Sunday, January 24, 2010

# பாலாவுக்கு வந்த பரிதாப (தேசிய) விருது




நான் கடவுள் படத்துக்காக சிறந்த இயக்குனராக பாலா தேர்ந்தெடுக்கப் பட்டபோது சந்தோஷமாக இருந்தது . ஆனால் ரொம்ப சந்தோஷம் ஒன்றும் இல்லை.

காரணம் இது பிதாமகனுக்கே வழங்கப் பட்டிருக்க வேண்டிய கவுரவம்.

எப்படி காவிரித் தண்ணீர் வழியெல்லாம் பாய்ந்து விட்டு கடைமடைப் பகுதிக்கு (அது நெல் விளைச்சலில் சாதனை படைக்கும் பகுதியாக, குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக விளைச்சல் தரும் பகுதியாக இருந்தாலும் கூட ) கடைசியாக வருகிறதோ,

அது போல ''என் நடிப்பின் குருவே சிவாஜி அண்ணாதான். அவரது நடிப்புக்கும் சாதனைக்கும் முன்னால் நானெல்லாம் தூசுதான்" என்று சொன்ன கன்னட ராஜ்குமாருக்கு எல்லாம் தாதா பால் சாகேப் விருதைக் கொடுத்து முடித்து விட்டு ,

அந்த விருதுக்கும் வயதாகி அது தா'த்'தா பால் சாகேப் விருதாக மாறிய பின்னர்

கடை மடைக் கதையாக சிவாஜிக்கு வழங்கினார்கள் 'மட'த் தலைவர்கள்.
மண் தரைஎப்படி கடை மடைக்கு கடைசியாக தண்ணீரை அனுப்புமோ அது போல் மண்டையில் 'மண்' உள்ள நாங்களும் அதே போலதான் நடந்து கொள்வோம். தகுதி திறமை எல்லாம் பார்க்க மாட்டோம் என்று நிரூபித்தார்கள் .

இன்று பாலாவுக்கும் அதே நிலை.

ஆனால் எப்படி இருந்தாலும் பாலிவுட்டுக்கு 13 விருதுகள் கிடைத்திருந்தாலும் விருதுப் பட்டியலில் வழக்கம்போல‌ வங்காள , மலையாளப் படங்களின் ஆதிக்கமும் உள்ளது . காரணம் மத்திய அரசிலும் அதன் காரணமாக விருதுக் குழுவிலும் இவர்கள் செலுத்தும் ஆதிக்கமே.

வங்காளப் படமான அந்தாஹின் நல்ல படமாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதற்காக இத்தனை விருதுகளா என்று நான் கேட்டால் , 'ஏன் , தகுதி இருந்தால் வாங்கக் கூடாதா?' என்று பின்னூட்டம் எழுத நீங்கள் துடித்தால் அது நியாயம்தான். ஆனால் நாயகன் படத்துக்கு இன்னும் சில விருதுகள் முறைப்படி வந்திருக்க வேண்டும் என்று குரல் வந்தபோது "சரிதான்.. ஆனால் எல்லா விருதையும் தமிழுக்கே கொடுத்தால் மற்றவர்களுகுத் தர வேண்டாமா என்று டில்லி அன்று முனகியது நியாயமா என்று யோசித்தல் நலம்.

தமிழில் சிறந்த பிராந்திய மொழிப் படம் வாரணம் ஆயிரம்! . அதற்கான காரணம் ஆயிரம் அல்ல. ஒன்றே ஒன்றுதான் . அதாவது ஒருவரே ஒருவர்தான். கௌதம் வாசுதேவ் 'மேனன்' அதை விட சிறந்த படங்களே தமிழில் இல்லையா என்ன?

சிறந்த குழந்தைகள் படமாக குப்பாச்சிகளு என்ற கன்னடப் படம் விருதளிக்கப் பட்டது . பசங்க முன்னால் அது ஒன்றுமே இல்லை என்கிறார்கள் . தவிர பல இண்டர்நேஷனல் போட்டிகளில் அது பசங்க படத்துடன் மோதி சிதறிப் போன படம்.

'மலையாளப் பட உலகம் இப்போதெல்லாம் மிக மோசமாகப் போய்க் கொண்டுள்ளது . நல்ல படங்களே வருவதில்லை ' என்று சில மலையாளப் பிரமுகர்களே மனம் திறந்து சொல்கின்றனர்.

ஆனாலும் நடுவர்களின் சிறப்பு விருது என்ற ஒரு விருதை ( எப்படி எப்படியெல்லாம் விருது தருகிறார்கள் பாருங்கள் . இது நடுவர்களின் சிறப்பு விருது என்றால் அப்ப மத்தது எல்லாம் சாதா தோசைகளா...? இல்லை அவைஎல்லாம் நடுவர்களின் விருதுகளே இல்லையா?) பயாஸ்கோப் எனற படத்துக்கு 'வாங்கி'க் கொண்டு வந்து விட்டனர். இந்தப் படத்தைத் தயாரித்தது நேஷனல் ஃபிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன். அதில் மலையாளிகளின் ஆதிக்கம் உச்சத்தில் !

