Monday, June 21, 2010

# ராவணன் (படம்) துடைத்த கம்பனின் கண்ணீர்








ஒரு மண்ணில் காலகாலமாக வாழும் மக்கள் தமது நிறம் உயரம் போன்றவை குறித்தும் இயற்கைச் சூழலால் தமக்கு அமைந்த சில பழக்க வழக்கங்கள் குறித்தும் தம்மீது தாமே ஒரு வித தாழ்வு மனப்பான்மை கொண்டிருக்க , அங்கு புதிதாக வரும் இன்னொரு இனம் அந்த தாழ்வு மனப்பான்மையைப் பயன்படுத்தி, அந்த மண்ணிலேயே அந்த மக்களை அறிவு ரீதியாக அடக்கி, தாம் தாழ்த்தப் பட்டவர்கள்தான் என்று அந்த மக்களையே நம்பவைத்து சமூகத்தின் ஆட்சியைப் பிடிக்கிறது .

தவிர தம்மை உயர்ந்தவர்கள் என்றும் அந்த மக்களைத் தாழ்ந்தவர்கள் என்றும் விளக்கும்படியாக ஒரு சிறந்த கதைக் காவியத்தையும் படைத்து அந்தக் கதையின் நாயகனைக் கடவுளாகவும் ஆக்கி அந்த மக்களிடமே பரப்புகிறது . அரசியல் ரீதியாகவும் தன்னை பலப் படுத்திக் கொண்டு அந்தக் காவியத்தை அந்த மக்கள் சமூகத்திடமும் திணிக்க திட்டமிடுகிறது .

இப்படிப் பட்ட ஒரு சூழலில்தான் சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வான்மீகியின் ராமாயணத்தை தமிழில் காவியமாகப் பாட வேண்டிய சூழல் கவிச் சக்கரவர்த்தி கம்பனுக்கு அமைந்தது . 'நாம் பாடாவிட்டாலும் அதை ஒட்டக்கூத்தரோ அல்லது வேறு யாரோ தமிழில் படைக்கத்தான் போகின்றனர்' என்ற நிலையில் வான்மீகி ராமாயணக் 'கதை ' அப்படியே தமிழில் வந்தால் அது தமிழ்க் கலாச்சாரத்துக்கே மாபெரும் இழுக்காகி விடும் என்ற இக்கட்டில் கம்பன் தானே அந்தப் பொறுப்பை ஏற்றான் .

வான்மீகி ராமாயணத்தின் அழுக்குகளைக் கழுவி எல்லா பாத்திரங்களுக்கும் உயர்வு தந்து கம்பராமாயணத்தைப் படைத்தான் . பின்னர் கம்பராமாயணமே இந்தியாவெங்கும் பரவியது . ராமனின் புகழுக்கு பெரும் காரணமாக அமைந்தது

--- இவையெல்லாம் இலக்கியமும் வரலாறும் இணைந்து கூறும் தகவல்கள் .

ஆனாலும் தன் இனத்து அரசனை கெட்டவன் என்று சொல்லி வேற்று இனத்து நாயகனை உயர்ந்தவனாகக் காட்ட வேண்டியிருக்கிறதே என்ற கம்பனின் வலி கம்பராமாயணம் முழுக்க விரவிக் கிடப்பதை ஊன்றிப் படித்தால் உணர முடியும் . அதன் விளைவுதான் ராவணனுக்கு கம்பன் கொடுக்கும் மிக உயர்ந்த அறிமுகம். அது மட்டுமல்ல வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றதை அடுத்து வரும் பகுதிகளில் ராமனை கம்பன் நார் நாராக கிழித்துத் தொங்க விடுவதும் தாரை புலம்பறு படலத்தில் வாலியின் கால் தூசுக்குக் கூட ராமன் ஆக மாட்டான் என்ற தொனியைக் கொண்டு வந்திருப்பதும் கூட கம்பனின் அந்த வலியின் விளைவுகள்தான் .

இவற்றிலும் கூட திருப்தி அடையாமல் "நான் ராமாயணத்தை எழுதியதற்காக நாளை என் சமூகமே என்னைப் பழிக்கும் சூழல் கூட வரும் . ஆனால் உண்மை மீண்டும் வெல்லும். என்னைப் புரிந்து கொள்பவர்கள் தோன்றுவார்கள் " என்று கம்பனே ஒரு பாடலில் குறிப்பிட்டதாகக் கூட ஒரு தகவல் உண்டு .

