Wednesday, June 30, 2010

# இரவுக்கு ராஜா கண்ணதாசன்






மக்களுக்குப் புரியாத வார்த்தைகளில் பாட்டெழுதி அவர்களை மலைக்க வைத்து வாய் பிளக்க வைப்பதுதான் நல்ல கவிஞனுக்கு அடையாளம் என்று பலரும் எண்ணி எழுதிக் கொண்டிருந்த சூழலில் , மலைக்க வைத்த கவிதைகளை மக்களுக்குப் புரிந்த வார்த்தைகளில் சொல்லி அவர்களையும் ரசிக்க வைப்பதில் மகுடம் சூடிய கவிஞன் கவியரசு கண்ணதாசன் .

கண்ணதாசன் பற்றி அதிகம் வெளியே தெரியாத பல அரிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் அவரது அண்ணனும் பிரபல படத் தயாரிப்பாளருமான ஏ எல் சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் .

" குப்பஞ் செட்டியார் மகன் நல்லாஞ் செட்டியார் . நல்லாஞ் செட்டியார் மகன் வெள்ளையப்பச் செட்டியார் . அவரது மகன் சாத்தப்பச் செட்டியார் . இந்த சாத்த்தப்பச் செட்டியாரின் பிள்ளைகள்தான் எனது மாமனார் ஏ எல் சீனிவாசன் அவர்களும் கவியரசு கண்ணதாசன் அவர்களும் . எனது கணவர் கண்ணப்பன் சீனிவாசனின் மகன் . எனவே கண்ணதாசன் எனக்கு சின்ன மாமனார் .

வெள்ளையப்பச் செட்டியார் அந்தக் காலத்திலேயே ஒரு பெரிய நூற்பாலை வைத்திருந்தவர் . ஆங்கிலேயர் காலத்திலேயே வெள்ளையப்பச் செட்டியாருக்காக ரயில் தினமும் சில நிமிடங்கள் நின்று போகுமாம் . இவர் அங்கு இருந்தபடி சென்னையில் உள்ள அயனாவரத்துக்கே உரிமைப்பட்டவராக இருந்தவராம் . அவருக்கு சென்னையில் ஜமீன்தார் என்றே பேராம்

கண்ணதாசனின் தந்தை சாத்தப்பச் செட்டியாரும் அப்படிதான் . அவர்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் ஊரில் எல்லோரும் வந்து சாப்பிட வேண்டும் என்று ஏற்பாடு செய்வார் . அதோடு நிற்காமல் நடந்து போய் ஊரில் யார் வீட்டிலாவது சமைக்கிற புகை வருகிறதா என்று பார்ப்பாராம் . யாரும் சமைத்தால் உரிமையாக கோபப் பட்டு அழைப்பாராம் . தவிர யாராவது " நாங்க சமைக்கல. குளிக்க வெந்நீர் போட்டிருக்கோம் என்று சொன்னால் அதை குறித்துக் கொண்டு அவர்கள் சொன்னது உணமைதானா என்று பார்தது அவர்கள் சாப்பிட வருகிறார்களா என்று கவனிப்பாராம் . அந்த அளவுக்கு விருந்தோம்பலில் சிகரம் தொட்டவர் அவர் .

பொதுவாக கவிதை எழுத நல்ல சூழல் இருந்தால் நல்லது என்பார்கள் . பசுமை . வயல் வரப்புகள் . நதி . தோப்பு . கூட்டம் கூட்டமாய் பறக்கும் பறவைகள் இவைகள் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள் அல்லவா? அது எதுவுமே இல்லாத ஊர்தான் கவிஞர் பிறந்த சிறுகூடற்பட்டி . வறண்ட செம்மண் பூமி . அங்கிருந்து அந்தக் கவியரசர் தோன்றியதுதான் நான் அவரிடம் வியக்கும் முதல் விஷயம் .

