Monday, June 7, 2010

#பெண்சிங்கம் -- கலைஞரின் விமர்சனம்




நமது சு.செந்தில்குமரனார் வலைப் பூவிலே , பெண் சிங்கம் படத்து விமர்சனத்தை கண்ணுற்று ஆவலோடு படிக்கத் துவங்கியிருக்கும் திரைப்படக் கலைஞர்களே! விமர்சக நெஞ்சங்களே ! தோழமை வலைப் பூவர்களே ! மற்றும் எனது உயிரினும் மேலான அன்பு ரசிகப் பிறப்புக்களே!
வணக்கம் !
டாக்டர் கலைஞர் அவர்களின் கதை திரைக்கதை வசனத்தில் உருவாகி வெளிவந்திருக்கும் பெண்சிங்கம் படத்தை காண்கிற வாய்ப்பு எனக்கு அமைந்தது . அதை வாய்ப்பு என்று சொல்வதை விட , சூழல் என்று சொல்வது சாலப் பொருத்தம் என்று நினைக்கிறேன் . எனவே அதையே நான் குறிப்பிடுகிறேன் .

பாலி ஸ்ரீரெங்கம் இயக்க உதய்கிரண் என்ற தெலுங்கு நடிகர் , மீரா ஜாஸ்மின் என்ற மலையாள நடிகை மற்றும் ரிச்சர்டு என்ற மலையாள நடிகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரம் ஏற்று முத்தமிழ் அறிஞரின் வசனத்தை பேசி இருக்கிறார்கள் . அம்மாவோ! தமிழர் யாருக்கும் நாயக நாயகி கதாபாத்திரம் தராத இதுவன்றோ திராவிடத் திரைப்படம் . எண்ண எண்ண இதயம் பூரிக்கின்றது .

வனத்துறை அதிகாரியாக பணியாற்றும் இளைஞன் சூர்யா . அவனுக்கும் அவனது அலுவலகத்திலே கணிப்பொறியாளராகப் பணியாற்றும் இளம் பெண்ணுக்கும் தமிழ்த் திரையுலக விதிகளை முன்னிட்டு உடனடிக் காதல் வருகிறது . இந்திய ஆட்சிப் பணிக்கான கல்வி கற்க ஆசைப் படும் அந்தப் பெண்ணோ தனது குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் காரணமாக அல்லலுற, படிப்புச் செலவை சூர்யாவே ஏற்கிறான் .அதே நேரம் பெண்கள் வீரத்துடன் விளங்க வேண்டும் என்று அவளை இந்தியக் காவல் பணிக்கு மடை மாற்றியும் விடுகிறான் .

சூர்யாவின் தாய் ஒரு நேரிய--- சீரிய ---வீரிய பெண் நீதிபதி.சூர்யாவுக்கு ஒரு நண்பன் . அவனது பெயர் நாகேந்திரன் . சிறந்த தமிழ் ஆர்வலன் . நல்ல தமிழில் பேசுபவன் . பெரியார் அண்ணாவை போற்றிப் புகழ்பவன் . பெண்ணுரிமை பேசுபவன் . பாரதி தாசனின் பாட்டை பாடுபவன் . "வரதட்சணை என்பது வடமொழி . கல்யாணப் பரிசு என்றுதான் சொல்ல வேண்டும்" என்ற அளவுக்கு தமிழாளன்..
அவனது பெண்ணுரிமைக் கருத்துகளையும் நல்ல தமிழையும் கண்டு அன்பு கொண்டு செல்வச் செழிப்பான ஒரு இளம்பெண் அவனை விரும்புகின்றாள் . இதயத்தைப் பறி கொடுக்கின்றாள் .

ஆனால் , அய்யகோ!
திருமணத்துக்குப் பிறகுதான் அவன் மிகப் பெரும் பெண் பித்தன்; பணத்துக்காக பெண்களை ஏய்த்து சீரழிப்பவன் என்பது புரிகின்றது; தெரிகின்றது . தன் நண்பனின் சுய ரூபம் அறிந்த சூர்யாவும் மனம் கொதிக்கிறான் .

இந்த சூழலிலே , வனத்தில் மரங்களை முறையற்ற முறையிலே வெட்டிக் கடத்துகின்ற சமூக விரோதச் செயலால் சூர்யாவால் நட்டப் பட்டு கோபத்திலே இருக்கும் ஒரு கொடியவன் , சூர்யாவைப் பழிவாங்க இந்த நட்பு மோதலைப் பயன்படுத்துகிறான் .