அது உணமை எனில் கம்பன் சொன்ன அந்த மனிதன் சுமார் அம்பது வருடங்களுக்கு முன்பே தோன்றி நம்மிடையே மணியாக ரத்தினமாக நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் .

மணிரத்னம் .... அன்றைய கம்பனின் ஏக்கத்தை ஓர் ஆயிரம் ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தீர்த்து வைத்திருக்கிறார் இந்த மாபெரும் கலைஞன் .

அந்த விதத்தில் ராவணன், யுகங்களைக் கடந்த படம் !

அன்று சூழ்நிலைக் கைதியாக இருந்த காரணத்தால் கம்பன் எழுத முடியாமல் தவித்த உண்மையான ராமாயணத்தை இன்று செல்லுலாய்டில் கருத்தாண்மையோடு எழுதியிருக்கிறார் யுகங்களைக் கடக்கும் மணிரத்னம் என்ற இந்தக் கலைஞன் .

எப்படி தளபதி படம் மகாபாரதக் கர்ணன் கதையின் நவீன வடிவமோ அதுபோல ராவணன் படம் ராமாயணத்தின் நவீன வடிவம் . அப்படியே ராமாயணக் கதையாக இருந்திருந்தால் இது இன்னொரு வழக்கமான மணிரத்னம் படமாகவே இருந்திருக்கும் . ஆனால் ராமாயணத்தை நவீனமாக எழுதியது மட்டுமின்றி திருத்தியும் எழுதிய அந்த மாவீரத்தால் நூறு தலை கம்பீரத்தோடு ஜொலிக்கிறது இந்த ராவணன் .

மலைவாழ் மக்களில் ஒருவனாக--- (ஒரு பக்கம் கட்டைப் பஞ்சாயத்து செய்பவன் என்று வசனத்தில் கூறப் பட்டாலும் )---அந்த மக்களின் காவலனாக வாழும் நேர்மையான வீரமான முரட்டு ராவணன்தான் வீரய்யன் (விக்ரம்) . அந்த மனிதன், திடீரென்று டி எஸ் பி தேவ் என்ற ராமனின் (பிருத்வி ராஜ்) மனைவியான சீதை போன்ற ராகினியை (ஐஸ்வர்யா ராய்) கடத்திக் கொண்டு வந்து வனத்தில் (அசோக வனம்?) சிறை வைக்கிறான் . வீரைய்யனுக்கு ஒரு முரட்டு அண்ணன் சிங்கராசு (பிரபு)
வீரய்யனின் நிறம் , உடல் , காட்டுத்தனம் , தன்னைக் கடத்திய விதம் போன்றவற்றால் வீரய்யனை அசுர ராவணனாகவே பார்க்கிறாள் ராகினி ஒரு நிலையில் தன்னை ஏன் வீரைய்யன் கடத்தினான் என்ற உண்மை ராகினிக்கு தெரிய வருகிறது .

வீரய்யனின் தங்கை வெண்ணிலா (பிரியாமணி ) சூர்ப்பனகை போன்ற தைரியமான பெண் . ராமாயணக் கதையில் தன்னிடம் காதலைச் சொன்ன சூர்ப்பனகையை--- பிடிக்காவிட்டால் கண்ணியமாக ஒதுக்கியிருக்க வேண்டிய--- லக்ஷ்மணன் அவள் மூக்கறுத்து அநியாயமாக அசிங்கப்படுத்தினான் . இந்த ராவணன் படத்தில் வீரைய்யன் தன் தங்கைக்கான கல்யாண ஏற்பாட்டுக் கொண்டாட்டங்களில் இருக்கும்போது அவனைக் கைது செய்ய , டி எஸ் பி தேவ் தலைமையில் ஊடறுக்கும் போலீஸ் , ஒரு நிலையில் வீரைய்யன் தங்கை வெண்ணிலாவை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போகிறது . அங்கு எல்லா போலீசாரும் சேர்ந்து வெண்ணிலாவை சீரழிக்கின்றனர் . வெண்ணிலா தற்கொலை செய்து கொள்கிறாள் .

தங்கையை அவமானப்படுத்தியவன் வீட்டுப் பெண்ணை தூக்கி வந்து சிறை வைப்பதன் மூலம் , தமது குடும்பத்துப் பெண் அவமானப் படும்போது ஏற்படும் வலியை அவர்களும் உணரவேண்டும் என்பதற்காக, ராவணன் சீதையைக் கடத்தியது ராமாயணம் . தன் தங்கையின் அவலம் மற்றும் மரணத்துக்குக் காரணமான டிஎஸ்பி தேவ் வின் மனைவியைக் கடத்திப் பிரித்து வைப்பதன் மூலம் , தான் அனுபவித்த வலியில் கால்பகுதியையாவது தேவுக்குத் தரவேண்டும் என்பது வீரய்யனின் எண்ணம் .