நடுவர் விருதுக்கு பயாஸ்கோப்பை விட சிறந்த படமாக தமிழில் வந்த பொக்கிஷத்தையே சொல்ல முடியும்.

இப்படி வருடா வருடம் தீபாவளி வருவது போல பெரிய ஜவுளிக் கடைகளில் இருந்து புது வருடக் காலண்டர் வருவது போல வங்காளிகளுக்கும் மலையாளிகளுக்கும் ரெண்டு விருதும் சுருட்டி ரப்பர் பேண்ட் போட்டு வந்து விடுகிறது .இதனால் நம்ம ஆட்களும் நல்ல சினிமான்னா அது வங்காள , மலையாள சினிமாதான் என்று சில அறிவு ஜீவிக்களூம் கொட்டாவி விடுவது போல அனிச்சையாக சொல்லிக் கொண்டே உள்ளனர். காலம் மாறி விட்டதையே புரிந்து கொள்ளாமல்.

இந்த நிலையில்தான் பாலாவுக்கு கடை மடைத் தண்ணீர் கதையாக தேசிய விருதை ரொம்ப தாமதமாகத் தந்துள்ளனர் .

இலங்கையில் தமிழினத்தை சிங்களர்கள் ராட்சஷ வெறியோடு கருவறுத்துக் கொண்டிருந்த‌ வேளையில் சிங்களப் பெண்ணான பூஜாவை நான் கடவுள் படத்தில் கதா நாயகியாக்கி பேர் வாங்கித் தந்தது ஒரு பக்கம் மனசுக்கு ஒப்பிதமில்லை என்றாலும்....

( பாலாவிடம் பூஜாவை அறிமுகப் படுத்தியது யார் தெரியுமா? மைக் செட் தமிழன் சீமான்! அதற்குமுன்பே சீமான் தனது 'தம்பி' படத்தில் இந்த பூஜாவைத்தான் கதாநாயகியாக்கி தனது தமிழ் இன உணர்வை 'வெளி'ப்படுத்தி இருந்தார். ஏனென்றால் தம்பி படத்தில் பூஜாவை சீமான் கதா நாயகியாகப் போட்டபோதும் பாலாவிடம் அறிமுகப் படுத்தியபோதும் இலங்கையில் சிங்களன் தமிழனைக் கொடுமைப்படுத்தவே இல்லை . உப்பு மூட்டைத் தூக்கி விளையாடிக் கொண்டல்லவா இருந்தான்....! சீமான் ஒரு திடீர்த் தமிழன் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?)

தேசிய விருது பெற்றிருக்கும் பாலாவை வாழ்த்துவோம்!

4 comments:

கோவி.கண்ணன் said...

மலையாளிகளின் ஆதிக்கம் நீங்க சொல்வது சரிதான். பலரும் இது பற்றி அவ்வப்போது பேசுகிறார்கள். ஒரு குழுவாக ஒரு இடத்தில் அமர்ந்துவிட்டால் பிறருக்கு கொடைச்சல் தான் கொடுப்பாங்க போல, அந்த இடத்தில் தமிழன் இருந்தாலும் அப்படித்தான் நடக்கும். சென்ற முறை இந்திய அரசில் ஏகப்பட்ட தமிழக மத்திய அமைச்சர்கள் பிறமாநிலத்துக்காரர்கள் புலம்பினார்கள்

சு.செந்தில் குமரன் said...

செல்லாது செல்லாது
தமிழர்கல் மந்திரி சபையில் அதிக எண்ணிக்கையில் இருந்தால் எல்லாம் மற்ற யாரும் புலம்பத் தேவை இல்லை. 50 அமைச்சர்கள் இருந்தாலும் கட்சி ரீதியாக பிரிந்து கிடப்பார்கள். இன உணர்வோடு எல்லாம் செயல்படமாட்டார்கள். இது கோவி கண்ணனுக்கு (உங்கள் தாய்மொழி தமிழாக இருந்தால்) தெரியாமல் தெரியாமல் இருக்கலாம் . ஆனால் மலையாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் தெரியும்

Krubhakaran said...

http://ilakindriorpayanam.blogspot.com/2010/01/blog-post_25.html
கெளதம்,கெளதம் மேனன், கெளதம் வாசுதேவ் மேனன் என பரினாம வளர்ச்சி பெற்ற ஒரு இயக்குனரின் படைப்பு, அவருக்கு அவரது தந்தையின் மேல் மிகுந்த பிரியம், அவரது மரணத்திற்கு பிறகு அவரது வாழ்கையை திரையில் படமாக்க என்னி அவசரகோலத்தில் சமைத்த அரைவேக்காட்டு படம்(படத்தில் சில நல்ல விஷயங்கள் இருந்தும்). இயக்குனர் இன்னும் ஓர் 5 ஆண்டுகள் தன் தந்தையின் வாழ்கையை மனதில் அசை போட்டு பிறகு திரைப்படமாக எடுத்திருந்தால் மிகவும் அருமையான திரை காவியாமக வந்திருக்கும். நம் தமிழகத்தின் தலை விதி இது தான் சிறந்த படமாம்.

சு.செந்தில் குமரன் said...

உண்மை.நன்றி க்ருபா

Post a Comment