்கப் போகிறவரோதான் ஆபத்துக்கு ஆளாகிறார் . ஆனால் அதை எதிர்த்து எழும் குரல்களில் பல விதமான நோக்கங்கள் உள்ளன .

ஆனால் மாஞ்சா என்றால் என்ன வென்றே தெரியாதவர்கள் , சில சமயம் காத்தாடி விடுவது என்றால் என்னவென்றே தெரியாத அப்பாவிகள் தாங்கள் பாட்டுக்கு தன் வழியில் போய்க்கொண்டிருக்கும் போது அநியாயமாகச் சாவது என்ன ஒரு கொடுமை .

ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுப்பதை விட இந்த மாஞ்சாவை ஒழித்துக் கட்டவேண்டியது உண்மையாகவே நியாயமானது அவசியமானது .
சொல்லப் போனால் ரொம்ப அவசரமானது .
சட்டமும் (காக்கிச் ) சட்டையும் என்ன செய்யப் போகிறது?