கண்ணதாசன் சின்ன வயதில் குடியிருந்த இடம் மிகப் பெரிய கூட்டுக் குடும்பம் . நான்கு மூலைகளிலும் நான்கு வீடுகள் இருக்க நான்கு வீட்டின் பின் புறங்களும் சந்திக்கும் படியாக ஒரு பெரிய முற்றம் இருக்கும் . அந்த இடத்தில் நான்கு வீட்டுக் காரர்களும் புழங்குவர் . நிறைய குழந்தைகள், பெண்கள் , சடங்குகள் , சம்பிரதாயங்கள் பார்தது வளர்ந்தவர் அவர் . திருமணங்கள் நடந்து கொண்டிருக்கும் . விதவிதமான பெயர் கொண்ட நகைகளின் புழக்கம் ஒரு பக்கம் . குழந்தைகள் பிறக்கும் .தாலாட்டுகள் ஒலிக்கும் .

பொதுவாக படைப்பாளிகள் படைப்புக்காக அனுபவங்களை தேடுவார்கள் என்று சொல்வார்கள் . ஆனால் மாமாவைப் பொறுத்தவரை அவர் கண்ணுக்கு முன்னாலேயே வாழ்க்கை அனுபவங்கள் சிறு வயதில் கிடைத்தன . அது பின்னாளில் அவரது பாடல்களில் வலிமையாக விளக்கமாக ஒலித்தன என்றால் மிகையாகாது .

மகனைப் பற்றி எல்லோரையும் விட அம்மாவுக்குத்தானே அதிகம் தெரியும் . கவிஞரைப் பற்றி சின்ன வயதில் அவர்கள் தாயார் " என் புள்ள வளந்த பின்னாடி ஆயிரம் பாட்டுக்கு அடி எடுத்துக் கொடுப்பான் " என்று சொல்லியிருக்கிறார் . அது போலவே கண்ணதாசன் பாடல்களால் உலகளந்தார் .

எனது மாமனார் சீனிவாசனுக்கு சின்ன வயதில் இரவு என்றால் பயமாம். ஆனால் அவரை விட இளையவரான கண்ணதாசன் கொஞ்சம் கூட பயமில்லாமல் இரவில் காடு மேடு எல்லாம் சுத்துவாராம் .
அதனால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் "பகலுக்கு ராஜா சீனிவாசன் . இரவுக்கு ராஜா முத்தையா " (கண்ணதாசனின் இயற்பெயர் ) என்பார்களாம்

இப்படியெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்த குடும்பம் ஒரு நிலையில் நொடித்தது . இப்போது சென்னையில் நியூ உட்லண்ட்ஸ் உள்ள இடத்தில் அப்போது முருகப்பச் செட்டியார் என்பவரின் வீடு இருந்தது . அங்கு இருந்தபடி அஜாக்ஸ் என்ற கம்பெனியில் சீனிவாசன் கணக்கேழுதுபவராகவும் கண்ணதாசன் ஒரு எளிய ஊழியராகவும் வேலைக்குப் போன கொடுமையும் நடந்தது .

பின்னாளில் அந்தக் கம்பெனி தங்கள் நிறுவனம் பற்றிய ஒரு வெளியீட்டில் இருவரது படத்தையும் போட்டு இவர்களை ஊழியர்களாகக் கொண்டிருந்த பெருமை பெற்ற கம்பெனி என்று மகிழ்ந்தது .
பிறகு ஒரு நிலையில் இருவரும் மீண்டும் ஊருக்கே போய் பின்னர் அங்கிருந்து கண்ணதாசன் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் பட நிறுவனத்துக்கும் சீனிவாசன் கோவை ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் வேலைக்குப் போனார்கள் .

என் மாமனார் சீனுவாசன் ஒரு பெரிய தயாரிப்பாளராகவும் சின்ன மாமனார் கண்ணதாசன் மாபெரும் கவிஞராகவும் உயர்ந்தார்கள் . பொதுவாக கவிஞர் ஆள் யார் என்று பார்க்காமல் எல்லோருக்கும் அற்புதமான பாட்டுக்கள் தருவார் என்றாலும் அண்ணன் படம் என்றால் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டு அற்புதமான பாடல்கள் தருவார் .