ஆனால் அங்கு ராவணனுக்கு நிகழ்ந்த எதிர்பாராத அதே சலனம் இங்கு வீரய்யனுக்கும் . ஆம் ! அழகி(ய)ல் மயக்கம் . அடுத்து காதல் .

மனைவியைத் தேடி தேவ் (அரசாங்கப் ) படை பலத்தோடு காட்டுக்கு வருகிறான் .

காட்டின் சகல ஏரியாக்களையும் அறிந்த--- குரங்கு போல மரம் பாறை எல்லாம் தாவித்தாவி ஏறும் திறன் வாய்ந்த--- ஒரு வன ஊழியர் (கார்த்திக்) தேவுக்கு துணை வருகிறார் (அனுமன் போல் என்பதை சொல்லவும் வேண்டுமோ?)

பிரச்னை வெடிக்கிறது . ராமாயணத்தில் ராமனின் தம்பி விபீஷணன் ராமனின் படைபலத்தைப பற்றி ராவணனிடம் சொல்லி சமாதானமாகப் போகலாம் என்கிறான் . இங்கும் வீரய்யனுக்கு அப்படி ஒரு (பிளஸ் டூ வரை படித்த) தம்பி . அந்த ராமனாவது விபீடணனை ஏற்றான் . ஆனால் இந்த நவீன ராம(தேவ)ன் வீரய்யனின் தம்பியை கொடூரமாக சுட்டுப் பொசுக்குகிறான் .

தன் கணவனை விட வீரய்யன் உண்மையில் நல்லவன் என்பதை உணர்ந்த ராகினி வீரய்யனின் காதலை ஏற்கும் மனநிலைக்கு வருகிறாள். பதிலாக தன் கணவனை உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தக் கூடாது என்று மட்டும் வீரய்யனிடம் கேட்கிறாள் .

ஒரு நிலையில் வீரய்யனும் தேவும் இரு மலை முகடுகளுக்கு இடையேயான ஒரு பெரிய மரப் பாலத்தில் மோதுகிறார்கள் . எப்படியாவது வீரய்யனைக் கொல்லவேண்டும் என்று தேவ் முயல . மாறாக தேவ் வைக் கொல்ல வாய்ப்பு வந்தும் , ராகினிக்கு கொடுத்த வாக்குக்காக தேவுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கிறான் வீரய்யன் .

ராகினியையும் கணவனோடு அனுப்பியும் வைக்கிறான் .

வீரய்யன் நடந்து கொண்ட விதம் பற்றி ராகினியிடம் தேவ் கேட்க, ராகினி வீரய்யன் பற்றி மிக உயர்வாக சொல்ல, மனைவியையே சந்தேகப் படுகிறான் தேவ் இனி தேவுடன் வாழ்வதை விட , காதலை மட்டும் சொல்லியபடி, வாய்ப்பிருந்தும் விரல் கூட படாமல் வைத்திருந்த வீரய்யனுடன் இருப்பதே மேல் என்ற உணர்வுடன் அவனைத் தேடி வருகிறாள் ராகினி .

காதலை மனம் திறந்த நெகிழ்வோடு பரிமாறும் தருணம் , பெரும் படையுடன் வரும் தேவ் வீரய்யனை சுட்டுக் கொள்ள முயல்கிறான் . துப்பாக்கி குண்டு சீறி வரும் தருணம் வீரய்யனைக் காப்பாற்றி துப்பாக்கிக் குண்டை தான் வாங்க ராகினி முயல, அவளைக் காப்பாற்றி எல்லாக் குண்டுகளையும் தன் மீது வாங்கிக் கொண்டு,

நல்ல காதலனாய் காவலனாய் தலைவனாய் ஆண்மகனாய் மாவீரனாய் சொல்லப் போனால் நிஜமான அவதார புருஷனாய் மரணம் அடைகிறான் வீரய்ய ராவணன் .

இப்படி முழுக்கதையையும் தெரிந்து கொண்டு பார்த்தால் கூட எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஒரு அற்புதமான படம் ராவணன் . சொல்லப்போனால் இந்தப் படத்தில் இவ்வளவு விஷயம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு பார்த்தால் இன்னும் கூட ஆழமாக மணியான இரத்தின உணர்வுகளை ரசிக்க முடியும் . கம்பநாடன் எழுத முடியாமல் விட்டு விட்டுப் போன கண்ணீர்த் துளிகளை மையாக ஊற்றி கடைசிக் காட்சிகளை எழுதியிருக்கிறார் மணிரத்னம் .