தன் மனைவியைக் கொல்லும் நாகேந்திரன் அந்த மரக் கடத்தல்காரனின் திட்டப்படி பழியை சூர்யா மீது சுமத்தி கராக்கிரகத்துக்கு அனுப்புகின்றான் . படிப்பு முடித்து காவல் துறை உயர் அதிகாரியாக பணியில் சேரும் காதலியும் பெண் நீதிபதியாக பணி நடாத்துகிற தாயாரும் சேர்ந்து சூர்யாவை எப்படிக் காப்பாற்றுகின்றனர் என்பதுதான் இந்த பெண் சிங்கம் என்பதை தெரிவிக்க வேண்டிய கடமை இங்கு எனக்கு உண்டு என்பதை நீங்கள் அனைவரும் உணர வேண்டுமாய்ப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் ..

கலைஞரே முன்பு எழுதிய பாசப் பறவைகள் படம் போல இரண்டாவது பகுதி கனமாக வருமோ என்று நம்பவைத்து .... நன்றாகவே ஏய்த்து விடுகிறார்கள் என்பதை இங்கு நான் குறிப்பிட்டே ஆக வேண்டும் .

படத்தின் ஒளிப்பதிவும் வண்ணக் கலவையும் படம் பிடிக்கப்பட்ட பல இடங்களும் நம் கண்களுக்கு கவின்மிகு விருந்தாய் அமைந்துள்ளன என்பதை உங்களுக்கு தெரிவித்திட நான் மறந்தேன் என்றால் அது நெறியாகாது .

அதே போல 'கலாவதி என்று பெயர் வைத்துக் கொண்டு காலாவதி ஆகிவிட்டாயே' போன்ற சில பல இடங்களிலே கலைஞரின் வசனத்தின் அழகு ரசிக்க வைக்கின்றது .
அதே போல சென்னையின் முக்கியச் சாலைகளின் பெயரை ஆங்கிலத்திலே நண்பன் சொல்கையிலே அதை தடுத்தாட்கொண்டு மறுத்து அண்ணா சாலை என்றும் காமராசர் சாலை என்றும் அழைக்க வேண்டும் என்று நாயகன் அறிவுறுத்துகிற இடத்திலே வசனம் பட்டொளி வீசிப் பறக்கின்றது என்பது நூற்றுக்கு நூறு உண்மையேயாம் !

ஆயினும் ஒரு மூத்த வசனகர்த்தாவான கலைஞர் தனது வசனத்திலே அதுவும் பெண்களை உயர்த்தி கதையமைத்து எடுக்கப் பட்டிருக்கிற படத்திலே வரும் வசனத்திலே ....அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு கண்ணியமான பெண்மணியை மேட்டர் என்று கீழான சொல்லால் விமர்சித்து வசனம் எழுதியிருத்தல் முறையாமோ ?

அதே போல தான் வசனம் எழுதிய படத்திலே தன்னைத்தானே உயர்த்தி "தலைவர் சொன்னாரு "என்று தற்புகழ்ச்சியாக எழுதிக் கொள்ளுதல் நெறியாமோ?
ஒருக்கால் அந்த வசனங்களை கலைஞர் எழுதவில்லை . படத்திலே நடிக்கும்போது தம்பி விவேக்தான் சேர்த்திருக்கிறார் என்றால் , படம் உருவாகிய ஒவ்வொரு கட்டத்திலும் பலமுறை படத்தை பார்தது பார்தது ஆலோசனை சொன்ன கலைஞர் இவற்றை தவிர்த்திருக்க முடியாதா? இதை தயை கூர்ந்து அனைவரும் எண்ணிப் பார்த்திடல் வேண்டும் .

படத்தின் ஆரம்பத்தில் எழுத்துப் போடுகின்ற தருணத்திலே பாடலாசிரியர்கள் பெயர்கள் வரும்போது கலைஞர் பெயரைப் போட்டுவிட்டு பின்னர் பாரதிதாசன் பெயரைப் போடுகிறார்கள் . இது நியாயமா? நல்லவேளை படத்தில் திருக்குறள் சிலப்பதிகாரம் போன்றவற்றைப் பயன்படுத்த வில்லையே . பயன்படுத்தியிருந்தால் திருவள்ளுவர் , இளங்கோ அடிகள் பெயர் கூட கலைஞர் பெயருக்கு கீழே வந்திருக்குமே என்ற அச்சம் எழுவதை தவிர்த்திட இயலவில்லையே .

படத்தில் வரும் ஒரு சுவரொட்டியிலே 'கண்டு பிடித்து' என்ற சொல் 'கண்டுப்பிடித்து ' என்று எழுத்துப் பிழையோடு வருகிறது . முத்தமிழறிஞரின் படத்தில் முடமான தமிழா ? வேதனை ! வேதனை !

மற்றொரு காட்சியிலே அரசு வழக்கறிஞர் அநியாயமாக வாதட பின்னணிக் குரலிலே தம்பி ராதாரவி "அரசு வழக்கறிஞர் அல்லவா? அப்படிதான் பேசுவாரு" என்கிறார் . முதல்வராகவும் இருக்கிற கலைஞரின் படத்திலே இப்படி ஒரு வசனம் வருதல் முதல்வருக்கு ஏற்புடையதுதானா என்ற கேள்வியை இந்த வலைப் பூ மாமன்றத்தின் மூலம் கேட்கிறேன் .