திருடாதே , சாந்தி , பெண் என்றால் பெண் , லக்ஷ்மி கல்யாணம் , பட்டணத்தில் பூதம் , சாரதா என்று எததனையோ படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம் .

அதுபோல தனிப்பட்ட அண்ணன் தம்பி பாசத்தில் உள்ள கொடுக்கல் வாங்கல் போக , எழுதும் ஒவ்வொரு பாட்டுக்கும் அப்போதே பாட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று கவிஞருக்கு கொடுத்து விடுவார் என் மாமனார் சீனிவாசன் .

இங்கு ஒரு செய்தி உண்டு . அதாவது ஒருமோரை கண்ணதாசன் தன் அண்ணனிடம் பண உதவி கேட்டதாகவும் அவர் மறுக்க அந்த விரக்தியில்தான் அண்ணன் என்னடா தம்பி என்னடா என்ற பாட்டை எழுதியதாகவும் கூறப் படும் தகவல்தான் அது .. ஆனால் அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது . அந்தப் பாட்டுக்கு ஒரு அரசியல் பின்னணி உண்டு என்றும் கூறக் கேட்டிருக்கிறேன் . ஒருவேளை அது உண்மையாக இருந்தாலும் கூட எதோ ஒரு சூழலில் பணமுடை காரணமாக என் மாமனார் மறுத்திருக்கலாம் . குழந்தையுள்ளம் கொண்ட கவிஞரும் ஒரு கவிஞனுக்கே உரிய குணத்தோடு அதைப் பாட்டாக வடித்திருக்கலாம் .
மற்றபடி அவர்கள் பாசமுள்ள அண்ணன் தம்பிகளாக இருந்ததற்கு பல உதாரணங்கள் கூற முடியும்.
என் மாமனார் தனது ஏ எல் எஸ் புரடக்ஷன்ஸ் மூலம் அகில இந்தியா முழுக்க வெற்றிக் கொடி நாட்டியவர் . பல வெற்றிகரமான இந்திப் படங்களைத் தயாரித்தவர் . அதனால் பல இந்திப் பட சூப்பர் ஸ்டார்களுக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர் . அவர்கள் எல்லோரும் என் மாமனாரை கிங் என்றுதான் செல்லமாக அழைப்பார்கள் .

ஒரு முறை சென்னை வந்த இந்தி நடிகர் திலீப் குமார் என் மாமனாரிடம் " கிங் ....இங்க கண்ணதாசன்னு ஒரு பெரிய கவிஞர் இருக்காரே .. அவரை நான் சந்திக்கணும் . நீங்கதான் ஏற்பாடு செய்யணும் " என்றுமிகுந்த ஆர்வத்தோடு கூற , எதுவுமே சொல்லாமல் ஏ எல் எஸ் கண்ணதாசனுக்கு போன் செய்து " தம்பி கொஞ்சம் வந்துட்டுப் போப்பா " என்று சொல்ல , அருகில் இருந்த கவிஞரும் உடனே சென்று விட்டார் .

அவ்வளவு சீக்கிரம் கவிஞர் வந்து விடுவார் என்று எதிர்பார்க்காத திலீப் குமார் என் மாமனாரைப் பார்தது வியந்து போய் "நீங்க கூப்பிட்டதும் கண்ணதாசனே உடனே வந்து விட்டாரே ." என்று கூற, என் மாமனார் அமைதியாக "கண்ணதாசன் என் உடன்பிறந்த தம்பிதான்" என்று கூறியிருக்கிறார் . வியப்பின் உச்சிக்கே போன திலீப் குமார் " கண்ணதாசன் உங்கள் உடன் பிறந்த தம்பிஎன்றால் நிஜமாகவே நீங்கள் கிங் தான் "என்று பாராட்ட சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்தது நெகிழ்ந்து நின்ற சம்பவமும் உண்டு .

