

இன்று (06-06-2011)காலை ஜெயா தொலைக்காட்சியில் சிறப்புத் தேன்கிண்ணம் பகுதியில் தோன்றிய கவிஞர் பிறைசூடன் அவர்கள், 'கொஞ்சும் சலங்கை' படத்தில் இடம் பெற்ற "சிங்கார வேலனே தேவா" பாடல் பற்றி குறிப்பிடும்போது
"பொதுவாக நாதஸ்வரமும் குரலும் இணைந்து இழையாது என்பதால் முதலில் காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்களை வைத்து நாதஸ்வர இசைப் பகுதிகளை வாசிக்கச் செய்து ஒலிப்பதிவு செய்தனர் பின்னர் இசை படிக்காவிட்டாலும் இசையாகவே வாழ்கிற எஸ் ஜானகியை பாட வைத்தனர் "என்றார் .
உண்மை .
ஆனால் இதில் மற்றோர் நெகிழ்ச்சியான விஷயமும் உண்டு .
முதலில் இந்தப் பாடலைப் பாடுவதற்கு அணுகப்பட்ட பாடகி பி லீலா அம்மையார்தான் . ஆனால் லீலா அம்மையார்
"இந்த உயரத்துக்கு என் குரல் போகாது" என்று திறந்த மனதோடு கூறியதோடு மட்டும் அல்லாமல்
" இன்றைய நிலையில் இந்த நாதஸ்வர இசைக்கு இணையாக ஒலிக்கும் குரல் ஜானகியிடம்தான் உள்ளது அவரையே பாடச் சொல்லுங்கள் "என்று பெருந்தன்மையோடு சிபாரிசும் செய்தார் .
அதனால் பாட்டு ஜானகிக்குப் போனது .
"என்னால் பாட முடியாது' என்று கூறியதோடு லீலா அம்மா விட்டிருக்கலாம் . ஆனால் ஜானகியால்தான் முடியும்ணு சொல்லி என்னைப் பாட வச்சார் . இந்த பெருந்தன்மை வேறு யாருக்கு வரும் "என்று பத்திரிக்கையாளனாகவும் உதவி இயக்குனராகவும் இருந்த என்னிடம் ஒருமுறை சொல்லும்போதே ஜானகியின் கண்ணில் இருந்து கரகரவென கண்ணீர் வந்ததை என்னால் மறக்கவே முடியாது
நன்றிக் கண்ணீர் !
by the by இப்ப அதெல்லாம் எங்கயாவது ஊறுதா ?