வழுக்கும் ஆபத்தான பாறையில் வழுக்கிச் சறுக்கியபடி விக்ரம் பாய்ந்து வருவது , உச்சியில் இருந்து குதிக்கும் ஐந்வர்ய்ச்ஸ் ராய் மரத்தில் தொங்கி கிளை உடைந்து பாய்ந்து சுழன்றுஅருவி நீரில் விழுவது , பின்னர் இருவரும் நீர்ச் சிதறல் விளையாடும் வழுக்குப் பாறையில் விழுதுகளைப் பிடித்தபடி ஏறுவது போன்ற காட்சிகள் நாம் பார்ப்பது சினிமாதான அல்லது நாமும் காட்டுக்குள் நின்றபடி பார்க்கும் நிஜக் காட்சிகளா என்ற பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன .

விகரம் .. உங்களைப் பாராட்ட தமிழில் கூடப் போதுமான வார்த்தைகள் இல்லை . பக் பக் சொல்லி கழுத்தைக் குலுக்கி தலையை உலுக்கி தட்டிக் கொண்டு கம்பீரப் புன்னகையோடு கண்களை விரிக்கும் ஒவ்வொரு முறையும் உங்கள் ஒற்றைத் தலையின் பக்கவாட்டில் பத்துத் தலைகள் முளைப்பதை மானசீகமாக உணரமுடிகிறது .

முழு முகம் மறைக்கும் மேக்கப்பில் கண்களை சிமிட்டியபடி சுருதி விலகிய ராகத்தில் பேசிய சீதைகளையே இதுவரை சினிமாவில் பார்த்த நமக்கு நிஜ சீதையின் உணர்வுகளின் அருவியாக பிரமிக்க வைக்கிறார் ஐஸ்வர்யாராய் .

லொக்கேஷன்கள் , சந்தோஷ் சிவன் மணிகண்டன் இவர்களது ஒளிப்பதிவு சமீர்சந்தாவின் கலை இயக்கம் இவை மணிரத்னத்தின் படைப்பாற்றலோடு இணைந்து தொழில்நுட்ப ரீதியாக அசுர பலம் கொண்ட படமாக ராவணனை மாற்றியுள்ளன . பெரிதாக ஏமாற்றியது ஏ ஆர் ரகுமான் . (ஏன், ரகுமான் ? ஏன் ?)

"சோத்துல பங்கு கேட்டா எலையப் போடு ; சொத்துல பங்கு கேட்டா தலையப் போடு " என்கிறார் வைரமுத்து . காட்டில் வாழும் அந்த இயற்கை மனிதர்களுக்கு சொத்தே சோத்துக்காகத்தானே கவிஞரே !

பிரியாமணியின் பிளாஷ்பேக் காட்சிகளில் துவங்கி கடைசி வரை வசனங்களால் அசத்தியிருக்கிறார் சுஹாசனி மணிரத்னம் .
படத்தின் முதல் பகுதி, சற்று இறங்கி, கதையிலும் பாய்வு இல்லாமல் கொஞ்சம் பயமுறுத்தியது நிஜம் ஆனால் இரண்டாம் பகுதியில் எல்லா விதங்களிலும் மகுடம் தொட்டுவிட்டார் மணிரத்னம் .

அந்த தொங்குபால சண்டைக் காட்சி பிரம்மாண்ட பிரம்மாதம் .

தான் கிடைத்த பின்னும் வீரய்யனைக் கொல்லத் துடிக்கிற கணவனைப் பார்தது " நீங்க தேடி வந்தது என்னையா? இல்லை அவரையா?" என்று ராகினி கேட்கும் இடம் திரைக்கதையின் சிகரம் என்றால் ....

வீரய்யன் ராகினி இருவரின் தனித்தையான புன்னகைக்கும் புகைப் படங்களை வேகமாக (தேவ சுழற்றுவது போல ) சுழற்றிக் காட்டி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்பது போல தேவ் உணர அதன் மூலம் அவன் தன் மனைவியை சந்தேகப் படுகிறான் என்பதற்கான முன்னோட்டத்தை அழுத்தப்படுத்தயிருக்கும் உத்தி டைரக்ஷனின் உச்சம் .

மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படம் வெளிவந்த போது, சில பல காரணங்களுக்காக, சொல்ல வந்த கதைக்கு எதிராகவே சிலகாட்சிகளை மணிரத்னம் வைத்தார் என்று விமர்சனங்கள் எழுந்தது உண்டு . ஆனால் இந்தப் படத்தில் அப்படி எதுவுமே சொல்ல முடியாத அளவுக்கு ----எந்த விஷயத்திற்காகவும் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் ---சொல்ல விரும்பிய கதையை நூறு சதவீத துணிச்சலோடு சொல்லியிருக்கும் விதத்தில்

திரையுலகின் சுப்ரமணிய பாரதியாக உயர்ந்து நிற்கிறார் மணிரத்னம் . பாஞ்சாலி சபதம் எழுதிய பாரதி ஒரு வேளை சீதையின் கேள்விகள் என்று எதுவும் எழுதி இருந்தால் இப்படித்தான் எழுதி இருப்பான் .

வீரா சுடப் பட்டு ராகினியைப் பார்த்தபடியே பாதாளத்தை நோக்கிப் பயணிக்கும் போது காற்றும் ஒலியும் கசியும் ஆன்மாவின் நடுக்கமுமாக ராகினி வீரா என்று அழைப்பது, யுகயுகமாக அடக்கி வைக்கப் பட்டு திடீரென வெளிப்பட்ட சீதையின் குரலாகவே ஒலிக்கிறது .

வெகு ஜன மக்கள் பார்க்கும் திரையரங்கில் நாம் இந்தப் படத்தைப் பார்த்தபோது படம் முடிந்த பின்பு அவர்கள் முகத்தில் நாம் பார்க்க முடிகிற--- உறைந்து கிடக்கும் அந்த பிரம்மிப்புதான் மணிரத்னத்திற்குக் கிடைத்திருக்கும் முதல் விருது .

மணிரத்னத்திற்கு இந்த அற்புத தருணத்தில் ஒரு வேண்டுகோள் . கர்ணன் கதையில் இருந்து தளபதி எடுத்தது உங்களின் சாதனையல்ல . அது ஒரு நிகழ்வு . ஆனால் ராமாயணத்தில் இருந்து வந்துள்ள ராவணன் உங்கள் சாதனை. ஆனால் இதை விட உங்களுக்கு முக்கியமாக இன்னொரு கடமை இருக்கிறது .

சிலப்பதிகாரத்தை நீங்கள் முழுமையாக உள்வாங்கி உங்கள் பாணியில் ஒரு படமாக எடுக்க வேண்டும் . இந்தக் கதைகளை விட உங்களுக்கு அது பிரம்மாதமாக கைவரப் பெறும் என்பதற்கு அடையாளம்தான் உங்களது மறக்க முடியாத மௌனராகம் படம் .

உங்களது இன்றைய திரைக்கதை மற்றும் தொழில்நுட்பத் திறமையில் சிலப்பதிகாரம் படமாக வெளிவந்தால் .....
என்றென்றும் உலகின் சிறந்த பத்துப் படங்களில் ஒன்றாக --- மாற்ற முடியாத சாதனையாக மாறி, அது உங்களின் நிரந்தரமான சரித்திரமாகவே அமையும் . அவசியம் செய்யுங்கள்

இராவணன் ---- மணியான ரத்னமான அவதாரம் !


3 comments:

seeprabagaran said...

இராவணன் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. மணிரத்தினத்தின் முந்தைய படங்களில் மீது எனக்கு எதிரான கருத்துகள் உண்டு. இந்தப்படத்தின் கதையை உங்கள் பதிவின் மூலம் முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது.

எந்தவொரு சமரசத்திற்கும் உடன்படாமல் தன்னுடைய படைப்பை முழுமையாக வெளிப்படுத்தும் போது நிச்சயமாக ஒரு படைப்பாளி வெற்றியடைவான்.

இராவணனின் தங்கை சூர்ப்பனகை குருநில அரசியாக வாழ்ந்தார் என்றும், அவள் வனத்தில் தனிமையில் உளாவியபோது இராமனும் இலக்குவணனும் பலாத்காரம் செய்தார்கள் என்றும், அதனால் அவள் அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலைசெய்துகொண்டால் என்று ஒரு சில வரலாற்றுகுறிப்பு உள்ளது.

ஆதி said...

அண்ணா அருமையான வமர்சனம்.

சு.செந்தில் குமரன் said...

நன்றி பிரபா , ஆதி

Post a Comment