அவ்வளவு ஏன்?

ஏ எல் சீனிவாசனின் மகனான என் கணவர் கண்ணப்பனும் நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் . இது கலப்புத் திருமணமும் கூட . இருவரது குடும்பத்துக்கும் தெரியாமல் நாங்கள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு நேராக கண்ணதாசனைப் பார்த்துதான் ஆசி வாங்கினோம் .

"சித்தப்பா எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க ' என்று என் கணவர் கேட்டதும் உடனே தயங்காமல் ஆசிர்வாதம் செய்த கவிஞர் நாங்கள் கிளம்பியதும் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? தன் அண்ணனுக்குப் போன் செய்து விசயத்தைச் சொன்னதுதான் !. என் மாமனார் எங்கள் திருமணத்தை அங்கீகரிக்க மறுக்க , கவிஞரோ அதன் பின் முழுக்க தனது அண்ணனுக்குதான் துணை நின்றார் . அந்த அளவு அண்ணன் பாசம் !

அது மட்டுமல்ல ! என் மாமனாரும் அவரது மனைவியும் பிரிந்து இருந்த சூழலில் மகனும் அண்ணன் மனது புண்படும்படி இப்படி ஒரு காரியம் செய்து விட்டானே என்ற வருத்தத்தில்தான் " கேளாய் மகனே ... கேளொரு வார்த்தை" என்ற பாடலையே எழுதினார் .

பின்னாளில் கவிஞரின் அன்பை நாங்கள் பெற்றோம் . என் திருமணத்தை அவர் எதிர்த்ததை நான் தவறாகவே நினைக்கவில்லை . இந்த உயரிய குடும்பத்துக்கு தகுதியான பெண்ணாக என் அன்பாலும் பாசத்தாலும் நான் மாறினேன் .

சிறு கூடற்பட்டியில் கவிஞர் பிறந்த வீடு பாழடைந்து கிடந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பே அந்த இடத்தில் என் கணவர் இருபது லட்சம் செலவில் பெரிய வீடு கட்டினார் . அப்போது கவிஞர் தவழ்ந்த அந்த வீட்டின் நடு மையத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மண்ணை எடுத்து சென்னை கொண்டுவந்தேன் . இப்போதும் அதை பொக்கிஷமாக வைத்திருக்கிறேன் .
என் மாமனார் இறந்தது அவரது ஐம்பத்தி நான்காம் வயதில் . கண்ணதாசன் இறந்ததும் அவரது ஐம்பத்தி நான்காம் வயதில்தான். தவிர சீனிவாசனின் மகள் அதாவது எனது நாத்தனார் ஒருவரும் அவரது ஐம்பத்து நான்காம் வயதில் இறந்தார் . இதோடு முடிந்ததா? என் கணவர் கண்ணப்பனும் தனது ஐம்பத்து நான்காம் வயதில்தான் இறந்தார் . இந்த விஷயம் உண்மையிலேயே சிலிர்க்க வைக்கிற ஒன்றாக இருக்கிறது .

வழக்கமாக வரும் கவிஞரின் பிறந்த நாட்களை விட இந்த வருடம் வரும் அவரது பிறந்தநாள் சிறப்பானது . ஏனெனில் இன்று அவரது பிறந்தநாள் மட்டுமல்ல . அவர் பிறந்த சிறு கூடற்பட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கோவிலில் கும்பாபிஷேகமும் இன்று நடக்கிறது . நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கும் தினம் நாங்கள் அந்த கும்பாபிஷேக விழாவில்தான் இருப்போம் .

இன்னொரு விஷயம் . கவியரசு கண்ணதாசன் பிறந்த இதே ஜூன் இருபத்திநான்காம் தேதிதான் நானும் பிறந்தேன் . அதில் எனக்கும் பெருமைதான் ' என்று சந்தோஷத்தில் முடித்தார் ஜெயந்தி கண்ணப்பன் .

No comments:

Post a Comment