பெரும்பாலான காட்சிகளில் ஒளிப்பதிவுக் கருவியை இயக்கி விட்டு தேநீர் அருந்தப் போய்விட்டாரோ என்று என்னும் அளவுக்கு நின்ற நெடுமரமாய் நிற்கிறது ஒளிப்பதிவுக் கருவி . விளைவாக , பாடல் காட்சிகளில் எதோ மேடையில் ஆடுவது போல நடிப்பவர்கள் எல்லோரும் ஆடிக் கொண்டே போகின்றனர் .

படத்தில் ஐம்பது லட்ச ரூபாய் காசோலை என்று வருகிறது . ஆனால் காட்சியிலே இருக்கிற காசோலையில் பத்து லட்ச ரூபாய் என்று ஆங்கிலத்திலே எழுதப் பட்டிருக்கிறது . அம்மவோ!

படத்தில் சிறந்த சிறப்பம்சம் என்றால் அது பாடல்கள்தான் .

சற்றே பழைய மெட்டுக்களில் ஆனால் இனிய மெட்டுக்களில் ஒலிக்கும் பாரதிதாசன் பாடலாகட்டும் .....அந்தகால இசை விற்பன்னர்களின் பெயர்களை இணைத்து கலைஞர் எழுதியிருக்கும் "வீணையில் எழுவது வேனுகானமா"என்ற அற்புதமான பாடல் ஆகட்டும் .. வைரமுத்து .பா.விஜய் ஆகியோர் எழுதிய பாடல்கள் ஆகட்டும் . அருமை ! பாராட்டுக்கள் !

இரண்டாம் பகுதியில் ஒரு வலுவான நீதிமன்ற வாதப் பிரதிவாத அறிவுப் பூர்வ காட்சிகளை எதிர்பார்த்தால் ரகசியமாகப் படம் பிடிக்கப் பட்ட ஒரு காட்சியைக் காட்டி அதையே சாட்சியாக வைத்து படத்தை முடித்தல் பெரும் ஏமாற்றமாக அல்லவா அமைந்து விட்டது .

நீதி மன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப் பட்ட நாகேந்திரன் அடுத்த காட்சியிலேயே நீதிபதி வீட்டுக்கே வந்து நீதிபதியை கொலை செய்துவிட்டுப் போகிறார் . தமிழக முதல்வரின் திரைக்கதையிலேயே தமிழக காவல்துறையை இவ்வளவு மோசமாக சித்தரித்ததால் பின்னர் மற்ற படைப்பாளிகளை எப்படிக் குறை சொல்ல முடியும் . இதை அனைவரும் எண்ணிப் பார்த்திடல் வேண்டும் .

சென்னை சங்கமம் போன்றவற்றின் பிரச்சார களமாக, காட்சிகள் இருத்தல் நன்றா?

இவை எல்லாவற்றையும் விட கொடுமையான ஒன்றை நினைக்க நினைக்கக உள்ளம் குமுறும் ஒரு கொடுமையை அவலத்தை நான் குறிப்பிடாமல் விட்டால் இந்த விமர்சன உரை முழுமையாகாது என்பதால் நேரம் கடந்தாலும் அது பற்றி சற்று விரிவாகவே கூற விழைகிறேன் .

தமிழ்நாட்டிலே -- தமிழ் மண்ணிலே -- இந்த திருவிடத்திலே -- நல்ல தமிழ் பேசுவோர் அறுகிக் கொண்டிருக்கும் அவலச் சூழலிலே , சுயமரியாதைச் சிந்தனைகள் கொண்ட இனமான மாந்தர்கள் இல்லாது போய்க் கொண்டிருக்கு கையறு நிலையிலே ---

ஒரு நல்ல தமிழ்ப் பேச்சாளனை , தமிழ் இலக்கியவாதியை, பெண்ணுரிமைக் கருத்தாளனை , பாரதிதாசன் பாடல்கள் பாடும் ஒருவனை , பெரியார் அண்ணா புகழ் பாடும் ஒருவனை , காமந்தகனாக , பெண் பித்தனாக , பணப் பேயாக, கட்டிய மனைவியை முதலிரவு அறையிலே அந்த சப்ர கூட மஞ்சத்திலே அரை நிர்வாணமாகப் படம் பிடித்து இணையத்திலே ஏற்றி விடுவேன் என்று மிரட்டும் கீழ்த்தரமானவனாக காட்ட எப்படி தமிழினத் தலைவர் , முத்தமிழ் அறிஞர் , ஐந்தமிழ் அறிஞர் , என்றெல்லாம் அழைக்கப் படுகிற கலைஞருக்கு மனது வந்தது . அப்படிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?இது நியாயமா? தர்மமா? அடுக்குமா?

முன்பு நீதிக்குத் தண்டனை என்ற படத்தில் அரசியல்வாதிகள் செய்யும் கொடூரங்களைக் கலைஞர் காட்சிப் படுத்தியபோது கலைஞர்' தன் வாழ்க்கையைப் பின் நோக்கிப் பாஎத்திருக்கிறார்' என்று அன்றைய மூத்த பத்திரிக்கையாளர்கள் எழுதியது , எதையும் தாங்கும் என் இதயத்திலே இன்னும் நினைவிருக்கிறது

"சமத்துவம் பெண்ணுரிமை பகுத்தறிவு சுயமரியாதை பெரியார் அண்ணா போன்றவை எல்லாம் ஊருக்குதான் நமக்கு இல்லை " என்று எதிர்நாயகன் சொல்லும்போது "தூக்கத்தில் தன்னை மறந்து எழுதிவிட்ட வசனமா இது " என்றும் .......

"பெரியார் அண்ணா போன்றவர்கள் இன்று உயிரோடு இல்லை என்பதற்காக அவர்களின் பெயர் சொல்லி ஏமாற்றி பிழைப்பவர் இவர் "என்று வக்கீல் நாகேந்திரனைப் பார்தது சொல்லும் வசனம் வரும்போது " நிலைக்கண்ணாடி முன்பு உட்கார்ந்து எழுதிய வசனமா இது " என்றும் அரங்கில் குரல்கள் எழுவதை தவிர்த்திட இயலவில்லையே .

நல்ல தமிழ் பேசுபவன் , தமிழ் இலக்கியம் போற்றுபவன் , பெண்ணுரிமை சுயமரியாதை பேசுபவன் , பாரதிதாசன் பாடல் படிப்பவன் அயோக்கியன் என்றால் அப்படிப்பட்டவர்களில் மூத்த அயோக்கியன் யார் என்றும் ஒரு வேளை கலைஞர்வேறு யாரையும் சொல்கிறார் என்றால் கி.வீரமணி மீது அவருக்கு என்ன கோபம்? என்றும் கூட கிண்டல்கள் எழுவதைப் பார்தது நெஞ்சம் குமுறுகிறதே!

திராவிட இயக்கவாதிகளின் உண்மை முகத்தை கலைஞரே படம் பிடித்துக் காட்டிவிட்டார் என்று மற்றோர் எக்காளமிடமாட்டர்களா?


அம்மட்டோ !

ஒரு வெகு சாதாரணமான-- காலம் கடந்த பாணியில் வந்திருக்கும் படத்தில் ஒரு அயோக்கியனை தமிழ் உணர்வாளன் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
ஈழத்துக்கு இழைக்கப் பட்ட துரோகம் கண்டு பொங்கி எழுந்த உண்மையான தமிழ் உணர்வாளர்களைக் கேவலப் படுத்தும் முயற்சியா இது ?

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தும் சூழலில் ஏன் இப்படி சிங்காரித்து மூக்கறுக்கும் ... இல்லையில்லை கழுத்தறுக்கும் முயற்சி ?

புண்பட்டது நெஞ்சம் !

---என்பதை மிகுந்த வேதனையோடும் ஏமாற்றத்தோடும் உள்ளக் குமுறலோடும் கூறி , இந்த அளவில் என் உரையை முடிக்கிறேன் .
நன்றி வணக்கம் !

6 comments:

Anonymous said...

எதிர்நாயகனுக்கு “கருணாநிதி” என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

King Viswa said...

படத்தை முழுவதுமாக பார்த்த மாவீரன் வாழ்க.

King Viswa said...

சார்,
படத்த கூட பொறுத்துக்கலாம், ஆனா படம் பார்த்த பாதிப்பிலே உங்கள் விமர்சன ஸ்டைலும் மாறியது தான் பயமாக இருக்கிறது.

குறிப்பாக அந்த கடைசி பத்தி.

//என்பதை மிகுந்த வேதனையோடும் ஏமாற்றத்தோடும் உள்ளக் குமுறலோடும் கூறி , இந்த அளவில் என் உரையை முடிக்கிறேன் .
நன்றி வணக்கம் !//


முடியல சார்.

உண்மைத்தமிழன் said...

படத்துக்குப் போகலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்தேன்..!

தெளிவுபடுத்திவிட்டீர்கள் அண்ணே..

மிக்க நன்றி..!

manjoorraja said...

அப்பாடா! ஒரு வழியா முழுசா படிச்சிட்டேன்.

ஒற்றைவரியில் என் கருத்து:

சொந்த செலவில் சூன்யம்.

சு.செந்தில் குமரன் said...

நன்றி அனைவருக்கும்

Post a Comment